Thursday, December 20, 2012

கற்பழிப்புக்கு உண்மையான காரணம் என்ன?..!




தந்தை மகளை வன்புணர்வு செய்வது,சொந்தங்களுக்குள்ளேயே சீரழிப்புகள், சிறுமிகள் மீதான வன்முறைகள் என்று பெண்கள் மீதான வன்முறை எல்லைகடந்து சென்றுகொண்டிருக்கிறது.அதனை சில பெண்ணியவாதிகள் பயன்படுத்திக்கொண்டு, ஒட்டுமொத்த ஆண் சமுதாயமே வக்கிரம் கொண்டவர்கள், அடக்குமுறை கொண்டவர்கள் என்று தங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளை அவிழ்த்துவிடுகின்றனர். வெறி கொண்ட காமுகர்களை மற்றைய ஆண்களால் அடக்க முடியவில்லை,இவர்களும் அவர்களுக்கு நிகரே என்று சாதாரண பெண்கள் மனதில் குழப்பத்தை உண்டாக்கி சமுதாய கட்டமைப்பில் சில சமயங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றனர் இந்த பெண்ணியவாதிகள்.சரி அவர்களை பற்றி பின்னால் ஒரு பதிவில் பார்ப்போம்.

இருபத்தி மூன்று வயதான கல்லூரி மாணவி ஒருவரை இந்திய தலைநகர் டெல்லியில் ஓடிக்கொண்டிருந்த பேரூந்தில் பலர் ஒன்றுசேர்ந்து கற்பழித்து,தலையில் இரும்பு கம்பியால் தாக்கி,உடல் முழுவதும் காயங்களுடன் விட்டு சென்றிருக்கின்றனர் சில காமுகர்கள்.பலத்த சர்ச்சையை தோற்றுவித்துக்கொண்டு,இந்திய பாராளுமன்றம் வரை பிரச்சனை விஸ்வரூபமெடுத்திருக்கிறது.உயிருக்கு போராடும் குறித்த மாணவியை சோனியா காந்தி வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டிருக்கிறார்.இது டெல்லியில் நடந்தமையால் இந்தளவு தாக்கம் செலுத்தியிருக்கிறது.இதுவே வேறு சிறு மாநிலங்களாக இருந்திருந்தால் வெறும் பத்திரிகை செய்தியுடன் முடிவடைந்திருக்கும்.இந்தியா எங்கு செல்கிறது,வல்லரசாகுமா என்று ஆளுக்காள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க,சத்தமே இல்லாமல் இந்தியா இங்கு தான் சென்றுகொண்டிருக்கிறது என்று "மொபைல் காங் ரேப்" மூலம் காட்டியிருக்கின்றனர் சில காமுகர்கள்!


இந்தியன் எக்ஸ்போ நெட் (Indianexponet) பத்திரிகையை நிறுவியோரில் ஒருவரும், இந்திய சமூக,அரசியல் விடயங்களை  எழுதிவருபவருமான இஷான் மோகன் (Ishaan  Mohan ), இந்தியாவில் அதிகரித்துவரும் கற்பழிப்புகளுக்கான காரணங்களாக பத்து விடயங்களை தனது பத்திரிகையில் எழுதியிருந்தார்.அதனை தமிழாக்கி வெளியிடுகிறேன்,காரணம் அந்த பத்து காரணங்களையும் பார்க்கும் போது நிச்சயம் அவை உங்களுக்கு எதோ ஒருவகையில் மனதை உறுத்தக்கூடும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு
உயர் வாழ்க்கைத்தரமுள்ள குடும்பங்கள்,சாதாரண,கீழ்நிலை வாழ்க்கைத்தரம் கொண்ட குடும்பங்கள் என்று பல பொருளாதார வேறுபாடு கொண்ட குடும்பங்கள் ஒன்று சேர்ந்த சமூகமாக தான் எமது சமூகம் இருந்துகொண்டிருக்கிறது.அடைய முடியா எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்ள கற்பழிப்பு ஒரு வழியாக பலருக்கு தென்படுகிறது.ஒரு தரப்பு மறு தரப்பை தாக்க/அடைய பெண்கள் தான் இலகுவான இலக்காக மாறிவிடுகின்றனர்.

ஒருதடவை ரேப் செய்பவன் அத்துடன் நிறுத்துவதில்லை-பிடிபடாதவரையில்!

ஒருவன் ஒருதடவை கற்பழிப்பவன் அத்துடன் நின்றுவிடாமல் இரண்டாவது,மூன்றாவது என்று தனது சாதனை பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறான்.கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்களில் பலர் அதுபற்றி முறைப்பாடு செய்வதிலோ,குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலோ முனைப்பு காட்டுவதில்லை காரணம்,தமது பெயர் அடிபடும் வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடும் என்கின்ற பயத்தினால்.பெரும்பாலான வழக்குகள் உடனே முடிவடைந்துவிடுவதில்லை,காலம் காலமாக இழுபடும்.இப்படியான காரணங்களால் ஒதுங்கும் பெண்கள்,கற்பழிப்பவன் மேலும் தனது கைங்கரியத்தை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.

சில சமயங்களில் இப்படி "பொது"வுக்கு பயந்த,குடும்ப மானம் மரியாதை என்று பயப்பிடும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், இந்த காமுகர்களின் விருப்பத்தெரிவாக அமைந்துவிடுகின்றனர்.எப்படியோ தான் தப்பிவிடுவேன் என்று தெரிந்துகொண்டே காரியத்தில் இறங்குகிறான் அவன்.


       

பாலியல் குற்றம் புரிவோரை நாமே அங்கீகரிக்கின்றோம்!
கேவலமான விடயம் ஆனால் அதுதான் உண்மை..ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டால்,அவள் தன்னால் கெட்டவள்-தூய்மையற்றவள் என்கின்ற எண்ணம்,மனப்பாங்கு தான் இங்கு பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது.அவள் அனைவராலும் ஒதுக்கப்படுகிறாள்.சமூகத்தால்,உறவினர்களால்,கூட இருப்போரால் ஏன் பெற்றோரால் கூட தமது மகள் தப்பிழைத்தவள் என்ற ரீதியில் தான் அவள் நோக்கப்படுகிறாள்.எந்த மாப்பிள்ளை வீடுகளும் அப்படியான ஒரு பெண்ணை தமது மருமகளாகக ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்.

காம களியாட்டங்கள்   
பெரும்பாலான ஆண்களுக்கு பெண்கள் தொடர்பில் பல்வேறு "காம களியாட்ட"எண்ணங்கள் மனதில் உண்டு.இன்றைய இளைஞர்கள் சமந்தா மீது கிறுக்கு கொண்டிருப்பதும்,முன்னோர் குஷ்புக்கு கோயில் கட்டியதும் இந்த களியாட்டங்களில் ஒரு வகையே!இது ஆரோக்கியமானது தான் ஆனால்,ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்தே அது அவருடன்,அவருக்கு சொந்தமானவருடன் முடிவடைகிறதாஅல்லது  மற்றைய பெண்களை வன்புணர்வு செய்யும் நிலை வரை கொண்டு சென்றுவிடுகிறதா என்பது அமைகிறது.

ஒருவன் பெண்கள் மீது எத்தகைய மதிப்பு கொண்டிருக்கிறான் என்பது அவனது அப்பா அவன் அம்மா மீது கொண்டிருக்கும் மதிப்பு,மற்றைய பெண்கள் மீது பொதுவாக கொண்டிருக்கும் மதிப்பு என்று பல காரணங்கள் தீர்மானிக்கின்றன.இன்றும் உலகில் பெண்கள் என்றாலே அவர்கள் ஆண்களின் காமத்தேவைக்கு பயனாகும் ஒரு "உபகரணம்" என்கின்ற மனப்பாங்கு பல ஆண்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அனைத்து இடங்களிலும் போலீஸ் நிற்கமுடியாது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல இத்தகைய பாலியல் வன்புணர்வு செய்வோராக திருந்தாவிட்டால் கற்பழிப்பை தடுக்க முடியாது என்பதே உண்மை. கற்பழிப்பை தடுக்க நாட்டின் ஒவ்வொரு சந்து பொந்துகளிலும் போலீஸ் பாதுகாப்பு வைக்க முடியாது.எமது நாட்டின் மக்களில் ஒரு குறித்த வீதமானோர் கற்பழிப்போராக இருக்கின்றனர்.பலருக்கு சில பயங்கள்,தடைகள் காரணமாக முயற்ச்சியில் இறங்காமல் இருக்க,சிலர் மட்டும் துணிந்து இறங்கிவிடுகின்றனர்.

நடத்தை கெட்ட பெண்களே கற்பழிக்கப்படுகின்றனர். 

இந்திய போலீசில் கூட கற்பழிப்பு புகார் கொடுக்க எந்த பெண்ணாவது சென்றால், "நீ நடத்தை கெட்டவள்,அதனால் தான் இப்படி நடந்தது" என்று தான் போலீசாரே கூறுமளவுக்கு இந்திய கலாச்சாரம்,மெண்டாலிடி அனைவரிடமும் ஊறிப்போய் இருக்கிறது.போலீசார் கூட அதே சமூகத்திலிருந்து, அதாவது வாய்ப்பு கிடைக்காத-வெறுப்படைந்த,கீழ்த்தரமான சிந்தனை கொண்ட சமூகத்திலிருந்தே வந்திருப்பதால் அவர்களையும் திருத்த முடியாது.அவர்களிடமிருந்து நல்ல சிந்தனைகளையோ, முற்போக்கான எண்ணங்களையோ எதிர்பார்க்க முடியாது அதே சமயம் அப்படி எண்ணம் கொண்டவர்களை போலீஸ் வேலைக்கு சேர்த்துக்கொள்வது என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராதது.


               

அம்மாக்களால் முடியும்!
சமூகத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவர "அம்மாக்களால்"முடியும்.தனது மகள் எப்படி உடையணிகிறாள், ஜீன்ஸ் போடுகிறாளா,போடும் சட்டை உடலில் எங்கு தங்குகிறது எங்கு விலகுகிறது என்று பார்த்து திருத்தும் அம்மாக்கள் தமது ஆண் பிள்ளைகளையும் வளர்ப்பிலேயே திருத்த முடியும்,சீரிய எண்ணங்களை சிறுவயதிலிருந்தே அவர் மனங்களில் விதைக்க முடியும்.அத்தகைய ஆரம்பகால விதைப்பு தான் எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக காரணமாகிறது. ஒருத்தி விபசாரியாக இருந்தாலும் கூட அடிப்படையில் அவள் ஒரு பெண் தான் என்கின்ற எண்ணம் ஆண் பிள்ளைகளின் மனதில் வரவேண்டும்;அதற்க்கு அம்மாக்கள் உதவவேண்டும்-இது எதிர்கால அம்மாக்களுக்கும் பொருந்தும்.

பாலியல் கல்வி 
இன்றைய பெரும்பாலான இளைஞர் யுவதிகள், பாடசாலையில் கற்றுத்தரும் மேலோட்டமான பாலியல் கல்வியில் தெரிந்துகொள்ளும் விடயங்களை விட(சிலருக்கே அந்த வாய்ப்பும்!) போர்னோ படங்கள் பார்ப்பதன் மூலம் அது சம்பந்தமாக தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டுள்ளனர்.ஆனால் பழமைவாத சிந்தனைகளோடு இருக்கும் சில ஊடகங்களும்,மக்களும் இத்தகைய பாலியல் கல்வி அவசியமற்றது என்று கூக்குரலிட்டு இந்த சமநிலையை குழப்பிவிடுகின்றனர்.சிறுவர்களுக்கு மட்டுமல்லாது வயது வந்தோருக்கும் இன்று பாலியல் கல்வி அவசியமாகிறது.ஆனால் பாலியல் என்ற வார்த்தையை கண்டாலே துடித்து ஒதுங்கும் பலர் எங்களை சுற்றி இருந்துகொண்டு தான் இருக்கின்றனர்.

ஆங்கில-இந்தி சிந்தனை வேறுபாடு
ஆங்கில மொழியில் படித்தவர்கள் சமுதாயத்தில் செக்ஸ் என்பது எந்தளவு ஆரோக்கியமானது,எந்தளவு பொதுவானது என்பது பற்றிய புரிதல் தேவையான அளவு வந்துவிட்டது.ஆனால் மறுபக்கம் இந்தி பேசும் சமூகத்தில்(இது மற்றைய அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்) அத்தகைய புரிதல்கள் இன்னமும் வந்துவிடாமல் "செக்ஸ் என்பது ஒரு கெட்ட சமாசாரம்" என்கின்ற புரிதலுடன் தான் பெரும்பாலானோர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த இந்தி -ஆங்கில மொழி சமூகத்துக்கிடையிலான இடைவெளி வெகு சீக்கிரம் குறைக்கப்பட்டு பாலம் அமையப்பெறல் வேண்டும்.அல்லது தொடரும் காலங்களிலும் பெண்கள் மீது தான் முழுமையான குற்றச்சாட்டு இடம்பெற்றுக்கொண்டிருக்கப்போகிறது.

