
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
பாடலே ஒரு கவிதைக் களஞ்சியம் தான்!!!அதிலும் நான் தடித்துக் காட்டியுள்ள வரிகளை பாருங்கள்..கண்ணதாசன் ரியலி கிரேட்!!!
விவேக சிந்தாமணியின் பத்தொன்பதாவது பாடலை ஆதாரமாக கொண்டு கண்ணதாசன் இந்த பாடலை படைத்ததாக அவரே கூறி இருக்கிறார்..
அழகிய பூஞ்சோலை. அருகில் சில மரங்கள். பக்கத்திலேயே ஓர் அழகிய பொய்கை. மாலை மயங்கும் நேரம். பூஞ்சோலையைச் சுற்றி வந்தாள், நிலவாய் ஒளிர்ந்து கொண்டிருந்த முகத்தினளான பேரழகுப் பெண் ஒருத்தி.
பூஞ்சோலையில் மிகுதியாகத் தேன் குடித்துவிட்டதால் மயக்கமுற்ற ஒரு கருவண்டு நாவல் மரத்தடியில் அசைவின்றிக் கிடந்தது. பூஞ்சோலையைச் சுற்றி வந்த பேரழகி, ஒரு நல்ல நாவற்பழம் அடிபடாமல் இருக்கிறதென்று எண்ணி மகிழ்வோடு அந்த வண்டைக் கையில் எடுத்துப் பார்க்க முனைந்தாள்.
அவள் கையில் எடுத்ததால் சற்றே விழிப்புற்ற அவ் வண்டு அவள் முகத்தை நிலவு என மயங்கி, ‘இது என்ன, நிலவு இவ்வளவு ஒளி வீசுகிறதே!’ என்று எண்ணமிட்டது; அரைகுறையாக நினைவு பெற்ற நிலையில், தான் தாமரை மலரில் இருப்பதாக உணர்ந்தது.
ஆம்! அப்பேரழகியின் கை, அவ் வண்டிற்குத் தாமரை மலர்போல் இருந்ததாம். திடீரென்று, அந்த வண்டிற்கு நினைவு வந்தது. ‘ இரவு தொடங்கிவிட்டதே, நிலவைப் பார்த்ததும் தாமரை மூடிக்கொள்ளுமே’ என்று எண்ணி அஞ்சிய வண்டு தாமரை மூடுவதற்குள் தப்பிக்க எண்ணிப் பறந்து சென்று விட்டதாம்!
அப்பேரழகிக்கு அதிர்ச்சி! ‘இது என்ன, நாவற்பழம் பறக்குமா?
பறந்தது பழமா, இல்லை வண்டா? என்ன புதுமை இது’ என்று வியப்பில் ஆழ்ந்து விட்டாளாம்!
பத்தொன்பதாவது பாடல் இவ்வாறு வருகிறது,
"தேன்நுகர் வண்டு மதுவினை உண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான்அதைச் சம்புவின் கனி என்று
தடங்கையால் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென்று எண்ணி
மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்?
புதுமையோ இது?எனப் புகன்றாள்."
இதை தான் கவிஞர் கண்ணதாசன்,
"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"
என்று வடித்திருப்பார்...!
சிறுவயதில் எனது தந்தையார் இந்த பாடலை அடிக்கடி முணு முணுத்து பாடுவார்.அதனை கேட்டு கேட்டு எனக்கு இந்தப் பாடல் ஆறு எழு வயதிலேயே பிடித்துவிட்டது..பின்னர் அதன் ஞாபகம் மறந்து,பாடல் இசை மட்டும் முணுமுணுப்பேன்.பாடலை எனது பதினெட்டு வயதில் தான் ஒரு வழியாக தேடிபிடித்தேன்.
கேட்க கேட்க சலிக்காத பாடல்...கண்ணதாசனின் கவித்துவமான வரிகளுக்காகவும்,வேதாவின் இசைக்காகவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்!!!
| நீங்களும் திரும்ப கேளுங்க...உங்களை எங்கேயோ கூட்டிச்செல்லும்!!! |











