Saturday, July 28, 2012

பாக்கியராஜ்'ஜின் "புதிய வார்ப்புகள்"..!

பாரதிராஜாவின் "கிழக்கே போகும் ரெயில்" மற்றும் "புதிய வார்ப்புகள்" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வாரம் கிடைத்திருந்தாலும், "புதிய வார்ப்புகள்"ளையே சில தினங்களுக்கு முன்னர் பார்க்க கிடைத்தது.சிறு வயதில் ஒரு தடவை பார்த்திருந்தாலும்,படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட வேண்டும் என்று தூண்டியது என்னமோ பள்ளிப்பருவம் முடிந்த பின்னரான வாசிப்பு தேடலில் நான் பார்த்த அனேக இடங்களில் "புதிய வார்ப்புகள்" பற்றி ஏதாவது ஒரு குறிப்பு காணக்கிடைத்தமை தான்.





தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞர் பாக்கியராஜ் ஹீரோவாக நடித்த முதலாவது படம்.(இதற்க்கு முன்னராக,பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்திருந்தார்).சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வசனகர்த்தாவாக இருந்த பாக்கியராஜ்'ஜை புதியவார்ப்புகள் படத்தின் மூலம் ஹீரோவாகி இருந்தார் பாரதிராஜா.



1979 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது  பெற்ற அன்றைய கால சினிமாவில் மட்டுமன்றி இன்று வரைக்கும் புகழப்படும் திரைக்காவியம் தான் இந்த புதிய வார்ப்புகள்.கிராமத்து மணம் தவழும் பாரதிராஜாவின் அக்மார்க் திரைக்கதை.பின்தங்கிய கிராமம் ஒன்றுக்கு வாத்தியாராக செல்லும் பாக்கியராஜ் அங்குள்ள ஒரு பெண் மீது காதல் கொள்வதும்,காமுகனை ஊரிலுள்ள பெண்களை எல்லாம் தன் ஆசைக்கு ஊறுகாயாக பாவிக்கும் கிராம தலைவரால் அக்காதலுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் மற்றும் பல கிராமத்து குறும்புகள்,கூத்துக்கள் தான் படத்தின் கதை.படத்தின் நாயகி ரதி.கிராமத்து கேரக்டருக்கு பொருத்தமான தெரிவு.

படிக்காத கிராமத்து மக்கள் எவ்வாறு கிராமத்து "தலைவர்களால்" ஏமாற்றப்படுகின்றார்கள் ஏமாந்து போகின்றார்கள், அவர்களின் சிந்தனை திறனும் எடுக்கப்படும் முடிவுகளும் எந்தவகையில் அமைகின்றன அவை எவ்வாறு அவர்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகின்றன போன்ற பல்வேறு விளிம்புகளை பாரதிராஜா தொட்டுசென்றிருக்கின்றார்.படத்தை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்,இன்றைய காலகட்டத்தோடு பொருந்தி பார்ப்பதை விட அன்றைய காலகட்டத்துடன் பொருத்தி பார்க்கையில் தான் "புதிய வார்ப்புகள்" அன்றைய கால தாக்கத்தை உணர்ந்துகொள்ள கூடியதாக இருக்கும்.



படத்தில் கவுண்டமணி மற்றும் ஜனகராஜ் ஆகியோர் ரொம்ப இளையவயதினராய் உங்களால் பார்க்கமுடியும்.கவுண்டமணி ஊர் பெரியவனின் கையாளாக வந்து எப்போதுமே "உள்ளதை சொல்றீங்க" "உள்ளதை சொல்றேன் ஐயா" என்ற இரு வசனங்களையும் கொண்டே படத்தில் நடித்து முடித்திருப்பார் அல்லக்கையாக.இறுதியில் தனக்கென ஆபத்து வரும்போது திருந்தி நல்லவனாகின்றார்.கிராமத்தில்  மூளைவளர்ச்சி குன்றியவனாக ஜனகராஜ் நடித்திருப்பார்.வேறு தெரிந்த முகங்கள் யாரும் இல்லை.படத்தில் குடும்பக்கட்டுப்பாட்டு அதிகாரியாக ஒரு பெண்வருவார்,இறுதியில் அவரும் கிராமத்தலைவருக்கு ஊறுகாய் ஆகி இறப்பார்.பாவம்.பெயர் தெரியவில்லை.