மனவுறுதி கொண்ட பெண்கள் வேண்டும் 
பெண்கள் என்றால் மென்மையானவர்கள், எதையுமே தீரமாக எதிர்கொள்ள தெரியாதவர்கள் என்கின்ற எண்ணத்தை மாற்றி,பெண்கள் எதையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டும்.அவர்கள் மீது குடும்ப பொறுப்பு என்கின்ற பெரிய பாரத்தை மட்டும் செலுத்திவிடாது இது போன்ற விடயங்களில் ஒரு தெளிவான மனப்பாங்கை வளர்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.எந்த சமூகத்திலும் கற்பழிப்பு இருக்கின்றது ஆனால் எங்கள் சமூகத்தில் தான் கற்பழிக்கப்பட்ட பெண் தப்பானவளாக,தூய்மையில்லாதவர்களாக கருதப்படும் மனப்பாங்கு இருக்கிறது..

மனதில் தூய்மையாக,எண்ணங்களில் சுத்தமான மனிதர்களை மதியுங்கள்-உடல் ரீதியாக பார்க்காமல்!

--------------------------------------



மருத்துவ கல்லூரி மாணவி தான் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்.இரவு படம் பார்த்துவிட்டு பதினோரு மணிக்கு பஸ்ஸில் வரும்போது தான் இது நடந்திருக்கிறது என்கிறார்கள்.சாமம் பன்னிரண்டு மணிக்கு சுதந்திரமாய் பெண்கள் நகைகளோடு(!) நடமாடும் காலம் இன்னமும் வந்துவிடவில்லை என்பதை படித்த பெண்கள் அறியாதவர்களா என்ன! எத்தகைய கல்விமுறைகளும்,சட்டதிட்டங்களும் காமுக மிருகங்களை காமம் வெறிக்கேறிய தருணங்களில் கட்டுப்படுத்தி விடுவப்போவதில்லை.அதை உணர்ந்து தங்களுக்கேற்ற பாதுகாப்பில் பெண்களும் கொஞ்சம் அவதானமாய் இருப்பது அவசியம்.   
குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று தான் இந்த செய்தியை கேட்கும் எந்த மனமும் துடிக்கும்.ஆனால் பாலியல் வறட்சியை உருவாக்கி விடுவதும் இதே மனங்கள் தான் இதே சமூகம் தான்.திருமண வயதை பிந்திய இருபதுகளாகவும்,முப்பதுகள்,நாற்பதுகளாகவும் கொண்ட ஆண்களில் பெரும்பாலானோர் பாலியல் வறட்சியால் விரக்தியடையும் நிலைமை கானப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.தூக்கிலிடவேண்டும் என்று கூறும் மக்கள் தான் பாலியல் கல்வி வேண்டாம் என்கின்றனர் -விபசாரத்தை முற்றாக ஒழிப்போம் என்கின்றனர். பழமைவாத எண்ணங்களிலிருந்து எப்போது அனைவரும் வெளியேறுகின்றனரோ, அன்று தான் ஒரு விடிவு..! அதற்கு பின்னர் தூக்கிலிடுவோம் !!

குறிப்பு:கற்பழிப்புக்கு வன்புணர்வு என்றும் ஒரு நாகரிகமான பதம் உள்ளது.நான் கற்பழிப்பு என்பதை பாவித்த காரணம்,வன்புணர்வு எனும்போது பெரும்பாலானோர் மனதில் கற்பழிப்பு எனும் சொல் ஏற்படுத்தும் தாக்கத்தை இது ஏற்படுத்துவதில்லை.

இது பற்றி மேலும் பல தகவல்களை திரட்டி எழுதுமாறு நண்பர்கள் சிலர் கேட்டிருந்தனர்.ஆனால் இந்த பதிவு நீண்டு செல்வதை நான் விரும்பவில்லை.வாசிப்போரும் (ஒரு சிலரை தவிர)விரும்பமாட்டார்கள் என்று தெரியும்.
  

Post Comment

Sunday, December 16, 2012

சமந்தாவின் "நீதானே என் பொன்வசந்தம்"..!

           


எனக்கொரு தயாரிப்பாளர் கிடைத்து ஒரு இயக்குனர் ஆகியிருந்தால்....என்று ஆரம்பித்து எத்தனையோ காதல் படங்கள் வெள்ளிவிழா காண்பது போல கனவுகள் கண்டிருக்கிறேன்.ஒரு இரண்டரை மணிநேரம் ரசிகர்களை சலிக்காமல் தியேட்டர் இருக்கையில் கட்டிப்போடுவது என்ன அவ்வளவு பெரிய விடயமா என்று எனக்கு மட்டுமல்ல பலருக்கு இவ்வாறான சிந்தனை இருந்திருக்க கூடும்.ஆமாம் அது மிக கடினமான பணி தான் என்பதை கெளதம் மேனன் நிரூபித்திருக்கிறார்.மின்னலே,வாரணம் ஆயிரம்,விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற அழகிய காதல் கதைகளை தந்த கௌதமின் மற்றுமொரு காதல் படைப்பு தான் நீதானே என் பொன்வசந்தம்!

சிறு வயதிலேயே ஒன்றாக பழகிவரும் ஜீவா,சமந்தா இருவர்களுக்கிடையிலும் அவர்களது இளமை வாழ்வின் ஒவ்வொரு காலப்பகுதியில் ஏற்படும் சந்திப்புகள்-பிரிவுகள்,காதல்,ஏக்கம்,துன்ப இன்பங்கள்,ஈகோக்கள் மற்றும் விட்டுக்கொடுப்புகள் பற்றியது தான் படத்தின் கதை.காதலர்கள் தமக்கிடையில் வளர்த்துக்கொள்ளும் ஈகோக்கள்,சரியான புரிந்துணர்வு இல்லாமை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சொல்ல முனைந்திருக்கிறார் கெளதம்.

படத்தின் மைனஸ்கள்

1.மெதுவான-நீண்ட இழுவை காட்சிகள் 
படத்தின் முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் பார்ப்போரை சீக்கிரமாக முடித்துவிடு,அல்லது போவர்ட்(Forward) பண்ணி விடு என்று முனக வைத்திருந்தது.அந்தளவுக்கு இழுவையாக இருந்தன.கவுதம் படங்கள் என்றாலே வசனங்கள் மிக மெல்லிய குரலில் தான் நடிகர்களிடமிருந்து வெளிப்படும்.

முதலே ஊகிக்க வைக்க முடிந்த காட்சிகள்..இடைவேளை வரும் காட்சியில் சரி அடுத்து இடைவேளை தான் என்று காட்சி தொடங்கிய போதே தெரிந்திருக்கும்.ஆனால் அதையே சில நிமிடங்களுக்கு இழுத்திருப்பார்.இப்படியான காட்சிகள் பல படம் முழுவதும் கொட்டாவி விட வைத்தது.கெளதம் படங்கள் படத்துடன் ஓட்டவைத்துவிடுவன.அந்த மாஜிக் இப்படத்தில் பெரும்பாலான இடங்களில் தவறவிடப்பட்டிருந்தது.

2.இளையராஜா இசை 
கௌதமின் பெரிய பலமே ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசை என்றால் மறுக்க முடியாது.கௌதமின் காதல் காட்சிகளுடன் ஒன்றுசேர்ந்து இசையால் மயக்கிவிடுவார் ஹாரிஸ்.ஆனால் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் கெளதம் தனக்கு தானே எடுத்துக்கொண்ட ரிஸ்க் தான் இளையராஜாவை ஒப்பந்தம் செய்தது.இளையராஜாவின் பீரியட் முடிவடைந்துவிட்டது என்று தெரிந்தும் எதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அவருடன் சேர்ந்துகொண்டார் கெளதம்.விளைவு படத்தில் தெளிவாக தெரிந்தது. 

சற்றே சில காட்சிகளில் கெளதம் சறுக்கும்போது ஹாரிஸ் தனது பின்னணி இசையால் அந்த சறுக்கல்களை மூடி மறைத்துவிடுவார்.vtv'யில் ரஹ்மானும்,மின்னலே,வாரணம் ஆயிரத்தில் ஹாரிஸும் என்ன செய்தார்கள் என்று சொல்ல தேவையில்லை. ஆனால் இளையராஜா அந்த சறுக்கல்களை ஊதிப் பெருதாக்கி காட்டியிருக்கிறார்.படத்தின் பெரும்பாலான இடங்களில் பாடல்களோ,பின்னணி இசையோ கவரவே இல்லை.படத்தின் "மிகப்பெரிய மைனஸ்" இசை தான் என்று அடித்து கூறலாம்.அதுவும் படத்தின் முக்கிய காட்சிகளில் இளையராஜா பாடும் இரைச்சல்கள் "ஐயோ வேண்டாம்"ராகம்.

இரண்டாம் பாதியில் பாடலுக்கு படமா இல்லை படத்துக்கு பாடலா எனுமளவுக்கு பாடல்கள் வந்தவண்ணம் இருந்தன.ஏலவே பெரிதாக கவராத பாடல்கள் படத்தில் தொடர்ந்து வரும்போது ஏற்படும் அவஸ்தை அப்பப்பா..பெரும்பாலானோர் படம்பார்க்க வந்த போது தான் முதன்முதலாக பல பாடல்களை கேட்டிருந்தனர்.இது கெளதம் படங்களில் இதுவே முதன்முறையாக இருந்திருக்கும்!

3.சந்தானம்-நகைச்சுவை 
சந்தானம் வந்த காட்சிகள் சிறு கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது உண்மை தான்.ஆனால் முழுக்க முழுக்க காதல் படம் என்று முடிவாகிவிட்ட பின்னர்  செருகப்பட்ட நகைச்சுவைகள் அவசியம் தானா என்று கெளதம் ஜோசித்திருக்கலாம்.காரணம் காதல் காட்சிகள்,காதல் வசனங்கள் பார்ப்போர் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களை,கூடவே இருந்துகொண்டு சந்தானம் கொடுக்கும் கவுண்டர் காமெடிகள் குலைத்துவிடுகின்றன.

சந்தானத்துக்கென்று தனி காமெடி ட்ராக் வேறு.விண்ணைத்தாண்டி வருவாயாவில் சில காட்சிகளை உல்ட்டா பண்ணி எடுக்கப்பட்டிருந்தது.இப்படியான சந்தானத்தின் சில காட்சிகளையும்,வேறு சில மொக்கை சீன்களையும் கத்தரித்து படத்தை ட்ரிம் ஆக்கியிருந்தால் படம் பார்ப்போரை கொட்டாவி விடவைத்திருக்காது.


படத்தின் ப்ளஸ்கள் 

1. சமந்தா 
எங்கே சமந்தா பற்றி காணவில்லை என்போருக்கு! படம் முழுக்க சமந்தா தான்.அல்லது சமந்தாவை முன்னிலைப்படுத்தியே படம் பண்ணியிருக்கிறார் கெளதம் என்றும் கூறலாம்.அழகோ அழகு அப்படி ஒரு அழகு.தராசின் இருபக்கமும் சமனாக வீற்றிருந்த காஜல்-சமந்தா போட்டியில் சமந்தா வெற்றிபெற்றுவிடுகிறார்.

ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா "ஜெஸ்சி"அளவுக்கு பலரை கவர்ந்திருக்காது என்பது உண்மை;காரணம் சமந்தாவின் பாத்திரம் அப்படி.ஜீவாவுக்காக ஏங்கும் ஆனால் ஈகோ கொண்ட பாத்திரம்.இதே ஜீவா சமந்தாவுக்கு ஏங்கும் வகையிலும்,சமந்தா கண்டுக்காத மாதிரியும் படம் வந்திருந்தால் சமந்தா நிச்சயம் ஜெஸ்சியை தாண்டி மனங்களில் இடம்பிடித்திருப்பாள். 

