Saturday, October 27, 2012

சின்மயி விவகாரம் என்னாச்சு..?



எல்லையற்ற சுதந்திரத்தை பாவனையாளருக்கு தந்திருக்கும் சமூகவலைத்தளங்கள் அதன் பாவனையாளர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில தெரிவுகளையும் வழங்குகிறன.அது தான் தங்களுடைய அதிமுக்கியமான தகவல்களை மற்றையோர் பார்வையிலிருந்து மறைப்பதுவும்,தங்களுக்கு பிடிக்காதோரை,தொல்லை தருவோரை தங்கள் பக்கம் வரமுடியாத வகையில் தடுத்துவைக்கும்(Block) செய்யும் வசதியுமாகும்.

என்னுடைய நண்பர்கள் சிலர் சமூகவலைத்தளங்களில் என்னுடைய "அலப்பறை" தாங்கமுடியவில்லை என்று என்னிடமே நேரில் கூறியிருக்கின்றனர்.என்னுடைய பதிவுகள் பிடிக்காவிட்டால் என்னை உங்கள் பக்கத்திலிருந்து நீக்கிவிடுங்கள் என்று கூறினேன்.அதற்காக தானே அந்த வசதியை வழங்கியிருக்கிறார்கள்.பிடிக்காத நபர்களிடமிருந்தும் பிடிக்காத பதிவுகளிலிருந்தும் விலகி இருப்பது ஒவ்வொருவரினதும் சுதந்திரமே! 

அதே போல என்னுடைய நண்பர்கள் சிலர் அடிக்கடி என்னுடைய படங்களை "நானும் காமடி பண்ணுகிறேன்" என்று நகைச்சுவையாக சித்தரித்து வெளியிடுவார்கள்.சிலவற்றை அனுமதிக்கலாம்.நண்பர்களுக்குள் நகைச்சுவை,கலாய்த்தல் விடயங்கள் சாதாரணமே,ஆனால் வேறு சில எனக்கே எரிச்சலூட்டுபவையாக இருக்கும்.அவற்றை நீக்கிவிட கேட்பேன்.அவர்கள் மறுக்கும்பட்சத்தில் என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கிவிடுவேன்.அத்துடன் பிரச்சனை முடிந்துவிடுகிறது.மாறாக நானும் அவர்களை போல பதிலுக்கு கலாய்த்தால் பிரச்சனை வளருமே தவிர அது தீர்வாகாது.என்னதான் நண்பர்களுக்கிடையே பதிலுக்கு பதில் கலாய்த்தலாக இருந்தாலும் கூட,ஒரு சமயத்தில் அது பழிக்கு பழி என்று தான் போய் முடியக்கூடிய வாய்ப்புகள் அதிகம். 

                                


சின்மயி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராஜன்(ராஜன் லீக்ஸ்)சாதாரண டுவீட்டர்களில் இருந்து சற்றே வேறுபட்டு பலரும் பொதுவில் பேச தயங்கும் விடயங்களை கூட பகிரும் ட்விட்டர்,பதிவர்.கெட்ட வார்த்தைகளும்,காமம் சார் கீச்சுக்கள்,பதிவுகளும் இவரின் கைகளில் சர்வசாதாரணம்.சிலர் முகம் சுளித்தாலும் கூட,பலரும் அவரின் பகிர்வுகளை ரசித்தவர்கள் தான் என்பதை மறுக்கமுடியாது;என்னையும் சேர்த்து.சாதாரணமாக ட்விட்டரில் இருக்கும் பெரும்பாலானோருக்கும் இவரை தெரிந்திருந்தது.இவரின் வார்த்தை பிரயோகம் இது தான் என்று சின்மயிக்கும் கூட தெரிந்தே இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.அல்லது சின்மயி விடயத்தை கையிலெடுக்கும் போதாவது சின்மயிக்கு இவரை பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும்,பலர் கூறியும் இருப்பார்கள்.

சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் என்றாலே தமிழர்களுக்கு கடவுள் மாதிரி என்ற அசட்டுத்தனமான நம்பிக்கையின் மேல் இருக்கும் வரலாற்று கடமையினை செய்வதில் கூட சின்மயி தவறியே இருக்கிறார்.தமிழர்கள் சார்ந்த முழு பதிவுகலகமே தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பற்றி தத்தமது வலைப்பதிவுகளில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்த அந்த சமயத்தில் அவ்விடயத்தை பற்றி சின்மயி கூறிய கருத்துக்கள் எந்தவொரு தமிழனின் இரத்தத்ததிலும் சூட்டை கிளப்பகூடியது தான்.நான் கூட அச்சமயத்தில் அவரின் கருத்தை பார்த்து கோபப்பட்டிருந்தேன்.இது மிகவும் இலகுவில் உணர்ச்சிவசப்படகூடிய விடயம்,அதனில் காமெடி பண்ணுவதோ அல்லது விளக்கெண்ணெய்தனமாக கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது என்பதோ மிகத்தவறானது.அதுவும் தமிழர்கள் மிகவும் மதிக்கும் "உயர்ந்த,புனிதமான" இடத்தில் பின்னணி பாடகியாக இருந்துகொண்டு சின்மயி இவ்வாறு செய்தமை அனைவரினதும் கடுப்பையும் கோபத்தையும் கிளறிவிட்டிருந்தது. 

