Saturday, July 9, 2011

காப்பியடித்த ரஜனி மற்றும் 'போராளி"சசிக்குமார்!!!

பெரிய இது ஒரு நீளமான சினிமா பதிவுங்க...நேரமிருந்தா வாசியுங்க..ஏன் இவ்வளவு நீளமா இருக்குன்னு வாசிக்கும் போதே உங்களுக்கு தெரிய வரும்..!!

தீபாவளி,பொங்கல், மாதிரி டிசம்பர் 12ம் தேதி ரஜினி ரசிகர்களுக்கு பண்டிகை திருநாள்... சூப்பர் ஸ்டார் பிறந்த அன்று நடந்த நிகழ்சியை பற்றி அவரது அண்ணன் சத்யநாரயணராவ்கெய்குவாட் அவர்களிடம் பேசினோம்.

'' நல்லா ஞாபகம் இருக்கு... 1950, டிசம்பர் 11ம் தேதி ராத்திரி. அம்மா பிரசவ வலியால துடிக்குறாங்க அப்படியும், இப்படியும் புரண்டவங்க கொஞ்ச நேரத்துல கண்ணசந்து தூங்கிட்டாங்க. அப்போ அவங்க கனவுல மகான்கள் வர்றாங்க... கடவுள், 'கவலைப்படாதே... உனக்கு நல்லபடியா மகன் பிறப்பா..' என்று ஆசீர்வாதம் பண்றார். மறுநாள் காலை மறுபடியும் பிரசவவலி. அப்போ எனக்கு 19வயசு... அப்பா ராமோஜிராவ்கெய்குவாட் போலீஸ்காரர். கார்ல கூப்பிட்டு போகணும்னு ஆசை... ஆனா அதுக்கு கையில காசு, பணம் இல்லை. தனியார் ஆஸ்பத்திரியில சேர்க்கிற அளவுக்கு எங்க குடும்பத்துல அப்படி ஒண்ணும் வசதி கிடையாது. பெங்களூர்ல இருக்குற வாணிவிலாஸ். அரசு மருத்துவனைக்கு அம்மாவை நானும், அப்பாவும் அழைச்சிட்டு போனோம்.

காலைல 11 மணிக்கு அம்மாவுக்கு வலி வந்துடுச்சு... 12.12.1950 மதியம் 12 மணிக்கு பொறந்தார் ரஜினி.. நான், நாகேஸ்வரராவ், சகோதரினு இருந்த எங்க குடும்பத்தோட கடைக்குட்டி ரஜினி...

அம்மா கண்விழிச்சு பார்க்குறாங்க... பக்கத்துல என் தம்பி சிணுங்கலோட... மலங்க... மலங்க முழிச்சு பார்க்குறான். அப்பத்தான் நான் ஆரம்பத்துல சொன்ன கனவு என்கிட்டேயும், அப்பாவிடமும் அம்மா சொன்னாங்க... அம்மாவை பார்க்கறதுக்கும், தம்பி பொறந்ததை பார்க்கறதுக்கு சொந்த பந்தம், சாதி சனம் எதுவுமே வரலை.. என்னையும், அப்பாவையும் தவிர அம்மாவுக்கு ஆறுதலா யாருமே இல்லை..

ஒண்டியா படத்துக்கிட்டு என்னை உத்து உத்து பார்த்துட்டு பொக்கை வாய் காட்டி சிரிச்சான்... இன்னிக்கு டிசம்பர் 12ம் தேதி ரஜினி பொறந்த நாள் அன்னிக்கு உலகமே திருநாளா கொண்டாடுது... ஆனா அவன் பொங்களுரூ அரசு மருத்துவமனையில பொறந்தப்ப ஒருத்திரும் வரலை... அன்னிக்கும் சரி... இன்னைக்கும் சரி ஏழைக்கு ஏதுங்க நாதி...

11 வயது பிரைமரி ஸ்கூலு அஞ்சாங்கிளாஸ் படிக்கிறான். அப்பத்தான் அம்மா இறந்துட்டாங்க. எங்க வீட்டு கடைக்குட்டி ரஜினி, அப்பவுமே துறுதுறுன்னு இருப்பான் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதுபோல அம்மான்னா ரஜினிக்கு உசுரு... ரஜினிக்கு உயிர் கொடுத்த அம்மா உடம்பு உயிர் இல்லாம இருந்துச்சு... ஸ்கூல் விட்டு வந்த ரஜினி அப்படியே அம்மா முகத்தை பார்த்து உறைஞ்சு போயிட்டான்.. எப்பவும் சுறுசுறுப்பா வேகமா இருக்கிறவன் அம்மா இறந்த சோகத்துல கொஞ்சநாள் அமைதியாகிட்டான்.