2. படத்தின் இறுதி ஒருமணிநேரம் 
எனக்கு படத்தின் இரண்டாம் பாதி பிடித்திருந்தது.அதிலும் இறுதி ஒரு மணிநேரம் ஜீவா,சமந்தாவுடன் ஒன்றிவிட்டேன்.அதுவும் இறுதி அரை மணிநேரம் மிக  அழுகையை தவிர்க்க போராடினேன் என்னுமளவுக்கு கவர்ந்திருந்தது. காதலை சொல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் தேடிவரும் துணையும்,அதனை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லவிடாமல் தடுக்கும் ஈகோவும் மாறி மாறி வந்து உணர்ச்சிவெள்ளமாக்கி விட்டிருந்தது.

அதுவும் அடுத்தநாள் காலை திருமணத்தை வைத்துக்கொண்டு முதல்நாள் இரவு சமந்தா ஜீவா இருவரும் தமது காதல் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கியமான இடங்களை போய் பார்க்கும் சந்தர்ப்பங்களில் "அட நாய்களே யாராச்சும் ஒருவராவது ஈகோவை விட்டு மனசை திறந்து பேசி தொலைங்கடா" என்று ஏங்க வைத்தது.
-------------------------------------
கெளதம் மேனன் படங்களுக்கு எப்பவுமே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது.நடுநிசி நாய்கள் வாங்கிக்கட்டியதாலும், விண்ணைத்தாண்டி வருவாயா'க்கு அடுத்து வரும் காதல் படம் என்பதாலும் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.காபி ஷாப்'பில் காபி சாப்பிடும் ஜீவா-சமந்தா படங்களை பலர் தத்தமது பேஸ்புக் ப்ரோபைல் போட்டோவாக்கிவிட்டிருக்க மறுபக்கம் சமந்தா சமந்தா என்று பையன்கள் ஜொள்ளுவிட்டுக்கொண்டு இருந்தார்கள்.பெண்களில் பலருக்கு ஜீவா பிடித்த நாயகனாகி இருந்தார்.ரஹ்மான்-ராஜா ரசிகர்கள் மீண்டும் ஒருதடவை முட்டிக்கொள்ள பாடல்கள் சந்தர்ப்பம் கொடுத்திருந்தது என அனைத்து தரப்பும் இப்படத்தை எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் நடந்தது?"நீதானே என் பொன்வசந்தம் " படு மொக்கை படமாகவோ அல்லது சுப்பர் ஹிட் காதல் படமாகவோ வந்திருக்க வேண்டியது.ஆனால் கெளதம் இரண்டுக்கும் இடையில் கொண்டுவந்து முடித்திருக்கிறார்.முதல் பாதி போன்றே இரண்டாம் பாதியும் அமைந்திருந்தால் படம் படு மொக்கையாகவும்,இரண்டாம் பாதி போன்று முதல் பாதி அமைந்திருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆகவும் அடித்திருக்க வாய்ப்பிருந்தது.. தவறவிட்டுவிட்டார் கெளதம் மேனன்.படம் படு மொக்கையாக வந்திருந்தால் கூட கவலை வந்திருக்காது,இப்படி முடிந்துவிட்டதே நடுவில் என்று தான் கவலை. 

சமந்தா அழுது புலம்பி வெளிக்காட்டிய கவலைகளை அழாமல் வெளிக்கொணர்வதில் ஒரு ஆணாக வெற்றி பெற்றிருக்கிறார் ஜீவா. சமந்தாவுக்கும் நடிப்பதற்கு ஸ்கோப் இருந்தது படத்தில்.படம் முழுவதுமே இவர்களை சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறது.அவர்களை தவிர என்றால் சந்தானமும்,சந்தானத்துக்கு ஜோடியாக வரும் பெண் கேரக்டர் தான் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தது.

ஹாரிஸ்/ரஹ்மான் இருந்திருந்தால் அவர்கள் படத்தை நிச்சயம் இதைவிட ஒரு உயரத்துக்கு கொண்டு சென்றிருப்பார்கள் என்று நிச்சயமாக கூறலாம்.அத்துடன் கௌதமும் டப்பா காலி போல தெரிகிறது.மீண்டும் மீண்டும் பழைய படங்களை ஞாபகப்படுத்தும் காட்சிகள்.சாய்ந்து சாய்ந்து, என்னோடு வாவா மற்றும் இடையிடையே ஒலிக்கும் நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன.

அங்காங்கே சில முத்த காட்சிகளும் உண்டு ஆங்கில பட சிச்சுவேசனில்..!

இது படத்தை பற்றிய "எனது"பார்வை மட்டுமே.எனக்கு பிடித்த விடயங்கள் பலருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.பிடிக்காத விடயங்கள் பிடித்து போயிருக்கலாம்.சிலருக்கு இரண்டாம் பாதி பிடிக்கவில்லை ஆனால் எனக்கு நன்றாக பிடித்திருந்தது.


கட்டாயம் பாருங்கள் என்று சொல்வதை விட ஒருதடவை பார்க்கலாம் என்று சொல்லலாம்.காதல் பீலிங்கில் இருப்பவர்கள்,காதலிக்க இருப்பவர்கள், எப்பவாச்சும் ஒரு உறவுக்குள் நுழைய இருப்பவர்கள் "கட்டாயமாக" பரிந்துரைக்கிறேன். படம் படு குப்பை என்கின்ற ரீதியில் விமர்சனங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.முழுதாக பார்க்காமல் விட்டுவிடலாம் என்று மறுத்துவிட கூடிய படமல்ல இது.

கெளதம் இனிமேலும் ராஜாவை தெரிவுசெய்வார் என்று தோன்றவே இல்லை.அத்துடன் மற்றைய இயக்குனர்களும் இதனை முன்னுதாரணமாக கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.கெளதம் மேனன் அடுத்த படைப்பையாவது சிறப்பாக கொடுப்பார் என நம்புவோம்.மறுபடி சூர்யா,ஹாரிஸை நோக்கி தான் போகவேண்டும்.

படத்துக்கு எனது மார்க் - 60


Post Comment

Sunday, December 9, 2012

ஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்?



வெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய வரும்.ஏன் எதற்கு என்று காரணமின்றியே பொதுவிலிருந்து ஒழித்து மறைக்கப்பட்ட விடயமாகிவிட்டன முன்னைய காலங்களில் காதலும்;இப்போ காமமும்.அதற்க்கு அடுத்ததாக சமூகத்தில் எம்மை சுற்றி பெரியளவில் பரவிவரும் "வருத்தம்"கூட இதே வகையறா தான்.ஆம் அது ஒருவகையான வருத்தம் என்று தான் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானோர் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்.

புரியவில்லையா எதனை பற்றி கூறிக்கொண்டிருக்கிறேன் என்று? அண்மையில் கொழும்பு,பம்பலபிட்டி கடல்கரை ஓரமாய் ஒரு கார் ஒன்றினுள் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு இறந்துகிடந்தார்.கொலை தான்.,ஆனால் பணத்துக்காகவா இல்லை வேறு ஏதும் வெட்டுக்குத்தா  கோணத்தில் அனைவரும் ஜோசித்துக்கொண்டிருந்த சமயம் தான் அந்த கொலைக்கான காரணம் தெரியவந்தது,அதுவே கடந்த சில நாட்களாக "டாக் ஒப் த டவுன்"ஆக மாறி இருந்தது.ஆமாங்க கொலைக்கான காரணம் ஆண்-ஆண் காதல்/தொடர்பு/உறவு தான் என்று தெரிந்த கணத்தில், அனைவரும் உண்மையில் அதிர்ந்துதான் போய்விட்டார்கள்.

ஒரு வர்த்தகரின் நண்பருக்கும், வர்த்தகரின் மகனுக்குமிடையிலான ஹோமோ உறவு பற்றி குறித்த வர்த்தகருக்கு தெரிய வந்து,அதனை நிறுத்துமாறு நண்பரை எச்சரித்திருக்கிறார் வர்த்தகர்.பெற்றோர் சொல்லி எத்தனை பிள்ளைகள் காதலை விட்டிருக்கின்றனர்?அது போல தான் இந்த உறவும் அவர்களால் கைவிட முடியாத உறவாகி தொடர,வேறு வழி தெரியாத குறிப்பிட்ட வர்த்தகர் கடல்கரை ஓரமாய் ஒரு காருக்குள் தனது நண்பரை கழுத்துவெட்டி கொலை செய்திருக்கின்றார்.போலீஸ் எப்படியோ மோப்பம் பிடித்து கொலையாளியை கைதுசெய்திருக்கிறது. 

                

ஒருசில மாதங்களுக்கு முன்னராக பேஸ்புக்கில் நான் கொழும்பில் ஒரு இடத்தில் இரு ஆண்கள் முத்தமிட்டுக்கொண்டிருப்பதை பார்த்தேன் என்று ஒரு நிலைத்தகவலை பகிர்ந்த போது,"இவன் சும்மா பேமசுக்காக கதை விடுறான்"என்கின்ற ரீதியில் தான் சிலர் பேசிக்கொண்டார்கள்,ஏன் என்னிடமே நீ பொய் தானே சொல்கிறார் என்று தான் கேட்டார்களே தவிர அதனை ஒரு விளிப்புணர்வாய் எத்தனை பேர் கருதியிருப்பார்கள் என்றால் மிக சொற்பமாகவே இருந்திருக்கும்.

இதைப்பற்றி மேலும் எனது நண்பர்களிடம் கிலாகித்த சமயத்தில் தெரிந்துகொண்டது என்னவெனில்,இப்படியான "ஓரினச்செயற்க்கையாளர்கள்" வருடாந்தம் ஒரு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை தலைநகரில் நடாத்தி வருகிறார்கள்,அதுவும் ஒவ்வொரு அதனில் வருடமும் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து செல்கிறது என்பது தான்.இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவிலும் கொல்கத்தா,மும்பை,சென்னை என்று இத்தகைய பேரணிகள் கூட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. 



கடந்தவாரம் பொரளை செல்லும் பேரூந்தில் ஒருத்தனை நையப்புடைத்து பேரூந்தைவிட்டு வெளியே தள்ளிவிட்டான் ஒருத்தன்.என்ன காரணம் என்று கேட்டதற்கு பக்கத்தில் நின்ற ஒரு பெண்ணின் கூந்தலை முகர்ந்தானாம்.பிழை தான்;சரி என்று சொல்லவில்லை,ஆனால் இதைவிட பெரிய கொடுமைகள் வெளியில் தெரியாமலே நடந்தேறுகின்றன. பேரூந்துகளில் சில ஆண்களின் பெண்களை நோக்கி நீட்டிய "பீரங்கி"கள், பெண்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் ஆண்களின் பக்கம் கூட திரும்புகின்றனவோ என்கின்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாகவே தொடர்கிறது.

இதனாலேயே நான் சில சமயங்களில் பேரூந்தில் இருந்து வருவதை தவிர்த்து நின்ற நிலையில் பிரயாணம் செய்கின்றேன்.நான் மட்டுமல்ல பல நண்பர்கள் இதனை "அனுபவித்திருப்பார்கள்"உணர்ந்திருப்பார்கள்.இருக்கையில் இருக்கும் போது எமது தோள்களை இந்த பீரங்கிகள் எப்போதும் குறிவைக்க தவறுவதில்லை. இவர்கள் காமுகர்களா;அப்படியானால் எங்களுக்கே இப்படி என்றால் பெண்களின் நிலை? அல்லது இவர்கள் அவர்களா?ஓரின பால்கவர்ச்சி கொண்டவர்களா?

இந்த குழப்பத்துக்கு விடை கண்டுகொள்வது மிக கடினமானது.காமுகனாய் இருந்தால் அந்த இடத்திலேயே அவனை நாறடித்து விடலாம்.அதுஒன்றும் பெரியவிடயம் இல்லை.ஆனால் இவர்கள் அவர்களாக இருந்தால்?அதே தண்டனை இவர்களுக்கும் பொருந்துமா?அவ்வாறு செய்வதால் அவர்களின் உணர்சிகளை கேவலப்படுத்தி விடுவோமா என்கின்ற குழப்பம் பெரும்பாலான சமயங்களில் எனது வாயையும் கையையும் கட்டிப்போட்டுவிடுகின்றன.