My Photo

சமூக வலைத்தளங்களில் பொதுவில் கருத்துக்களை பகிரும்போது அதற்க்கான எதிர்வினைகள் கட்டாயம் கிடைத்தே தீரும்.அவற்றை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் இந்த விடயங்களை தவிர்ப்பதோ அல்லது இப்படியான இடங்களில் இருந்து விலகி இருப்பதோ தான் சிறந்தது.புத்திசாலித்தனமும் கூட.அதைவிட்டுவிட்டு சற்றும் பொறுப்பேயில்லாமல் கோமாளித்தனமான கருத்துக்களை பொதுவில் பகிர்ந்துவிட்டு அதற்க்கு எதிர்வினை வரும்போது போய் போலீசில் கைய பிடிச்சு இழுத்திட்டான்னு முறைப்பாடு செய்வது போன்ற செயல்கள் இன்றைய சிறுவர்கள் மத்தியில் கூட இருக்குமா தெரியவில்லை. 

ராஜன் பற்றி தெரிந்து தான் சின்மயி கூட எதிர்வினையாற்றினார்.பொதுவாக இரண்டு நண்பர்களுக்கிடையே பேச்சு முடிந்து மோதல் முற்றுகையில் தானாக வெளியே வருவது கெட்டவார்த்தைகள் தான்..அதுவே சற்று அதிகமானால் வீட்டு வேலைக்காரி வரைக்கும் இழுத்து நடுவீதியில் விடுவதற்கு தயங்கமாட்டார்கள்.அப்படி இருக்கும்போது ராஜனை சீண்டி விட்டு,உசுப்பேற்றி விட்டு பிரச்னையை நன்றாக முற்ற விட்டு தன் வலையில் சிக்கும்வரை பொறுத்திருந்து தான் சிறந்த தந்திரவாதி என்கின்றதை நிரூபித்திருக்கிறார் சின்மயி.

ஆண்கள் எதுவேண்டுமானாலும் பேசலாம்,பெண்கள் இதை தான் பேசவேண்டும் என்று வரையறுத்து வைத்திருப்பது தானே சமூக விதி,அதைத்தானே நீங்களும் வழிமொழிகிறீர்கள் என்று இதைப்பற்றி பேசும்போது ஒரு நண்பி கூறினார்.கருத்து மோதல் உச்சத்தை அடையும்போது இத்தகைய சம்பவங்கள் நடப்பது இயல்புதானே.அது தானே ஆண்களின் சுபாவமும் கூட.ஆண் படைக்கப்பட்ட விதம் அப்படி.இதனுள் எந்த ஆணிய கருத்தையும் நான் உட்சேர்க்கவில்லை,என்னுடைய பொதுப்படையான அவதானிப்பின் வெளிப்பாடுதான் இது என்றேன். 

ராஜன் கெட்டவார்த்தைகளை பேசியிருக்க கூடாது என்று அவனை வம்புக்கு இழுத்துவிட்டு கூறமுடியாது தானே.பாடகியாக புகழ் பெற்ற சின்மயி தனக்கு பெரிதாக தெரியாத அரசியல் பற்றி கதைக்கவெளிக்கிட்டது ஏன்?இப்படி எதிர்வினை வரும் என்று தெரிந்து தானே வெளியிட்டார்?அது போல அதற்க்கு வரும் எதிரிவினைகளை மட்டும் "இப்படி பேசாதீர்கள்...இது கெட்ட பழக்கம்"என்று எப்படி கட்டுப்படுத்த முடியும்?

                   

தனது கருத்துக்களுக்கான எதிர்கருத்துக்களை தீரமாக எதிர்கொண்டார் சின்மயி,அதே சமயம் தனக்கேயான சில வினைகளையும் வைத்துக்கொண்டார்.இது வீதியில் சென்ற பாம்பை பிடித்து சட்டைக்குள் விட்ட கதை தான்.பாம்பு நாக்கு வெளித்தள்ளும்,கடிக்கும் என்று தெரிந்து தானே செய்தார்?இது சின்மயி தனக்கு தானே மூட்டிக்கொண்ட தீ.இது இவ்வளவு பெரிய பிரச்சனையானதற்க்கு ஒரு காரணம்,இது பெண்ணியம்-ஆண் அதிகார போக்கு-பெண் அடக்குமுறை என்று வேறுவிதமாக திசைதிருப்பப்பட்டது தான்.பெரும்பாலான பெண்கள் சின்மயி பெண் என்ற ஒரே காரணத்துக்காக,பிரச்சனை பற்றி எதுவும் தெரியாமலே சின்மயி பக்கம் நிக்கின்றார்கள்.இவர்களுக்குள்ளும் அடுத்த சின்மயி யார் என்கின்ற போட்டி வைக்கலாம்.

ராஜன் செய்தது ஒரு தப்பென்றால்,அதே தப்பை செய்ய தூண்டிய சின்மயியும் தப்பானவரே..!  

குறிப்பு:இப்பதிவில் நேற்று குறிப்பிட்ட நண்பியுடன் விவாதித்த கருத்துக்களும் உள்ளடக்கம்,இதனை எழுத தூண்டியமைக்கு நன்றிகள்.அத்துடன் தினசரி அழைப்பு செய்தும்,பேஸ்புக்கில் சாட்டில் வந்தும் இந்த சின்மயி மேட்டர் என்ன என்று முனைப்புடன் விசாரிக்கும் நண்பர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.இதுபற்றி எழுதவேண்டாம் என்று இருந்தேன்.கடைசியில நானும் இது பற்றி எழுதவேண்டியதை போய்விட்டது.

Post Comment

11 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...