சென்னைக்கு வந்து சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சார். அப்பாவை அடிக்கடி சென்னைக்கு அழைச்சுட்டு போய் பாசமா தன்னோட தங்க வச்சுக்குவார். ரஜினிக்கு 30வயது இருக்கும்... அப்பா ராமோஜிராவ் இறந்துட்டார். 'அபூர்வராகங்கள்' 'மூன்று முடிச்சு' படங்கள்ல தம்பி நடிப்பை பார்த்து ரசிச்சார். என்ன ஒண்ணு... வில்லனா நடிச்சத பார்த்தவர், பிற்காலத்துல ... ஹீரோவா... இப்போ சூப்பர் ஸ்டாரா உசந்து நிக்கறதை பார்க்காம போயிட்டார்...

எந்த சூழ்நிலை பொறந்தோம்னு அவருக்கு நல்லாத் தெரியும்... இப்பக்கூட ஒவ்வொரு டிசம்பர் 12ம் தேதி அன்னிக்கு தன்னோட பழைய ஞாபகத்துல மூழ்கிடுவார்... அதனால் தான் முன்னாடி எல்லாம் 'என் பிறந்த நாள் அன்று வெளியூரில் இருப்பதால் ரசிகர்கள் என்னைத்தேடி வரவேண்டாம்' என்று அறிக்கையை பேப்பர்ல கொடுத்து வந்தார்.

கடைக்குட்டி ரஜினிமேல் எங்கம்மாவுக்கு ரொம்ப பிரியம். நல்ல உத்தியோகத்தில் கை நிறை சம்பாதிக்கனும் என்பது அம்மாவோட ஆசை.. இன்னிக்கி என் தம்பி சூப்பர் ஸ்டாரா இருக்கற காட்சியை பார்க்கரத்துக்கு எங்கம்மா உயிரோட இல்லையேனு நினைக்கும் போது கண் கலங்குது... மனசு பதறுது...

ரசிகருங்க எல்லாம் ரஜினி அரசியலுக்கு வரனும்னு ஆசைப்படுறாங்க... அவருக்கு என்னவோ அதிலே அவ்வளவு இஷ்டம் இல்லை.. சாதாரண நடிகனா நாலு படத்துல தலையை காட்டணும்னுதான் சினிமாவுல நடிக்க சென்னைக்கு வந்தார்.. இப்போ பெரிய நடிகரா உசந்து நிக்கிறான்.. எல்லாத்துக்கும் ஆண்டவனோட ஆசீர் வாதம் காரணம். அதுபோல அரசியலுக்கு வரணும்னு அவர் தலையில ஆண்டவன் எழுதியிருந்தா அதை யாரால தடுக்க

முடியும்...'' என்று மனமுருகினார்..

===========================================================================

''பெற்றவன் கண்ணீரே பெரிய விருது!'' : புதிய போராளி சசி

ளவான தாடியும் அழகான சிரிப்பும் சசிகுமாரின் அடையாளம். அடர்ந்தும் படர்ந்தும் கிடக்கும் தாடி... அள்ளிக் கட்டும் தலைமுடி... மறந்தும் சிரிக்காத உதடுகள்... என வழக்கமான அடையாளத்தை அப்படியே துடைத்து எறிந்துவிட்டு, உக்கிர உருவம் உடுத்தி இருக்கிறார் சசிகுமார். 'போராளி’ - தலைப்பின் தகிப்பைச் சொல்லும் புகைப்படங்கள்.

''ஈசனுக்குப் பிறகு ஆள் எங்கே எனத் தேடுகிற அளவுக்கு அமைதியாகிட்டீங்களே?''

''படங்களைத் தவிர்த்து வேறு எந்த விஷயங்களையும் நான் பேசுறது இல்லை. பேச வேண்டிய சேதிகளை என்னோட பாத்திரங்களின் மூலமாகவே பேசுறேன். ஒவ்வொரு படம் முடிஞ்ச பிறகும், இதே அமைதியில்தான் அடுத்த வேலையில் இருப்பேன்... இருக்கேன்!''