சமூகத்தால் அடக்கப்படும் சில உணர்ச்சிகள் தான் ஒருசமயத்தில் போராட்டமாய் வெடிக்கின்றன.அது இவர்களுக்கும் பொருந்தும் தானே?அனைத்து தரப்பினர்களாலும் புரிந்துகொள்ளப்படாத அவர்களின் விருப்புவெறுப்புகள் ஒருகட்டத்தில் அவர்களை பாதித்து அதுவே அவர்களை வீரியமாக்கவும் செய்யும் என்பது தெரியாததல்ல.ஆனால் தனிப்பட்ட உணர்சிகளை மற்றையவர் சம்மதம் இல்லாமல்  பொது இடத்தில் பிரயோகிப்பது முற்றிலும் தவறானது அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவத்துறை கூட ஓரினச்சேர்க்கை தவறானது என்று அறிக்கை விட்டவுடன்,இது ஒரு "நோய்" என்று கருதும் தோற்றப்பாடு இன்றுவரை தொடர்கிறது.பிள்ளை பிறக்க வாய்ப்பில்லாத எந்தவொரு உறவும் பாவம்.அது இயற்கைக்கு புறம்பானது என்று கிறீஸ்தவ சமயமும்  எதிர்த்ததால் இவர்களின் பாடு பெரும் பாவமாகிவிட்டது.

ஓரினச்செயர்க்கை என்பது பெரும்பாலானோருக்கு பிறவியிலேயே வந்துவிடுகிறது,கர்ப்பத்தின்போதான ஹோர்மோன்களின் குளறுபடியால் இது ஏற்படுகிறது என்று ஒரு கருத்து நிலவுகிறது.அப்படி என்றால் இது அவர்களின் தவறல்லவே.மாறாக குழுவாக செயல்படும்போதும்,சிறுவயதில் குழப்பமான சூழலில் வளரும்போதும் இத்தகைய தம்-பால் கவர்ச்சி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதற்க்கான சரியான காரணம் இன்னமும் தெரியவராத நிலையில் ஒவ்வொருத்தரும் அவரவர் மனநிலைக்கு ஏற்றவகையில் பெரும்பாலானோர் எதிர்ப்பால் மீதான நாட்டமும் சிலர் தம்-பால் மீதான நாட்டத்தையும் கொண்டிருக்கின்றனர். 

குற்ற உணர்வுஎன்பது  ஓரினச்செயர்க்கையாளர்களுக்கு எந்தவொரு கணமும் ஏற்படக்கூடியது தான்.பெண் ஓரினச்சேர்க்கையாளர்களை விட ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் பெருமளவிலான குற்றவுணர்வால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.ஆண் ஓரின செயற்க்கையாளர்களில் ஒருவர் ஆணாகவும்,மற்றையவர்  தங்களை பாவனைப்படுத்தி கொள்வர்.இதில் பெண்ணாக தன்னை உருவகப்படுத்தும் ஆண் தான் சமூகத்தால் பெருமளவு மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம்.காரணம் எமது சமூகம் ஒரு ஆண் பெண்ணாக நடப்பதை எத்தருணத்திலும் ஏற்றுக்கொண்டதில்லை.


      

ஆண்-பெண் உறவு என்கின்ற நல்ல கட்டமைப்புக்குள் இருக்கும் இந்த சமுதாயம்,கலாச்சாரம் எல்லாம் இவர்களை அனுமதிப்பதன் மூலம் குழப்பமடைந்து சிதைந்துவிடும் என்பது தான் பலரின் கருத்தாக இருக்கிறது.ஆனால் இந்த ஆண் பெண் உறவுகளுக்கு பின்னால் ஒளிந்து மறைந்திருக்கும் ஆயிரக்கணக்கான கள்ள உறவுகள்,முறையற்ற உறவுமுறைகள் ஏன் ஹோமோ உறவுகள் கூட இதுவரை காலமும் மழுங்கடிக்கப்பட்டும் மூடி மறைக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அல்லது தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்றோம் என்கின்ற ரீதியில் இருந்திருக்கின்றனர்.

சரி இவற்றை மறைத்து,இவர்களின் உணர்வுகளை அடக்கித்தான் வைத்திருப்போம் என சமூகத்தில் அனைவரும் கிளம்பினால் வெகு சீக்கிரம் ஒரு நாள் இவர்களது எதிர்கால சந்ததியில் ஒரு பிள்ளை வந்து தைரியமாக "அப்பா,நான் ஒரு gay" என்றோ இல்லை மகள் வந்து நான் ஒரு லெஸ்பியன் என்றோ வெளிப்படையாக துணிந்து கூறும் காலம் ஒன்றும் தொலைவில் இல்லை.இதை நான் கூறுவதற்கு காரணம், அந்தளவில் எம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாமலே இவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. 

ஒரு சில நாடுகளில் இவர்களின் செயல்பாடுகள் அரசினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன,திருமணங்களும் நடந்தேறுகின்றன முறைப்படி.அதுபோல சில பிரபலங்கள் கூட தாங்கள் ஒரு ஹோமோ செக்சுவல் தான் என்று வெளிப்படையாக அறிவித்தவண்ணமிருக்கின்றனர். மறுபக்கம் பேரணி,ஆர்ப்பாட்டம் என்றும்,"லிவிங் டுகெதர்" என்றும் அவர்கள் படிப்படியாக சமூகத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இதன் வளர்ச்சி அடுத்த ஐந்து பத்து வருடங்களில் அபரிதமாக இருக்கலாம். 

இவர்களால் தான் எயிட்ஸ் நோய் கூட பெறுமளவில் பரவுகிறது என்கின்ற சமூகத்தின் பயத்தினால் இவர்கள் மீது ஒரு கேவலமான பார்வையே எப்போதும் சமூகத்திடமிருந்து இவர்களுக்கு பரிசாக கிடைக்கிறது.இன்றைய இளைய சமுதாயம் ஓரளவுக்கேனும் இவர்களை பற்றி புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விடயம்.ஆனால் இது போதாது.முழு சமுதாய அளவில் இவர்கள் பற்றியும்,இவர்களது உணர்வுகள் பற்றியும் ஒருவித விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.அவர்களை முதலில் சமூகம் அங்கீகரிக்கட்டும்;அதன்பின்னர் அவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பொதுப்படையாக பேசலாம்.

குறிப்பு: எந்த கருத்தாக இருந்தாலும் இங்கு பகிருங்கள்,இன்று இதனை பேஸ்புக்கில் பகிரவுமுள்ளேன்.மேலதிக கருத்துபரிமாற்றங்களுக்கு அங்கும் தொடரலாம்.
தொடர: மைந்தன் சிவா


Post Comment

Sunday, November 25, 2012

நயிட்டியில் அலையும் மாதவிகள்..! |16+|




நேரம் மாலை ஆறு முப்பது.


இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் முன்னாடி அமர்ந்துகொண்டிருப்பது தெரிந்தது.இன்றும் ஒரு அரைமணி நேரம் நின்று பார்த்துவிடுவது என்ற எண்ணத்துடன் இடுப்பழவே உயரமான பால்கனி  சுவற்றின்மீது சாய்ந்துகொண்டு அவனின் அறையினை அடிக்கடி நோட்டம்விட்டுக்கொண்டு இருந்தாள் மாதவி.

இன்று நேற்றல்ல,அவன் அந்த வீட்டுக்கு குடிவந்த காலத்திலிருந்து தினசரி காலை மாலை என்றும் பார்க்காமல் அவன் அறை கதவு திறந்திருக்கும் பொழுதெல்லாம் மாதவி,பால்கனியில் உலவ மறப்பதில்லை! "அவன்"தான்; "பெயர் எல்லாம் தெரிந்துகொண்டு தான் சைட் அடிக்க வேண்டும் என்று சட்டம் மட்டும் இருந்தால் உலகத்தில 95 வீதமானோர் பாடு ரொம்பவே கஷ்டமாயிடும்" என்று ஜோசித்துக்கொண்டாள்.

ஒரு அரை மணிநேரம் மீனுக்காய் காத்திருக்கும் கொக்கு மாதிரி பால்கனியில் நின்றால்,மீன் ஓரிரு தடவையாச்சும் வெளியே வந்து எட்டிப்பார்த்துவிட்டு செல்லும் என்பது மாதவியின் காத்திருப்பு கற்றுக்கொடுத்த பாடம்.நயிட்டியில் இருக்கும் பெண்கள் மீது ஆண்களுக்கு ஒரு கிரேஸ் இருப்பது மாதவி பலர் கண்களை அவதானித்ததில் இருந்து கற்றுக்கொண்ட இன்னொரு பாடம்.கற்றுக்கொண்ட பாடங்களை எல்லாம் ஒன்றுசேர பிரயோகிப்பதில் மாதவி படு கில்லாடி.

எத்தனை வேலைகள் இருந்தாலும், தினசரி கடமைகளில் இதுவும் ஒன்றாகிப்போனது;காரணங்கள் என்ன என்பது பற்றி இவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவுமில்லை.அவனை பார்க்காத நாள் ஏனோ அவளுக்கு முழுமையடைவதில்லை.அவளது நண்பிகளில் பலர் தாங்களும் இந்தமாதிரி அடிக்கடி இப்போது நடந்துகொள்வதாக சொல்வதை கேட்கையில்,இதுவொரு பொதுவான விஷயம் தான்;தப்பில்லை என்கின்ற தைரியம் மாதிவிக்கு ஒரு மேலதிக தூண்டுதலை கொடுத்திருந்தது.அளவான மாவு நிறமும்,நயிட்டி தவிர்ந்த எந்த ஆடையாய் இருந்தாலும் திமிறி நிற்கும் அவள் அழகுகளும் நயிட்டியோடு கூட்டணி அமைத்து பால்கனி சுவரில் மெதுவாய் சாய்ந்து நிற்கையில்,வீதியால் செல்லும் எந்த ஆணும் திரும்பிப்பார்க்காமல் சென்றதில்லை.

பால்கனியில் நிற்கையில் வீட்டு ஹாலில் இருந்த மஞ்சள் வெளிச்சம் நயிட்டியில் இருந்த மாதவியின் அழகை வர்ணித்து காட்டியதோ என்னமோ,அவளை காத்திருக்க வைக்க பிடிக்காமல் காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பது போல வெளியில் வந்தான் அவன்.இலவசமாய் கிடைக்கும் கில்மாவை எந்த இளைஞன் தான் வேண்டாமென்பான்!என்னதான் இவள் வலிந்து போய் பால்கனியில் நின்றாலும்,"அவன்"வெளியில் வந்ததை உடனேயே கண்ணெடுத்து பார்க்க திராணியற்று தன்பார்வையை கீழே வீட்டு படலைபக்கம் திருப்பிய மாதவி,என்ன ஜோசித்தாளோ  என்னமோ கண்ணிமைக்கும் நொடியில் உள்ளே சென்றுவிட்டாள். 

ஒன்றுமே புரியாமல்,என்னவாய் இருக்குமென்று ஜோசித்துக்கொண்டு அவன் சாவகாசமாய் கீழே பார்க்கவும்,வேலைமுடிந்து வந்த அவளின் கணவன் படலையை திறக்கவும் சரியாகவிருந்தது..!மாதவி ஹாலில்,குழந்தைக்கு இரவு உணவை அவசரமாய் குழைத்து வாயில் தள்ளுவது மெதுவாக சாத்தப்பட்ட கதவிடுக்கில் தெரிந்து மறைந்தது.

-{யாவும் கற்பனை} 


Post Comment

Sunday, November 18, 2012

துப்பாக்கி-இரண்டாவது ஆட்டம்..!


விஜய் டிவியில் முருகதாஸ் மற்றும் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முருகதாஸ் ஒரு விடயத்தை வெளிப்படுத்தினார்.அது என்னான்னா,துப்பாக்கி பண்ணும்போது தனக்கு  சொல்லிக்கிட்டே விடயம்,என்னோட டார்கெட் ரிப்பீட் ஆடியன்ஸ் தான்; தியேட்டருக்கு ஐந்து தடவை வந்து  சலிக்காத மாதிரி படம் இருக்கணும் அப்பிடின்னு சொன்னார்.ஐந்து தடவை என்பது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் கூட,படத்தை பலர் இரண்டு தடவை பார்த்திருக்கிறார்கள்.போடா போடி என்கின்ற இன்னொரு தீபாவளி ஆப்சன் இருந்தும் கூட துப்பாக்கியை இரண்டாவது தடவை பார்க்க தூண்டியது முருகதாசின் வெற்றி தான்.