கதாநாயகனாக படத்தில் நடிப்பவர் அந்த கட்டம் கட்டமான மூக்கு கண்ணாடி அணிந்திருக்கவேண்டும் என்று பாத்திரத்தை படைத்த பாரதிராஜாக்கு பாக்கியராஜ் தான் கண்ணுக்கு தெரிந்திருக்கிறார்.பின்னைய படங்களில் கூட அந்த கண்ணாடி பாக்கியராஜுடன் ஒட்டிக்கொண்டுவிட்டது.அதுவே அவரின் ஒரு அடையாளமாய் கூட மாறிவிட்டிருந்தது. 

16 வயதினிலே'வில் ஆரம்பித்து 'புதிய வார்ப்புக்கள்' வரை பார்த்துவிட்டு எல்.வி.பிரசாத் தன்னை உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்ள முடியுமா என்று கேட்டதை தனது உச்சபட்ச கௌரவமாக எடுத்துக்கொள்வதாகச் சொல்வார் பாரதிராஜா என்று விகடனில் ஒரு தடவை வெளிவந்திருந்தது.!புதிய வார்ப்புகள்' படத்தில் 'உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா' என ஒரு பெண் கேட்பார். 'நான் அநாதைங்க. அப்பா- அம்மா உயிரோடு இல்லை!' என வசனம் பேசுவார் பாக்யராஜ். அந்தப் படம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன் இறந்துவிட்டாராம் பாக்யராஜின் அம்மா. இன்றும் அந்தப் படத்தின் அந்தக் காட்சியைக் கடக்க நேர்ந்தால், கண்ணீர் கட்டுமாம் பாக்யராஜுக்கு!



படத்தின் இசை நம்ம இளையராஜா.பாடல்கள் கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் .படத்தின் பாடல்கள் அத்தனையும் சிறப்பு என்றாலும் ஷண்முகப்பிரியா ராகத்தில ராஜா கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு இசையமைத்த "தம்தன தம்தன தாளம் வரும்" என்கின்ற பாடல் தான் அனைத்தையும் தாண்டி காலத்தை வென்றது.இன்று கேட்டாலும் ராஜாவின் இசை நெஞ்சை வருடிச்செல்லும். இது தான் அந்தப்பாடல்;

தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுப வேளை வரும்
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது..

சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது மணம் நில்லென சொல்லியும் துள்ளியது ..
சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது மணம் நில்லென சொல்லியும் துள்ளியது  
பெண்மனம் பூவிலும் மெல்லியது தவிக்கும் நினைவோ எனைக்கிள்ளியது.
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ மன்னவன் தந்தனன் நெஞ்சனையோ 
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ இனி கனவுகள் தொடர்ந்திட....

சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ கயல் சிந்திஎழ
மணம் மன்னவன் உன்னடி வந்து தொழ..  

சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ கயல் சிந்திஎழ
மணம் மன்னவன் உன்னடி வந்து தொழ..  
சிந்திய பூமலர் சிந்திவிழ அணுபோல் உணர்வோ தினம் முந்திஎழ 
அந்தியில் வந்தது சந்திரனோ சந்திரன் போல் ஒரு இந்திரனோ..
முந்தைய நாளினில் எந்தன் முன்பலனோ துணை சுகம்தர சுவை பெற... 

(ஜென்சி இளையராஜாவுடன் )

இந்த பாடலை பாடியவர் ஜென்சி.இவ்விடத்தில் ஜென்சி பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும்.அதிகமான பாடல்களை பாடியிருக்காவிட்டாலும்,இளையராஜாவின் இசையில் அற்புதமாய் சில பாடல்களை பாடியிருக்கின்றார்.உதாரணமாய் மேற்கூறிய பாடல்,மற்றும் "அலைகள் ஓய்வதில்லை"யில் "காதல் ஓவியம்", வாடி என் கப்பக்கிழங்கே, "நிறம் மாறாத பூக்க"ளில் ஆயிரம் மலர்களே மலருங்கள் போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கன.ஒரு நான்கு ஐந்து ஆண்டுகளே பின்னணி பாடகியாய் பாடி இருக்கிறார்.ஆனால் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை ஜென்சியின் காந்த குரலாலும் ராஜாவின் இசையாலும்  மனம்கவர்ந்திருக்கும். 