'' 'சுப்ரமணியபுரம்’ என்கிற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தவரின் இரண்டாவது படம் 'ஈசன்’... ஏன்டா இப்படி ஒரு படத்தை எடுத்தோம் என வருந்துகிறீர்களா?''

''நிச்சயமா இல்லை!

என் படத்தின் முதல் ரசிகன் நான்தான். படத்தை எடுக்கும்போதே, இது அனைத்துத் தரப்பினருக்குமான படமா... இல்லை, குறிப்பிட்ட ஒரு சாராருக்கான படமா என்பது தீர்மானமாகிவிடும். 'சுப்ரமணியபுரம்’ அனைத்துத் தரப்புக்கான படம். அணையை உடைச்சுவிட்ட மாதிரி, அது பாய்ந்து பரவியதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், எத்தனையோ பேருடைய வாழ்க்கைக்கு நுழைவு வாயிலா இருக்கிற சென்னை நகரம், சிலரோட வாழ்வைச் சிதைச்சு சின்னாபின்னமாக்கும் மண்ணாகவும் இருக்கு. அந்த பயங்கரத்தைப் பதிவுபண்ணினால், பெற்ற வயிறுகளுக்கான எச்சரிக்கையாக இருக்கும் என எண்ணினேன். 'படம் நீளம்’னு சிலர் சொன்னாங்க. படத்தின் நீளத்துக்காகக் கவலைப்பட வேண்டியது ஒரு தயாரிப்பாளர்தான். 'சுப்ரமணியபுரம்’ மாதிரியே பட்டையைக் கிளப்புற கதை இருக்கு. ஆனால், அதை என்னோட இரண்டாவது படமாப் பண்ண நான் விரும்பலை. 'ஈசன்’ படத்தைப் பார்த்து, நெஞ்சு துடிக்கக் கதறிய ஒரு தந்தையின் கண்ணீர்த் துளிதான் எனக்கான பரிசு. அதைவிடப் பெரிய விருது தேவை இல்லை!''

'' 'ஈசன்’ தோல்விக்குப் பிறகு 'சசி அவ்வளவுதான்’ எனப் பேச்சு கிளம்பியதே... எப்படி உணர்ந்தீர்கள்?''

''நான் யாரைப்பற்றியும் பேசியது இல்லை. எல்லோருக்கும் பிடிச்ச நல்ல பிள்ளையாத்தான் இருந்தேன்; இருக்கேன். 'ஈசன்’ தோல்வியால் யாரும் நஷ்டப்படலை. யாரோட தோல்வியையும் ரசிக்கும் மனோபாவம் எனக்கு இல்லை. அப்படியும் என்னுடைய சறுக்கல் ரசிக்கப்படுதுன்னா, அதிலும் எனக்குச் சந்தோஷம்தான். ஏன்னா, இன்னிக்கு என் தோல்வியை ரசிச்ச வங்க, அன்னிக்கு என் வெற்றியையும் ரசிச்ச வங்கதான். 'சுப்ரமணியபுரம்’, 'பசங்க’, 'நாடோடி கள்’னு நான் திரும்பிப் பார்க்க நேரம் இல்லாமல் ஓடியதை ஆச்சர்யமாப் பார்த்து இருக்காங்க. அதே வேகத்தில் நான் தேசிய விருது வாங்கியதைப் பார்த்து அவங்க திகைச்சு இருக்கலாம். ஆனால், நான் எல்லோருடைய வெற்றிகளையும் ரசிக்கிறேன். இந்த வருஷம் தமிழ் சினிமா நிறைய தேசிய விருதுகளை வாங்கினப்ப, என் மண்ணுக்கான விருதா நெனைச்சுப் பூரிச்சேன். தமிழக மக்களும் இதைக் கொண்டாடணும். மண்ணின் பிரதிபலிப்புகளைப் படம் பிடித்ததற்காக, எந்தக் கலைஞனும் விருதுகளுக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. தோல்வியை ஒப்புக்கொள்கிற பக்குவம் எப்ப பிறக்குதோ, அப்பவே நாம ஜெயிச்சிட்டோம்னு அர்த்தம். அனுராக் காஷ்யப் ஆபீஸ் போயிருந்தேன். அவரோட 'நோ ஸ்மோக்கிங்’ படத்தின் ஸ்டில்லை ஒட்டி '26 ஆன் ஸ்க்ரீன்’, 'அவுட் ஆஃப் ஸ்க்ரீன் 30’-னு போட்டு இருந்தார். 'என் படம் நாலே நாள்தான் ஓடியது’ என்பதை அவர் பகிரங்கமாகச் சொல்லி இருந்ததைப் பார்த்து மிரண்டுபோனேன். அடுத்து, பாலாஜி சக்திவேல் சார்... 'கல்லூரி படம் ரொம்ப நல்லா இருக்கு’ன்னு ஒரு நண்பர் சொன்னப்ப, 'நான் அந்தப் படத்தைச் சரியா பண்ணலைங்கிறது எனக்கே தெரியும். அடிக்கிற காயத்தைவிட, சொறிகிற காயத்துக்கு நான் ஆளாக விரும்பலை’ன்னு சொன்னாராம். இதைக் கேட்டப்ப, எனக்குச் சிரிப்பு வரலை. தோல்வியை மகுடமா நினைக்கிற மனப் பக்குவம்தான் வந்துச்சு. ஆரம்பத்திலேயே ஜெயிக்கிறதைவிட ஒரு தோல்விக்கு அப்புறம் ஜெயிச்சுப் பாருங்க... காயத்தின் மீது பூசப்பட்ட களிம்பா, அந்த வெற்றி உங்களைப் பூரிக்கவைக்கும்!''