எனது துப்பாக்கி விமர்சனத்தில்,எனக்கு படம் பிடித்திருந்தாலும்,"ஆகா ஓகோ" அளவுக்கு பிடித்திருக்கவில்லை என்று கூறியிருந்தேன்."அதிகமான எதிர்பார்ப்புகள்" இருந்தால் சிலசமயங்களில் இப்படி நடப்பது வழக்கம் என்றும் "மீண்டும் ஒருதடவை படத்தை பாருங்க,எனக்கும் "சிவாஜி" படம் முதல்தடவை பார்த்தபோது அப்படித்தான் இருந்தது,ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்கையில் பிடித்த படங்களில் ஒன்றானது" என்று பிரபல பதிவர் "எப்பூடி ஜீவா"ண்ணா சொல்லியிருந்தார்.வேலை நிமித்தமாக யாழ் சென்றிருந்த சமயம் கிடைத்த சிறிது நேரத்தை "துப்பாக்கியுடனான எனது இரண்டாம் ஷோ"வுடன் செலவிடலாம் என்று நண்பனுடன் களத்தில் குதித்திருந்தேன்.

 ஏலவே படம் வெளிவந்த இரவு தலைநகரில் "துப்பாக்கியுடனான எனது முதலாம் ஷோ" முடிந்திருந்தது.ஆனால் நான் யாழில் பார்க்க சென்றது படம் வெளிவந்து நான்காம் நாள்.என்ன ஒரு வித்தியாசமான அனுபவம்.கொழும்பில் இல்லாத அளவுக்கு பெரியளவிலான துப்பாக்கி கடவுட்டுகள் "செல்லா திரையரங்கை " பிரம்மாண்டப்படுத்திக்கொண்டிருந்தன.அது போதாதென்று  ரசிகர் பட்டாளம்..!நான்காம் நாள் மதிய நேர காட்சிக்கு தியேட்டர் நிறைந்து,மேலதிக கதிரைகள் பக்கம் பக்கமாக போடப்பட்டு தான் காட்சி ஆரம்பித்தது.தியேட்டர் கதவு மூடும்போது அவர்கள் ஆர்ப்பரித்த சத்தத்தை வைத்தே ஒரு வெறித்தனமான ரசிகர்பட்டாளத்துடன் தான் படம்பார்க்கின்றேன் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்..!

||இந்த காட்சி தான் படத்தில் மிக பிடித்தது..அப்படியே பாட்ஷாவில் பிள்ளையார் சிலைக்கு பின்னாடி இருக்கும் குண்டை கண்டுபிடிக்க ரஜனி கிளம்பி வரும் காட்சி மனசில் வந்து சென்றது.||

இவர்கள் மத்தியில் இருந்து முதலாவது ஷோ பார்த்திருந்தால் எனது விமர்சனம் "துப்பாக்கி-சூப்பர் டூப்பர் ஹிட்"என்கின்ற தலைப்போடு தான் வந்திருக்கும்.காரணம் கொழும்பில் முதல் ஷோ பார்கின்ற போது கூட இந்தளவு ஆக்ரோஷ்யமான ரசிகர்களை காணமுடிந்திருக்கவில்லை.படம் செல்ல செல்ல,வில்லன் வரும்போது கூட எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.சரி என்னதான் இருந்தும் கூட "துப்பாக்கி"மீதான எனது அபிப்பிராயத்தில் ஒன்றும் பெரிதளவான மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை.முதல் தடவை பார்த்துவிட்டு 63 மார்க் கொடுக்கலாம்னு சொல்லியிருந்தேன்.இம்முறை சற்று அதிகமாக ஒரு 69-70 மார்க் கொடுக்கலாம்னு மனசு சொல்லுது.

துப்பாக்கி ஒரு ஹாலிவூட் படமாக இருந்திருந்தால்,இந்த பொண்ணு பார்க்கும் படலம் இருந்திருக்காமல்,ஹீரோ ஆக்சனில் இறங்கும்போது துணைக்கு ஹீரோயின் வருவதாகவும்,கிளைமாக்ஸ்க்கு அருகாமையில் இருவரும் புரிந்துணர்வோடு சேர்வதாகவும் காட்சிகள் அமைந்து,அதன்பின்னர் சாதாரண ஆக்சன் படமாக இருந்தால் ஒரு முத்தத்துடனும்,செம ஆக்சன் படமாக இருந்தால் ஒரு கட்டில் சண்டையுடனும் மேட்டரை முடித்திருப்பார்கள்.தமிழில் துப்பாக்கி வெளிவந்ததால் தேவையில்லாத "இழுவை"காதல் காட்சிகளும் சோர்ந்துபோன சில பாடல்களும் ஒன்றுசேர்ந்து படத்தின் வேகத்தையும் சுவாரசியத்தையும் கெடுத்துவிட்டிருக்கிறது.

"குட்டி புலி கூட்டம்" பாடலும் "கூகிள் கூகிள்"பாடலும் தான் கேட்கவும்,பார்க்கவும் நன்றாக வந்திருக்கின்றது."நிஷா நிஷா" பாடலை நல்ல டூயட்டாக எடுத்திருக்கலாமோன்னு தோன்றியது.வழமையான ஹாரிஸ் டச் மாற்றானை தொடர்ந்து துப்பாக்கியிலும் மிஸ்ஸிங் என்று தான் கூற வேண்டும்.ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகணும்னா அனைத்து அம்சங்களும் கச்சிதமாக பொருந்தி வந்திருக்கவேண்டும்.வழமையாக படங்களுக்கு தனது பாடல்களால் ஒரு எக்ஸ்ட்ரா வால்யூ கொடுக்கின்ற ஹாரிஸ்,இம்முறை மாற்றான்,துப்பாக்கி என்று இரு பெரிய படங்கள் ஒரு சமயத்தில் கையில் வந்துவிட ஒரு படத்துக்கு கொடுக்கும் இசையை இரண்டு படங்களுக்கு பகிர்ந்து வழங்கியிருப்பது போல்தான் தோன்றுகிறது. மாற்றானுக்கும் "நாணி கோணி" பாடல் மட்டும் தான் ஹிட் ஆனது;இதுவும் மாற்றான் அவரேஜ் படமாக மாறியிருந்ததற்க்கு ஒரு காரணம்.

 சற்றே இழுபடும் காதல் காட்சிகளும்,பாடல்களும்,அங்காங்கே சில லாஜிக் பிழைகளும் தான் துப்பாக்கியில் சொல்லக்கூடிய எதிர்மறை விமர்சனங்கள்.அதையும் தாண்டி கேரளாவில் ரெக்கோர்ட் கலெக்சன்,தமிழ்நாட்டில் பில்லா,மாற்றானை பின்தள்ளி ஒப்பினிங் கலெக்சன் ரெக்கோர்ட் என்று மீண்டும் தான் ஒரு வசூல் சக்கரவர்த்தி,ஒப்பினிங் கிங் என்று முருகதாஸ் தயவோடு நிரூபித்திருக்கிறார் இளையதளபதி விஜய்.ரஜனி கூட படத்தை இருதடவைகள் பாத்திருப்பதாக முருகதாசிடம் கூறியிருக்கிறார்.கவுதம் மேனனின் படம் கைவிடப்பட்டது விஜய்க்கு ஒரு இழப்பு.இல்லாவிட்டால் அதுவும் ஒரு சூப்பர் ஹிட் என்று இப்போதே கூறியிருக்கலாம்.நடிப்புக்கு தீனி கொடுத்திருப்பார்.அண்டர்ப்ளே பண்ணும் போது தான் விஜய்க்கு நடிப்பு வருமோ என்னமோ. 

விஜய் விமர்சகர்களாலும் விமர்சனங்களாலும் கழுத்துவரை நெரிக்கப்படும் போது,தனக்கும் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று காட்டிக்கொண்டவர்கள் பலரும் இப்போது "விஜய் எப்போதுமே என் பேவரிட்" என்ற ரீதியில் கருத்துக்கூற தலைப்பட்டுவிட்டனர்.வெற்றிகளோடு கூட இருப்பது போல தோல்விகளின் போதும் நான் இவர் ரசிகனே என்று உரக்க சொல்பவன் தான் உண்மையான ரசிகன்.அத்தகைய காலங்களில் விமர்சனங்களுக்கு அஞ்சி ஒழிந்திருந்துவிட்டு படங்கள் வெற்றிபெறும் காலங்களில் மட்டும் வெளியே தலைகாட்டுவது ரசிகனுக்கு அழகல்ல.நல்லது,விஜய் தொடர்ச்சியாக நான்கு ஹிட் கொடுத்திருப்பதால் அடுத்து சில வரிசையான ப்ளாப்  படங்களை எதிர்பார்க்கலாம். அப்போது ஓடி ஒளிந்துவிடமாட்டீர்கள் தானே..?

டிசம்பரில் "கும்கி","நீதானே என் பொன்வசந்தம்" வெளிவரலாம்.விஸ்பரூபம் அடுத்த வருடம் தான்.பெரும்பாலும் பொங்கலுக்காவது கமல் ரிலீஸ் பண்ணுவார் என்று எதிர்பார்க்கலாம்.அதனால் துப்பாக்கி தொடர்ந்து சிலகாலம் தியேட்டர்களில் ஓடப்போகிறது. மறுபக்கத்தில் "போடாபோடி" பெரிதாக மக்களை கவரவில்லை.இந்த வருடத்தில் "நண்பன்","வேட்டை","காதலில் சொதப்புவது எப்படி","ஒருகல் ஒருகண்ணாடி", "கலகலப்பு","பிட்சா" போன்ற பத்துக்கும் குறைவான படங்களே வசூல்ரீதியாக வெற்றி பெற்றிருக்கின்றன.இதில் "ஓகே ஓகே"யை தாண்டி துப்பாக்கி "ஆண்டின் மிகச்சிறந்த படம்"ஆக தெரிவுசெய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாய் தெரிகின்ற அதேசமயம்,இவ்வருடத்தில் சூர்யா,அஜித் போன்றோர் ஒரே ஒருபடத்தை மட்டுமே ரிலீஸ் செய்திருக்கும் போது,விஜய்  நண்பன்,துப்பாக்கி என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருப்பது கடந்த நான்குவருட கசப்பான வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது தற்காலிகமாய்.! 


--------------------------------------------------------------

கமலின் விஸ்பரூபத்தில் கூட ஸ்லீப்பர் செல்ஸ் பற்றிய காட்சிகள்,துப்பாக்கியை ஒத்த காட்சிகள் வருவதால் என்னசெய்வது என்று கமல் குழம்பிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.எப்படியோ விஸ்பரூபம் கமலுக்கு "ஆளவந்தான்"வசூல் ரீதியாக தந்த அடியை மீண்டும் தரப்போகிறது என்று ஏலவே எதிர்பார்த்திருக்கிறேன்.என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். அத்துடன் துப்பாக்கிக்கே முஸ்லிம்கள் எதிர்ப்பால் பிரச்சனை ஆகியிருக்கிறது. விஸ்பரூபத்தையும் இது கட்டாயம் பாதிக்கத்தான் போகிறது.

               அடுத்ததாக அஜித்துடன் முருகதாஸ் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாய் தென்படுகின்றன."தீனா" போன்று அஜித்க்கு அடுத்த மைல்கல்லாக அப்படம் அமையலாம் என்று எதிர்பார்க்கலாம்.இந்த சமயத்தில முருகதாஸ்ஸிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கான பதிலை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்."அஜித் விஜய்னு இரண்டு பேரையும் வைச்சு படம் பண்ணி இருக்கீங்க,ஒரு டைரக்டரா இரண்டு போரையும் எப்படி பார்க்கிறீங்க?".இது தான் கேள்வி.அதற்க்கு முருகதாஸ் சொல்லியிருக்கும் பதில்:

"இப்பகூட என்னை பாலிவூட்ல பார்த்தா "என்னது...நீங்க டைரக்டரா?"னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க.இப்பவே இப்பிடின்னா பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன்..ஆனா,அப்பவே என்ன நம்பி "தீனா"வாய்ப்பு கொடுத்தவர் அஜித்.அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்.அவர் மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு.ஆனா நான் வளர்ந்து இந்திப்படம் வரைக்கும் இயக்கிய பிறகு,இப்போ ஏழாவதாகப் பண்ணிய படம் தான் துப்பாக்கி.விஜய் இப்போ என் நண்பர்.அவர் யார்கிட்டயும் சினிமாவை தாண்டி எதுவும் பேசமாட்டார்னு சொல்வாங்க.ஆனா அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச் ஆகிட்டோம்.இப்பவும் அஜித் விசை ரெண்டு பேரையும் சந்திச்சிட்டு தான் இருக்கேன்.எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டல் அடிச்சிக்கிறாங்க.ஆனால் அவங்க ரெண்டு பெரும் ஒருத்தர் இன்னொருத்தர பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை.ஒருத்தரை பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையா பேசிப்பாங்க.இரண்டு பேருக்குள்ளேயும் நல்ல நட்பு இருக்கு.அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்"  

ரஜனியை விடுத்து பார்த்தால்,ஒப்பினிங் கலெக்சன் போட்டி அஜித் விஜய் இருவருக்கும் மாறி மாறி நடந்து வருவது வழக்கமாகி இருக்கிறது.ஒருவர் படம் ஹிட் ஆகையில் அடுத்தவரை இவர் ஓவர்டேக் செய்கிறார்.அடுத்த தடவை அடுத்தவர் ஓவர்டேக் செய்கிறார்.இது நிலையாக ஒருவரிடம் இருக்கப்போவதில்லை.மாறிக்கொண்டே இருக்கப்போகிறது.அதற்காக ஒவ்வொரு படம் வரும்போதும் அடிச்சிக்கனுமா தல!தல தளபதி ரசிகர்கள் தனியே உக்கார்ந்து,ஏன் வேணும்னா கும்பலா கூட உக்கார்ந்து ரூம் போட்டு ஜோசிக்கவேண்டிய விடயமிது.வேண்டுமென்றால் தலையின் அடுத்த படத்துக்கு நாங்களே திரண்டு வருகிறோம் முதல் காட்சிக்கு.நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான்..