'' 'போராளி’ங்கிற டைட்டிலும் ஆவேசமான படங்களும் ஈழம் சம்பந்தமான கதையோன்னு யோசிக்கவைக்குதே?''

''இது ஒரு தனி மனுஷனோட போராட்டக் கதை. மக்களுக்காக - மண்ணுக்காக - சோற்றுக்காக - சுதந்திரத்துக்காகன்னு போராடுற எல்லோருமே போராளிகள்தான். பொழுதைக் கழிக்கப் போராடுறவங்களுக்கு மத்தியில், போராட்டமே ஒவ்வொரு பொழுதுமா விடியும் ஒருத்தனோட கதை. கருவேல மரங்களுக்கு மத்தியில் நடிச்சப்பதான், அந்த மரத்தையே நிழலா நினைச்சு வாழும் மக்களோட வலி தெரிஞ்சது!''

''நீங்கள் இயக்க, சமுத்திரக்கனி நடிக்க... அவர் இயக்க நீங்கள் நடிக்க... இந்த நட்புச் சங்கிலி நல்லா இருக்கே?''

''இரண்டு பேர் பிரிஞ்சிட்டாங்கன்னா... அதை அதிர்ச்சியா விசாரிக்கலாம். இரண்டு நண்பர்கள் சேர்ந்து இருக்கிறதை ஆச்சர்யமாப் பார்த்தால் எப்படி? முன்பே போட்ட ஒப்பந்தப்படி, இரண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா ஓடிக்கிட்டு இருக்கோம். இதே மாதிரி எல்லாரும் சேர்ந்து ஓடணும்கிறதுதான் எங்களோட எதிர்பார்ப்பு. 'நட்பே ஜெயிக்கட்டும்’னு, 'நாடோடிகள்’ படத்தில் பாட்டாகவும் காட்சியாகவும் விரிந்தது எல்லாமே மனசுக்குள் இருக்கிற நட்பால்தான். ஈகோவும் பொறாமையும் இல்லைன்னா... எல்லாருமே நண்பர்கள்தான்!''

''ஸ்ரீதேவி வீட்டில் டின்னர்... த்ரிஷாவுடன் பேச்சுவார்த்தை... அமலா பாலை ஜோடியாக நடிக்கச் சொல்லி வற்புறுத்தல்... என 'மன்மதன்’ அளவுக்கு உங்களைச் சுற்றி சர்ச்சைகள் கிளம்புவது ஏன்?''