                      

விஜய்யோட வில்லங்கம் அந்த எஸ் எ சந்திரசேகரை போட்டு தள்ளிடுங்கப்பா......!!! ஏற்கனவே காவலன் வெளியீட்டில் தகராறு ஆகியதற்கு இவர் தான் முக்கிய காரணம்.முருகதாஸ் துப்பாக்கி தொடங்கும் போது கூட தொல்லை கொடுத்தவர்.துப்பாக்கியில் தேவையில்லாத காட்சிகளை நீக்குவதோடு நிறுத்தி இருக்கலாம்.இப்போது விஜய் ஒரு படத்தில் முஸ்லிமாக வேறு நடிப்பார்னு அறிக்கை விட்டிருக்கான் இந்த பய.(எங்க அரசியலுக்கு வரும்போது முஸ்லீம்களின் ஓட்டுக்கள் மிஸ் ஆகிடுமேங்கிற பயம் தான்.)வழமையாகவே விஜய்யிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து படத்தை கெடுக்கும் இந்த எஸ் எ,இனி சொன்ன வாக்கை காப்பாற்ற எந்த டைரெக்டர் தலையை பிடிச்சு இழுக்க போறானோ...! ஐ ஆம் வெயிட்டிங்..!

Post Comment

Tuesday, November 13, 2012

துப்பாக்கி-எப்படி நிலவரம்?




Thuppaki Movie Latest HD Stills, New Posters and Wallpapers - Image 10 of 23

முருகதாஸ் கூட விஜய்  இணைந்து பணியாற்றிய முதல் படம் என்பதுவே துப்பாக்கி படத்துக்கான எதிர்பார்ப்பை ஆரம்பத்திலிருந்து எகிறவிட்டிருந்தது.கூடவே ஹாரிஸ் ஜெயராஜ் இசை என்று தெரிந்தபோது எதிர்பார்ப்பு இன்னமும் கூடியது..காஜல் நாயகி என்றவுடன் கிளுகிளுப்பும் கூடவே சேர்ந்துகொண்டது.மாற்றானுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்,ஆரம்பத்தில் எஸ் எ சி-முருகதாஸ் பிரச்சனையால் தடுமாறி,பின்னர் "கள்ளத்துப்பாக்கி" பிரச்சனையால் இழுபட்டு இழுபட்டு,இறுதியாக "U " செர்டிபிகேட் தகுதி பெற்று தீபாவளி விருந்தாக திரைக்கு வந்திருக்கின்ற துப்பாக்கி வெடித்திருக்கிறதா இல்லை புகை மட்டும் தள்ளியிருக்கிறதா என்று பார்க்கலாம்..

ஒரு சாதாரண கதையை வித்தியாசமாக கையாண்டு "ஆக்சன் திரில்லர்" என்னும் வகையறாவுக்குள் துப்பாக்கியை கொடுக்க முயன்றிருக்கிறார் முருகதாஸ்.இந்தியன் ஆர்மியில் இருக்கும் விஜய் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கையில் அங்கு இடம்பெறும் குண்டுவெடிப்புகளால் ஈர்க்கப்பட்டு வாலேன்டியராக அதற்குள் தலையை போட்டு தீவிரவாத கும்பலின் தலையை எவ்வாறு தீர்த்துக்கட்டுகிறார் என்பதே படத்தின் கதை.ஆர்மிக்குரிய உடல்வாகு விஜய்க்கு இயல்பாகவே இருப்பதால் அது படத்துக்கு ஒரு ப்ளஸ்.


வழமையான விஜய்யின் மசாலா பட வகையறாவுக்குள் இது இல்லை என்பதால் சில அடிமட்ட விஜய் ரசிகர்களுக்கு படம் பிடிக்காமல் போயிருக்க கூடும்.நகைச்சுவை என்று அதற்காக தனி ட்ராக் இல்லாவிட்டாலும் கூட போலீசாக வரும் சத்தியன் சில இடங்களில் சிரிப்பை வரவைக்கிறார்,மறுபக்கம் விஜய் யின் சீனியர் ஆபீசராக வரும் ஜெயராம்,தான் தோன்றும் அனைத்து காட்சிகளிலும் வயிற்றை புண்ணாக்குகிறார்.அது போக விஜய்யின் வழமையான குறும்புகளும் படத்தில் உண்டு.

கட்டடம் விட்டு கட்டடம் தாவும் சண்டைக்காட்சிகளாக அல்லாமல் துப்பாக்கியில் சண்டை காட்சிகள் அனைத்தும் சூப்பர் ரகம்.படத்தில் ஏகப்பட்ட திருப்பங்கள் ட்விஸ்ட்கள் நாங்கள் எதிர்பாராத நேரங்களில் வருகிறது.பின்னணி இசை கலக்கல்.எழுத்தோட்டத்திலும்,வில்லனுக்கான காட்சிகளிலுயும்,திடீர் திருப்பங்களிலும் பின்னணி இசை பிரமாதப்படுத்துகிறது. 


ஏலவே படத்தின் ஆடியோ வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தன.நீதானே என் பொன்வசந்தம் ஆல்பம் மற்றும் போடா போடி ஆல்பம் போன்றவற்றை பின்தள்ளி ரேட்டிங்கில் முதலிடத்தில் துப்பாக்கி ஆடியோ அல்பம் இருந்துகொண்டிருக்க,"கூகிள் கூகிள் பண்ணி பார்த்தேன்" பாடல் அனைவரது வாயிலும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.மாற்றானில் தனது திறமையில் சற்றே சறுக்கி இருந்த ஹாரிஸ் துப்பாக்கியில் அந்த தப்பை செய்திருக்கவில்லை என்று நினைத்தேன்.பாடல்கள் நன்றாக இருந்தாலும் பாடல்களின் காட்சியமைப்பில் முருகதாஸ் சொதப்பியிருக்கிறார் என்று கூறலாம். பாடல்களின் வெற்றிக்கு இணையாக விசுவல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை..




வில்லன் படத்துக்கு ஒரு ப்ளஸ்.ஹீரோ போன்ற உடல்வாகுடன் பயமூட்டும் பின்னணி இசையில் வரும் வில்லன் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் கலக்கல்.காஜல் அறிமுக காட்சியில் சேலையில் வருகிறார்..கொள்ளை.!!!ஆனால் அதற்க்கு பின்னர் வரும் காட்சிகளில் எல்லாம் ஏனோ பெரிதாக பிடிக்கவில்லை.காஜலுக்கான ஆடை செலேக்சன் சுத்த வேஸ்ட்டு.கொஞ்சம் வயதான மாதிரி தெரிகிறார்.படத்தில் ஒரு சில இடங்களில் வன்முறை காட்சிகள் சற்று அதிகம்.ஒன்று இரண்டு வசனங்களில் கூட..!

"ஸ்லிப்பர் செல்ஸ்" எனப்படும்,நாட்டில் சாதாரண குடிமகனாய் இருந்து உயர்மட்ட கட்டளை கிடைத்தவுடன் அதனை செயல்படுத்த உயிரை கூட கொடுக்க தயாராக இருப்பவர்கள் தான் படத்தில் முக்கிய இடம்பெறுகிறார்கள்.மும்பை குண்டுத்தாக்குதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை தான்.விஜய் உட்பட பன்னிரண்டு பேர் வில்லனின் குழுவினரை பின்தொடர்ந்து தாக்கும் காட்சி க்ளாஸ்.அதை போன்றது தான் தன் தங்கையை பணயம் வைத்து தனது நாயின் உதவியுடன் தீவிரவாதிகளின் இடத்தை கண்டுபிடித்து ரணகளம் பண்ணும் காட்சி கூட!

ஏழாம் அறிவில் தமிழர் பெருமை பேசிய முருகதாஸ் துப்பாக்கியில் "இந்தியன்"என்கின்ற நாமத்தை கையில் எடுத்திருப்பது தெரிகிறது.படம் சற்றே நீண்ட மாதிரி தோன்றினாலும் இரண்டரை மணி நேர படம் தான்.கொஞ்சம் மெதுவாக நகர்கிறது துப்பாக்கி,அதனாலோ என்னமோ படம் கொஞ்சம் நீளமாக தோன்றலாம்.நல்ல கதையை வைத்து ஆக்சன் திரில்லர் என்று கூறி படைத்திருக்கும் துப்பாக்கியில் சற்றே வேகத்தை  இருக்கலாமோ என்று தோன்றியது. முருகதாஸ் இயக்கத்தினாலோ என்னமோ விஜய் இப்படத்தில் நடித்திருக்கிறார்!!பாடல்காட்சிகளில் வாயை திறந்து பாடுகிறார். 

படம் முடிந்து வெளியில் வந்தால் பலருக்கு படம் சூப்பரா சொதப்பலா என்று சொல்லத்தெரியாத நிலையிலேயே வீடு சென்றதை காண முடிந்தது.சிம்புவின் "போடா போடி" துப்பாக்கிக்கு சமனான போட்டியை தராது என்கின்ற காரணத்தாலும், வேறு பெரிய படங்கள் இப்போது வராது என்ற அனுகூலத்தாலும் துப்பாக்கி ஓடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. துப்பாக்கி "ஹிட்"தான். ஆனால் அடுத்த கில்லி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்..எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருந்ததாலோ என்னமோ எனக்கு தோன்றியதை எழுதினேன்.எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றோர் பலருக்கு படம் நன்றாக பிடித்திருக்கிறது.பார்க்கலாம் என்ன ரிசல்ட் வரப்போகிறது என்பதை.
எனது மார்க் 63/100
ஒருதடவை பார்க்கலாம் கட்டாயமாக.

ரேட்டிங் ஒப்பீடு:     Behindwoods      Moviecrow
பில்லா 2                             2.0                      44%
தாண்டவம்                       2.5                       58%
மாற்றான்                          3.0                       65%
துப்பாக்கி                         3.5                       74%

இன்னமும் ஒரு எதிர்மறை விமர்சனம் வெளிவரவில்லை.விஜய்  ரசிகரல்லாதோர் கூட படம் பாருங்க என்று விமர்சனம் செய்யுமளவுக்கு கவர்ந்திருக்கிறது.இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படமாக அமையலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

குறிப்பு:துப்பாக்கிக்கு தொடர்ந்து  நல்ல விமர்சனங்களே வந்தவண்ணமுள்ளன.எது எவ்வாறு இருந்தாலும்,இது என்மனதில் தோன்றிய விமர்சனம்.இரண்டாவது தடவை பார்க்கலாம்னு இருக்கிறேன்..!


Post Comment

Sunday, November 11, 2012

"திருத்தணி"-"பேரரசுக்குஆஸ்கார் நிச்சயம்.!"


                      
தியேட்டர்ல திருத்தணி படம் ஓடுது என்றாலும்,பேரரசுவின் கடைசி படமான "பழனி",விஜயகாந்தின் "விருதகிரி" பார்த்த அனுபவத்தில் வீட்டிலேயே டிவிடி வாங்கி பார்த்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். விருதகிரி ஓசில பார்க்கப்போய் கூட,அரைவாசியில் எழும்பி ஓட முயற்சித்த காரணத்தால் வீட்டிலேயே இருந்து பார்க்கலாமென்ற முடிவு;எழும்பி ஓடிட முடியாது பாருங்க.