''ஒரு படத்தை முடிச்சிட்டு நான் இடைவெளிவிட்டால், என்னைப்பற்றி அப்போதும் ஏதாவது பேசணும்னு எதிர்பார்க்கிறாங்க. நான் சைலன்ட்டா ஒதுங்கிடுறதால், ஏதேதோ எழுதுறாங்க. ஸ்ரீதேவியை இதுவரைக்கும் நான் நேர்ல பார்த்ததே இல்லை. ஆனா, அவங்க மகளை என் படத்துக்காக நான் பார்க்கப்போனதா எழுதினாங்க. படத்தில் புக் பண்ணுவது சம்பந்தமா எந்த நடிகையிடமும் பேசும் பழக்கம் எனக்கு இல்லை. அப்படி இருக்க, த்ரிஷாகிட்ட பேச்சுவார்த்தை நடக்கிறதா பரபரப்பு... அப்புறம் என் பெயரைச் சொல்லி, அமலா பாலுக்கு யாரோ போன் பண்ணியதா செய்தி. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல்தான் போலீஸுக்குப் போய் புகார் பண்ணினேன். இப்போ படத்தில் சுவாதி, வசந்தா, நிவேதான்னு மூன்று ஜோடி. இனி எனக்கு யாரும் ஜோடி தேட வேண்டிய அவசியம் இல்லை!''

''உங்க குரு அமீர் அத்தனை விவகாரங்களிலும் பட்டையைக் கிளப்புறார். ஆனால், நீங்க சினிமா தவிர்த்து பொதுவான விஷயங்களில் எப்பவுமே தலையைக் காட்ட மாட்டேங்கிறீங்களே?''

''அமீர் அண்ணன் ஆரம்பத்தில் சில விவகாரங்களில் பேசினப்ப, 'உங்களுக்கு இது தேவையா?’னு ஆதங்கப்பட்டவன் நான். ஆனால், இன்னிக்கு அண்ணன் பண்றது சரின்னுதான் தோணுது. ஒரு குடும்பத்தில் மூணு அண்ணன் தம்பிகள் இருந்தால், எல்லாருமே ஒருத்தரைப்போல் இருக்கிறது இல்லை. அமைதியையே அடையாளமா வெச்சிருக்கார் என் மூத்த அண்ணன் பாலா. எதையும் துணிச்சலா தட்டிக்கேட்கிறார் என் சின்ன அண்ணன் அமீர். இதை எல்லாம் ஆச்சர்யமாப் பார்த்தபடி சினிமா வைச் செய்றதுதான் இந்தத் தம்பியோட வேலை. என்னால் 10 இயக்குநர்கள் உருவாகணும்கிறதுதான் என்னோட ஆசை, இலக்கு எல்லாமே!

எனக்கு 'பசங்க’ பண்ணித் தந்த பாண்டிராஜ் கண்களில் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்தப்ப மனசுக்குள் உருவான வைராக்கியம் இது. அடுத்து என்னோட அசிஸ்டென்ட் பிரபுவை இயக்குநரா மாத்தப்போறேன். விடியலுக்கான கயித்தைப் பிடிச்சிட்ட சந்தோஷத்தில் கொண்டாடுறான். பிறக்கிறதைவிட, பிரசவிக்கிறதுதான் பெரிய சுகம்!''

நன்றி-சினிமா விகடன்
கடந்த வாரம் முழுவதுமாய் பதிவு போடவில்லை..பெரிதாக நண்பர்கள் தளங்களுக்கும் செல்லவில்லை..அடுத்த கிழமையிலிருந்து எல்லாம் சரியாகுமென்று நம்புகிறேன்..

Post Comment

24 comments:

தனிமரம் said...

Palkooppi solunga pinal Varan.

தனிமரம் said...

வணக்கம் பாஸ் என்னதான் ரஜனி ரசிகன் என்றாலும் ஒரே பதிவு இரண்டுதரம் வருவதால்தான் நீளமோ .
சினிமா செய்தி படிக்கும் பழக்கம் கூடிக்கொண்டு வருகிறது.
 சசி வித்தியாசமானவர்தான் உண்மையில்.

தனிமரம் said...

என்னையா சூடா பால்கோப்பி சொல்லுங்கள் என்று சொல்லி அரைமணித்தியாலம் ஆச்சு .நீங்கள் ரஜனி காப்பியடித்தார் என்று கதை போடிவது சரியா மாப்பூ!

தனிமரம் said...

போராளி என்று புதிய சர்ச்சையைக் கிளப்பிறீங்க பாஸ்!

தனிமரம் said...

என்ன போனவாரம் பூராகவும் ஹான்சிஹாகூட சாட்டிங்கா? ஒட்டைவடைகூட ஓடிப்போய்விட்டார் ஒரு பதிவும் போடாமல்!

கூடல் பாலா said...

கொஞ்சம் நீளம்தான் .....

Shiva sky said...

சீக்கிறம் வாங்க பாஸ்....

A.R.ராஜகோபாலன் said...

கலக்கலான பதிவு நண்பரே
அடிச்சு தூள் பண்ணுங்க

Anonymous said...

'' 'போராளி’ங்கிற டைட்டிலும் ஆவேசமான படங்களும் ஈழம் சம்பந்தமான கதையோன்னு யோசிக்கவைக்குதே?''

''இது ஒரு தனி மனுஷனோட போராட்டக் கதை. மக்களுக்காக - மண்ணுக்காக - சோற்றுக்காக - சுதந்திரத்துக்காகன்னு போராடுற எல்லோருமே போராளிகள்தான். பொழுதைக் கழிக்கப் போராடுறவங்களுக்கு மத்தியில், போராட்டமே ஒவ்வொரு பொழுதுமா விடியும் ஒருத்தனோட கதை. கருவேல மரங்களுக்கு மத்தியில் நடிச்சப்பதான், அந்த மரத்தையே நிழலா நினைச்சு வாழும் மக்களோட வலி தெரிஞ்சது!''///ஆகா என்னே ஒரு அருமையான பதில் ...

vidivelli said...

nallayirukku ungka pathivu..
valththukkal,,,

கார்த்தி said...

ஏன் சார் ஏன்?? நீங்களுமா???

Unknown said...

ஆமா ஏன் ரெண்டுதரம் ரஜினி?

shanmugavel said...

நடத்துங்க சிவா நடத்துங்க!

சக்தி கல்வி மையம் said...

வாங்க..வாங்க..

Yoga.s.FR said...

அவசரமா வெளியில போக வேண்டியிருக்கிறதால நீ.............ளமா நீங்கள் எழுதியிருக்கிறத படிக்க முடியேல்ல!நாளைக்கு வந்து படிச்சிட்டு சொல்லுறன் மொக்கையோ,சக்கையோ எண்டு!

நிரூபன் said...

ரஜினியின் பிறப்பு பற்றிய அவரது அண்ணனின் கருத்துக்கள், மற்றும் புதிய போராளி சசியின் பேட்டியினையும் பகிர்ந்திருக்கிறீங்க.

நன்றி பாஸ்.

சுதா SJ said...

சினிமா ரசிகனுக்கு நல்ல விருந்து வைத்து விட்டீர்கள் பாஸ்
தேங்க்ஸ் பாஸ்

Mahan.Thamesh said...

நல்ல சுவாரசியமான சினி செய்திகள் பகிர்வுக்கு நன்றி அண்ணே

கவி அழகன் said...

எங்கடா ஆள காணல எண்டு பாத்தா நீட்டம முழங்கியிருகார் புலி பதுங்கிறது பாயிரத்துக்கு தானே

உணவு உலகம் said...

கடந்த வாரத்தில் காணாமல் போனதை, இவ்வளவு நீள பதிவைப் போட்டு சரி கட்டீட்டீங்களே!

Unknown said...

thanks for sharing!

தமிழ்வாசி பிரகாஷ் said...

நீநீநீளளளமாமானன பதிவு....

காட்டான் said...

ரஐனி  நலமடைய வாழ்த்துக்கள்...ஆனால் ரஜனிஅரசியலுக்கு வர தகுதியற்ற நபர்  கர்நாடகத்தில் ஒரு மாதிரியும் மும்பையில் ஒருமாதிரியும் பேசுவார் மரம் வெட்டி ராமதாசுக்கு பயந்து இவர் அடித்த குத்துக்கரணங்களை தமிழ் நாடு மறந்திருக்காது

காட்டான் said...

ரஐனி  நலமடைய வாழ்த்துக்கள்...ஆனால் ரஜனிஅரசியலுக்கு வர தகுதியற்ற நபர்  கர்நாடகத்தில் ஒரு மாதிரியும் மும்பையில் ஒருமாதிரியும் பேசுவார் மரம் வெட்டி ராமதாசுக்கு பயந்து இவர் அடித்த குத்துக்கரணங்களை தமிழ் நாடு மறந்திருக்காது

Related Posts Plugin for WordPress, Blogger...