வாங்க,நேரடியாவே விமர்சனத்துக்கு(?!!) போயிரலாம் பாஸ்.படம் தொடங்கி முதல் பத்து பதினஞ்சு நிமிஷம் ஒப்பினிங் பைட் பாஸ்.ஏன் எதற்கு என்று கேட்கக்கூடாது.சிவகாசி "பல்லாக்கு பாண்டி" மாதிரி இதிலும் ஒரு பாண்டி;அண்ணன் செத்துபோயிட்டாரு கடைய மூடுங்கடா பஸ்ஸ கொளுத்துங்கடா ஸீன் தான்..அதை மீறினவன அடிக்க கை ஓங்கும்போது தான் ஹீரோ என்ரி என தெரியாததா என்ன.சாதாரணமா பேரரசு பட ஒபினிங்  பைட் லெந்தா இருக்கும்னு முன்னாடியே தெரிஞ்சதால  அந்த காப்'ல நான் போயி டின்னர் முடிச்சிட்டு வந்தேன்..பைட்டுக்கு  அப்புறம் என்ன வரும்னு சுனாமிக்கு பின்னாடி பிறந்த குழந்தைக்கே தெரிஞ்சது தானே.

"நீ வான வேடிக்கை வெடிடா
அந்த வானம் உனக்கு புடிடா.."னு "டா"ல முடியுற மாதிரி பேரரசுவின் அற்புத வரிகளில் ஒரு ஒபினிங் சாங்..பாட்டு முழுவதுமா வாழ்க்கைக்கான தத்துவங்கள் நிறைய பரவி கிடக்குது பாஸ்.பொறுக்கி எடுத்து வாழ்க்கையை நெறிப்படுத்தி கொண்டால் வாழ்க்கை "ஜோய் அலுக்காஸ்" தங்க நகை மாதிரி ஜொலியா ஜொலிக்கும்..!(தியேட்டர்ல படம் பார்க்க போனவன் இந்த கணத்திலேயே எழும்பி ஓடியிருந்தான்னா புத்திசாலி..ஓடாதவன் திறமைசாலி..பொறுமைசாலி..பலசாலி etc !)

                     
சிவகாசி'ல அசின் தன் "பாடிய" காட்டுற ஜிம் வரும்லே..அதே ஜிம்ல தான் சுனைனா ஹீரோயினா இன்ரோ ஆகிறாங்க.அசின் எப்பிடி தனக்கு தன்னைய மாதிரியே ஒரு "சிஸ்டர்"இருக்குன்னு விஜய் காதில பூ சுத்தினாங்களோ,அதே மாதிரி இதில சுனையா தன் அப்பா ஒரு போலீஸ் கமிசனர்,அம்மா கிரிமினல் கோர்ட் ஜட்ஜ்'னு பரத்துக்கு பெரிய பூவா சுத்துறாங்க...வழமையான பேரரசு முட்டாள் ஹீரோ மாதிரி பரத்தும் இத நம்பிடுறாரு..ஹீரோயின் தட்டுற தாளத்துக்கு எல்லாம் ஆடுறார்.

சிவகாசி சீன்கள் படத்தில் ஏகப்பட்டது வந்து தொலைத்தது.ஆரம்பத்தில் விஜய் வந்து பைட் பண்ணினார்...இல்லங்க விஜய் பைட் பண்றமாதிரி ஒரு ஜீவன் கனவுகண்டிச்சு. அப்போ தான் ராஜ்கிரண் வந்து சொல்லுவாரு.."எல்லா இடத்திலையும் விஜய் வருவாரு..ரஜனி வருவார்னு எதிர்பார்க்க முடியாது..நம்ம பிரச்சனைய நாம தான் பாத்துக்கணும்..!"அப்பிடின்னு(நோட் பண்ணிக்கோங்க பன்ச்  டயலாக் பாஸ்)."என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ."பாடல் கூட ஒரு மேடை நிகழ்ச்சியில் வந்து தொலைத்தது.விஜய்  கூட ஒரு படம் பண்ணனும்னு "பேரரசு வெயிட்டிங் போல"... வேட்டைக்காரன் பாடல்களை கூட விட்டுவைக்கலைப்பா..இது பரத் படமா விஜய் படமான்னு பார்ப்பவர்களுக்கு கட்டாயம் டவுட் வந்தேதீரும்.ஒருதடவை மங்காத்தா கூட வந்து விளையாடிட்டு போனார்னா பாத்துக்கோங்க.பக்கா மசாலா விரும்பிகளை மீண்டும் தன்னோட அதரப்பழசான மசாலாவை வைத்து தேய்த்துவிட பார்த்திருக்கிறார் பேரரசு.



சுனைனா அப்பா அம்மா இல்லாத அனாதை எண்டு தெரிஞ்சவுடன அவங்க மேல லவ்வாகிறார் பரத்து..அப்பாவோட இறந்துபோன தங்கச்சின்னு சொல்லி பத்து நாளு சுனையா,பரத் வீட்டிலையே தங்கிறமாதிரி ஒரு சீன்.வீட்டில இருக்கிற அவ்ளோ பேரும் அப்பிடியே நம்பி நம்ம உசிரவாங்கிறாங்க..அப்பவே டிவிடிய நிறுத்திட்டு வேற ஏதாச்சும் "இங்கிலீசு"படத்தில மனச ஆசுவாசப்படுத்தி இருக்கணும்..ஆனாலும் கேப்டனின் விருத்தகிரி கொடுத்த தைரியம்.. முழுவதுமாய் இருந்து பார்க்க முடிவுபண்ணினேன்.

சமூகத்தில நடக்கிற கொடுமைகளை பரத் தட்டி கேட்பார்னு எதிர்பார்க்கிற ராஜ்கிரண்(அவர் ஒரு மிலிட்டரி) ஏமாந்து போறார்.சுயநல சமூகம்னு காரணம் காட்டுறார் பரத்.அம்மா இப்படி ஒரு காரணத்தால தான் செத்து போனாங்கன்னு அதற்க்கு ஒரு ப்ளாஷ் பாக்.எங்கடா ரொம்ப பெருசா போகபோகுதோ,இரவுக்கடன்களை முடிச்சிரலாம்னு பாத்தா சின்ன ப்ளாஷ் பேக் வைச்சு ஏமாத்திட்டார் பாஸ்.அது முடிஞ்சவுடன ஒரு டூயட் சாங்.அது முடிஞ்ச கையோட பரத் ஒரு பெரிய ஆக்சிடெண்ட்ல சிக்கிறார் பாருங்க.. ஐயோ பாவம்,பிழைக்கவேமாட்டார்னு எதிர்பார்த்திருக்க எந்திரிச்சு நடக்கிறார் பரத்.டாக்டர் பரத்கிட்ட "இனி நீங்க ஒரு ஆறு மாசம் தான் உசிரோட இருப்பீங்க"னு  குண்டை தூக்கி போடுறார்.
                          

அதைக்கேட்டு வீட்டாருடன் வேண்டுமென்றே பகைத்துக்கொள்ளும் பரத்தை "சின்ன வயசில சாதிச்சிட்டு செத்தவங்க தான் மனுசங்க மனசில என்னைக்கும் வாழ்வாங்க'னு உசுப்பேத்தி விடுறார் மிலிட்டரி .அதாச்சும் அதற்க்கு பிறகு வருவது எல்லாமே"சரவெடி...இல்ல தாண்டவம்...இல்ல அகோரம்...இல்ல எப்படியாச்சும் நீங்களாவே நெனைச்சுக்கொள்ளனும்.அப்படி நினைவு வந்திராவிட்டால் இந்தப்படம் உங்களுக்கு மெகா ஹிட்டு படம் தான் போங்க.!
உசுப்பேற்றிய அடுத்தகணமே ஒரு அநியாயம் கண்ணெதிரே நடக்குது.அடித்தாடுகிறார் பரத்.ஆடி முடிந்தவுடன அவராவே போலீசுக்கு கால் பண்ணி ஆம்பளைனா அரெஸ்ட் பண்ணுடான்னு ஏசி'க்கு தன்னோட டீடெயில்ஸ் கொடுப்பார் பாருங்க.அத நீங்களும் அனுபவிக்கனும்க.
பெயர்:திருத்தணி 
வயசு:இருபத்தா"று" 
ஹைட்டு :அஞ்சு புள்ளி ஆ"று" 
வெயிட்டு :அறுபத்தா"று" 
நிறம்:சிவப்பு 
குணம்:நெருப்பு 
பிடிச்சது:பருப்பு 
---------------------------------
என்னடா கோடு  போட்டிருக்கேன்னு ஜோசிக்கிறீங்களா??திருத்தணி கமெர்சியல் ப்ரேக்னு போடுறாங்க.அதுக்கு அப்புறமா ரோட்டில குப்பை போடுறவன்ல  இருந்து தலையில ஆயி போற காக்கா வரைக்கும் விடாம சுட்டு தள்ளிக்கிட்டே இருக்காரு பரத்.இந்த டீட்டெயில் எல்லாம் தேவையா பாஸ்?  

எல்லாம் ஓகே நான் எதிர்பார்த்த சீன்  இன்னும் காணலையேன்னு வழிமேல விழி வைச்சு காத்திருக்க ஒரு கருப்பு பஜரோ'ல வந்து இறங்கிறார் நம்ம தலை பேரரசு..அண்ணனோட என்ரி  ஒவ்வொரு படத்தில ஒவ்வொரு மாதிரி மாசா கிளாசா இருக்கும்லே.ஹீரோ இன்ட்ரோவ விட அண்ணனோட இன்ட்ரோ தான் இப்பெல்லாம் அவரோட படத்தில ஹைலைட்டு ..! வந்தார்...வசனம் பேசினார்...டி  ஆர் சிம்புக்கு அப்பன்,தான் வம்புக்கு அப்பன்னு சொல்லி படத்தில தன்னோட வேலைகள் என்ன என்னன்னு பட்டியல் போட்டாரு பாருங்க...எனக்கு தூக்கமே வரலைன்னு சொல்லமாட்டேன்..இது தலைவர் காலம் காலமா பண்ற மேட்டராச்சே..இதுக்கெல்லாம் பயந்தா தலைவர் பேரரசு பான்(Fan) ஆக முடியுமா பாஸ்! 


அப்புறம் என்ன க்ளைமாக்ஸ் அப்பிடின்னு கேக்கிற சினிமா ரசனையே இல்லாத பக்கி பன்னாடைகளுக்கு..
பரத் எல்லாம் செய்துவிட்டு சரண்டர் ஆகிறார்.ஆனால் பரத்தை அரெஸ்ட் பண்ணாமல் "ஏசி"பைட் பண்றார்.அதில இடையில் வந்த ராஜ்கிரண் உசிர கொடுக்கிறார்.பைனல் ட்விஸ்ட்டு என்னன்னா,ஆறுமாசம் தான் உசிரோட இருப்பாய்ன்னு டாக்டர் சொன்னது பொய்.ராஜ்கிரண் தான் தப்புகளை தட்டிகேட்க அவ்வாறு  சொல்லச்சொன்னார் என்று டாக்டர் சொல்றாரு.

ஆனா பாருங்க படம் பார்த்தவுடன உங்க உசிரு போயிடும்னு எந்த டுவிஸ்ட்டும் படத்தில வைக்காமலே வஞ்சகம் பண்ணிட்டாருங்க தலீவர் பேரரசு..!
பாடல்கள் சுமார் ரகம்.ஒரே ஒரு மெலொடி  பாடல் நல்லா இருந்திச்சு..ஆனால் பலபாடல்கள் சாயல் இருந்ததால அதுகூட ஞாபகம் இருக்கல.ஆஷிஷ் வித்தியார்த்தி ஒன்னு இரண்டு ஸீன்ல மட்டும் வாறார்.அருமையான வில்லனை வீணாக்கிவிட்டார் பேரரசு.அட நம்ம பாண்டியராஜன் கூட இருக்காருங்க.மொத்தத்தில,என்னைய மாதிரி "என்ஜாய்" பண்ணி பார்க்க பிடிச்சவங்க படத்த பாருங்க பாஸ்..நிச்சயம் ரசிப்பீங்க..!
விருதகிரி விமர்சனம் படிக்காதவர்களுக்காக:"விருதகிரி வெற்றிக்கொடி"

பேரரசுவோட  அடுத்த படத்துக்காக "Im Waiting...!!!"


Post Comment

Monday, October 29, 2012

சின்மயிக்கு ஒரு கடிதம்...!

உள்ளே போக முன்பதாக: இது ஒரு மிக மிக சீரியஸ் பதிவு.இக்கட்டில் இருக்கும் என் அருமை பாடகி சின்மயி அக்காக்கு ஆதரவாக எழுதப்பட்டிருக்கும் பதிவு.வாசித்து எவராவது சிரித்தால் அதற்க்கு சங்கம் பொறுப்பு கிடையாது.


     


அன்புள்ள சின்மயிக்கு,
(குறிப்பு:"அன்புள்ள" என்பது ஆபாசம் கிடையாது,என் ஸ்கூல் டீச்சருக்கு கூட அன்புள்ள'ன்னு தான் எழுதுவேன் மேடம்)

நான் எட்டாவது படிக்கிறப்போ,என்கூட படிக்கிற பையன் என் மேல தக்காளி வீசினான்..என்னோட வெள்ளை சேர்ட் அப்பிடியே சிவப்பாயிரிச்சு..வந்த கோபத்தில எழும்பி எட்டி ஒரு உதைவிட்டேன்..அதுவரைக்கும் கரும்பலகையில கிறுக்கிக்கொண்டிருந்த வாத்தியார் என்னோட கால் மேல போகும்போது மட்டும் கரெக்டா திரும்பி பாத்து என்னைய அடி பின்னிட்டார்.தக்காளி அடிச்சவன் தப்பிட்டான் தக்காளி...இதனால தான் இப்ப கூட நீங்க ஜெயிலுக்கு போகக்கூடாதின்னு நாஸ்திகனான நான் வேண்டாத சாமி கிடையாது..கால் முடி கூட மழிக்க ரெடின்னு உச்சி பிள்ளையாருக்கு வேண்டியிருக்கேன்..(தலை முடி மழிச்சா பர்சனாலிட்டி டேமேஜ் ஆகிடும் மேடம்...அப்புறம் "மயிர்" பத்தி எல்லாம் பேசினான்னு கேஸ் பைல் பண்ணிடக்கூடாது பாருங்க..)

இதிகாச காலத்தில கூட(உங்க ஆக்களுக்கு தான் இதுகன்னா ரொம்ப பிடிக்குமாமே..!) ராவணன் சீதைய கடத்தினா கடத்திட்டு போகட்டும்னு சும்மா இருக்காம ராவணன் மீது போர் தொடுத்த ராமன் மீது எனக்கு எப்போதுமே ஒரு கேவலமான பார்வை தான் இருக்கு..அவன் தான் சின்ன பையன் தெரியாத்தனமா சீதைய தூக்கிட்டு போனா இவரு பெரிய புடுங்கி மாதிரி கூட இருந்த வானரங்களை கூட்டிட்டு போயி போர் தொடுக்கிராராம்...சரி சீதைய கடத்தினதுக்கு தான் போர்னு வால்மீகி சொல்லியிருக்கலாம்..அவன் அடுத்தவன்,ராவணன் செய்த பழைய தப்புக்கள் எல்லாம்,அதாங்க அவனோட ஹிஸ்த்ரி பூரா தன்னோட சப்போர்ட்டுக்கு இழுத்து ராவணன் தப்புன்னு ப்ரூவ் பண்ணி இருக்கார்..

நம்ம ஊர்ல வழமையா சொறி நாய் எங்கயாச்சும் அசிங்கம் பண்ணிக்கிட்டே திரியும்.ஊரே திரண்டு அடிச்சு கலைக்கும்..ஆனா அதே சொறி நாய் இன்னொரு சொறி நாயை கண்டா அதுக ஒன்னு சேர்ந்து அடிக்க வர்றவன விரட்டி கடிக்க பாக்கும்..ஷோபா சக்தி,சாரு நிவேதிதா போன்ற இழவுவாதிக எல்லாம் உங்க பிரச்சனையில ராஜனுக்கு எதிரா பேசுறதுத பாத்தா இந்த சொறிநாய் ஸ்டோரி அடிக்கடி ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது மேடம்..

இவன் ராஜன் பயலுக்கு சுத்தி போடணும் அம்மணி..நிச்சயமா கிறுக்கு தான் பிடிச்சு போச்சு..எந்த காத்து கருப்பு அடிச்சுதோ...ஆயிரங்களில் ட்விட்டர் போலோவேர்ஸ்,ரசிகர்கள் இருக்க உங்கள போயி பெருசா தூக்கி பிடிச்சு ஆடி இருக்கான் பயபுள்ள..அவனுக்கு இது தேவை தான்...சும்மா இருந்த பய ஜெயிலுக்கு போயி கழி தின்னா என்ன கக்கூஸ் கழுவினா நமக்கென்னங்க...ஆனா ஒன்னு மட்டும் புரியலைங்க..இந்த தருதல பயலுக்கு பின்னாடி எப்பிடிங்க இவ்ளோ பெரிய பட்டாளம் நிக்குது சப்போர்ட்டுக்கு?சொல்லமுடியாது பய நல்ல பணக்காரவீட்டு புள்ளையா இருக்கணும்..ஆளுக்கு அம்போது ரூவாயும் கோழிப்புரியாணியும் டெய்லி குடுக்கிறான் போல..வெளக்கெண்ண பய..நம்மள மாதிரி ஊர ஏமாத்தி கூட்டம் சேர்க்க தெரியுமா என்ன அவனுக்கு!

நாமெல்லாம் சினிமா பிரபல புள்ளிங்க,புள்ளி ராஜாக்கள் தானே...நாம கேனைத்தனமாவும் பேசுவோம்..பைத்தியக்காரத்தனமா கூட நடந்துப்போம்..ஆகா ஓஹோன்னு புகழுவீங்களா..தூக்கிவைச்சு கொண்டாடுவீங்களா அதவிட்டிட்டு குத்தம் கண்டுபிடிக்க இவன் யாரு மேடம் நமக்கு?நம்மள மாதிரி பெரிய பின்"அணி" பாடகியா?இல்ல பின் அணியில ஒரு அல்லக்கையா?நீங்க தான் ஒசாமா பின்லாடன சுட்டு கொன்னீங்கன்னு சொன்னா,அத கூட நம்பிறதுக்கு லட்ச்சக்கணக்கான பகுத்தறிவாதிக நம்ம பின்னாடி இருக்கிறாங்க மேடம்..யூ டோன்ட் வொர்ரி!!

ஆனாலும் இந்த உலக மகா இலக்கியவாதிக கூட மட்டும் கொஞ்சம் கவனமா இருந்திடுங்க மேடம்..இப்போ ராஜன் கேவலம்னு எழுதுவாணுக..அப்புறம் அவனுகளோட இலக்கிய படைப்புகள வெளியிடவோ,புகழ்ந்து பேசவோ மறந்திட்டீங்கன்னு வையுங்களேன்..ராஜனாச்சும் பரவாயில்ல..இவனுக உங்க அம்மா,அம்மம்மா,பூட்டம்மா,பூட்டியம்மா,ஊட்டு வேலைக்காரி தொடக்கம் வீட்டில் இருக்கிற கேரட்,கத்தரிக்காய் பயன்பாடு கூட சொல்லி பேசுவானுக... ஆனா நீங்க நெனைச்சாலும் அவனுக மேல கேஸ் போடமுடியாது பாருங்க..நீங்க எப்பிடி பிரபலமோ அப்பிடி அவனுகளும் பிரபலம் மேடம்...உங்களுக்கு இருக்கிறமாதிரியே அவனுகளுக்கும் என்ன சொன்னாலும் தலையாட்ட ஆயிரக்கணக்கில தலையாட்டி பொம்மைக இருக்குதுக!

நான் உங்க தீவிர விசிறி மேடம்..உங்க பாட்டுக்கு மட்டுமில்ல உங்க உங்க..... வேணாம்..பாருங்க இதகூட சொல்ல இணையவெளியில பயப்பிடுற அளவுக்கு பண்ணிட்டீங்க மேடம்..பின்னீட்டீங்க!இந்த சமந்தா காஜல் கூட உங்கள மாதிரிதானா மேடம்??இனி அவங்களையும் ஜொள்ள முடியாதா?அவிங்களும் உங்கள மாதிரி சின்ன புள்ள விளையாட்டு விளையாடுவாங்களா மேடம்??

இதொண்ணும் மேட்டரே கிடையாது சின்னுமயி,முந்தனாத்து கூட அம்மா பக்கம் ரெண்டு பேரு போயிட்டாங்கன்னு கடுப்பில அவசரமா போன நம்ம கேப்டன விமானநிலயத்தில மறிச்சு தொந்தரவு பண்ணி இம்சை பண்ணி பேட்டி எடுக்கிறன் பேர்வழின்னு பேய்த்தனமா நடந்துகிட்டாங்க ரிப்போர்ட்டர்ஸ்..ஆனா பாருங்க,விஜயகாந்த் அவங்கள நாயின்னு பேசினது தான் பெருசா பேசப்படுது..அவங்க பண்ணினது தப்பில்லையாம்..கேப்டன் பண்ணினது மட்டும் தப்பாம்..அதாவது மேடம்,நாம மத்தவங்கள எவ்வளவு வேணுமோ அவ்வளவுக்கு சூடாக்கலாம்...ஆனா அவிங்க சூடாகும்போது படார்னு பிடிச்சு போலீஸ்கிட்ட குடுத்திடனும்..இதனால நீங்க உள்ள போயிடுவீங்களோன்னு பயப்பிடுறதுக்கு ஒண்ணுமே இல்ல அம்மணி!

முதலில வைரமுத்து மேல ஐஸ் மேடத்த கேஸ் போட சொல்லுங்க "சினம்"யி"..அவரு தான் "பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்"ன்னு ஆபாசமா எழுதினவரு...ஆமா மேடம் அப்பிடி ஒரு பாட்டு உங்களுக்கு பாட சான்ஸ் வந்தா அந்த கணமே கவிஞர் மேல கேஸ் பைல் பண்ணிட்டுதான் மிச்ச வேலை பாப்பீங்களா??தொழிலு போயிருமே..செலிபிரெட்டி இமேஜ் டேமேஜ் ஆயிராது?அதனால அவிங்க மேல எல்லாம் உங்க ஆபாச கேஸ் பாயாதுன்னு தெரியும் மேடம்..இதுகூட தெரியாத பகுத்தறிவாதியா நானு! அடடே...கண்ணதாசன் வேற மேல போயிட்டாரே...ஆனா இந்த வாலிபக்கவிஞர் வாலி'ய புடிங்க மேடம் புடிச்சு ஜெயிலில போடுங்க..!

என்னைய உங்க "பர்சனல்"அட்வைசரா வைச்சுக்கிட்டீங்கன்னா..இத மாதிரி பல பல பலான அட்வைஸ் தரலாம் மேடம்..நீங்களும் புடிச்சு புடிச்சு ஜெயிலில போடலாம்..இலக்கியவாதிக ஆளுக்காள் அடிச்சுக்குவாங்க...சும்மா இருந்த பதிவுலகம் பரபரப்பாகும்..ட்விட்டர் சோர்ந்து போயி கிடக்கும்..பேஸ்புக் பிச்சிக்கும் மேடம்...உங்க சேவை நாட்டுக்கு தேவை...!!
நானெல்லாம் பெண்ணியத்துக்கு எதிரானவர்கள்னு அடிக்கடி திட்டுற என் நண்பி இன்று மாலை அழைப்பெடுத்து கூறினாள்,"ஆனந்தவிகடன் ஜூவி'ல எல்லாம் சின்மயிக்கு சப்போர்ட்டா தான் எழுதி இருக்கு..உங்களுக்கு தான் லூசுடா"..அவளும் கடந்த சில நாட்களாக சின்மயி பிரச்சனை என்ன என்று கேட்டுக்கொண்டே இருக்கிறாள்;இன்னமும் விளக்கம் கொடுத்தபாடில்லை.இப்படியான பிரபலங்களுக்கு வரிந்துகட்டும் ஊடகங்களும்,ஒண்ணும்தெரியா பொண்ணுங்களும்,அவர்களின் பெண்ணியமும் இருக்கும்வரையில் ஒன்ன அசைச்சுக்கமுடியாது அம்மணி Dont Worry..!

குறிப்பு:என்னைய புடிச்சு ஜெயிலில போட போறீங்கன்னா முதல்லே ஒரு நோட்டீஸ் அனுப்புங்க மேடம்..இன்னும் கொஞ்சம் உங்க புகழ் பாடித்தான் ஜெயிலுக்கு போகணும்கிறது என்னோட கடைசி ஆசை கண்ணு..(அட என்னோட கண்ணை சொன்னேங்க)

இது சம்பந்தமாக என்னோட முதல் பதிவு:சின்மயி விவகாரம் என்னாச்சு..??

இப்படிக்கு 
உங்க ரசிகன்,அல்லக்கை,அடிப்பொடி,

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...