பார்க்காதவர்கள் ஒருதடவையேனும் பாருங்கள்"புதிய வார்ப்புகள்"!பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் மற்றும் இளையராஜாவின் கலைவண்ணத்தை பார்க்க விரும்பின்.பாரதிராஜாவை கிராமத்து கதைகளில் அடிச்சிக்க யாராலும் முடியாது என்பது கண்கூடு!அலைகள் ஓய்வதில்லை,கிழக்கே போகும் ரயில் என்ற வரிசையில் இதுவும் ஒரு "ஓடுகாலி" படம் தான்.கிராமத்தில் காதலித்து சில பல தடைகள் எதிர்ப்புகளால் கிராமத்தை விட்டு ஓடிச்சென்று வாழ்வோம் என்று நாயகனும் நாயகியும் ஓடுவதும்,கிராமத்தார் கலைப்பதும் அந்த காலகட்ட படங்கள் பெரும்பாலானவற்றின் க்ளைமாக்ஸ்'ஸாய் இருந்தது.பலர் ஓடிப்போய் கல்யாணம் கல்யாணம் செய்வதற்கு முன்னோடிகளாய் இந்த படங்கள் தான் அமைந்திருந்தன.இவை அன்றைய காலகட்டத்தில் புதிய புரட்சியும் கூட!

"சில நிர்ணயங்களுக்குள் வாழ்வது ஒரு வாழ்க்கை..
சில நியதிகளை மீறி வாழ்வதும் ஒரு வாழ்க்கை..
மீறிய இவர்கள்...
                "புதிய வார்ப்புகள்"

என்று கூறி பாரதிராஜா ஸ்டைலில் முடிவடைகிறது இந்தப்படம்.

Post Comment

Sunday, July 15, 2012

பில்லா 2 - சக்ரி'யின் கொலைவெறியாட்டம்!


எந்திரனுக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகி,ட்ரெய்லர் முதல் கொண்டு ஸ்டில்ஸ் வரைக்கும் சமூக வலைத்தளங்களில் பட்டை கிளப்பி,அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது பில்லா 2 .கடந்த வியாழன் இரவே இலங்கையில் முதல் காட்சி போடப்பட்டாலும் நேற்றே எனக்கு பார்க்க முடிந்தது.முன்பதிவுகள் கூட சில வாரங்களுக்கு முடிந்துவிட்டிருந்தது(உண்மையோ அல்லது அதுவும் மார்க்கேட்டிங்கோ தெரியவில்லை). இவ்வளவு எதிர்பார்ப்பையும் படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்பதை பதிவின் இறுதியில் பார்க்க தேவை இல்லை.ஏலவே படம் பற்றிய பல விமர்சனங்கள் வந்துவிட்டதால் சஸ்பென்ஸ் வைத்து ஒழித்து விளையாட விரும்பவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும்-சக்ரி டோலேட்டி'யின் படைப்புக்கும் இடையே பெரிய இடைவெளி காணப்படுவதால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது என்றே கூறலாம்.


பில்லா 1 இல் டானாக வந்த தல,எப்படி டான் ஆனார் என்பது பற்றிய ப்ளாஷ் பேக் தான் பில்லா 2 .எனவே படத்தின் கதை பற்றி கூறுவதை விடுத்து வேறு விடயங்களை பார்க்கலாம்.நேற்று பேஸ்புக்கில்,

"டேவிட் பில்லாவாக அஜித் தனது பங்கை திறம்பட செய்தே இருக்கிறார்.ஆனால் அஜித்துக்கும் சேர்த்து மொத்தமாக இயக்குனர் "சக்ரி டொலேட்டி" கிடைத்த அனைத்து இடங்களிலும் கோட்டை விட்டிருக்கிறார்.அஜித் மட்டும் இல்லாவிட்டால் படம் பஸ்பமாயி இருக்கும்.பொன்னான வாய்ப்பை இப்படி இயக்குனர் வீணடித்திருப்பார் என்று நினைத்திருக்கவில்லை.விமர்சனம் எழுதணுமான்னு ஜோசிக்கிறேன்.
#பில்லா 2 அல்ல..இது டேவிட் பில்லா! "

என்று பகிர்ந்திருந்தேன் படம் பார்த்துவிட்டு."தல"க்காக மட்டும் படம் பார்ப்பவர்களுக்கு பில்லா 2 நிறைவான திருப்தியை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.டேவிட் பில்லாவாக அஜித் தனது பங்கை செய்வனே செய்திருக்கிறார்.அழகாக இருக்கிறார்.சேர்ட்'டிலும் சரி கோர்ட் போட்டாலும் சரி ஏன் லுங்கியில் கூட அழகாய் இருக்கிறார்.ஸ்டைலாய் நடக்கிறார்.கோபப்படுகிறார்..அறச்சீற்றம் கொள்கிறார்.படத்தில் தல'யின் வாயால் வரும் வசனங்கள் அனைத்துமே பன்ச் மாதிரி ஷார்ட்'டாய் இருக்கிறது.திரையை ஆக்கிரமிக்கிறார்.தேவை இல்லாத இடங்களில் பன்ச்'ஐ தவிர்த்திருக்கலாம்.அகதியாக வந்து விசாரிக்கப்படும் போது பன்ச் தேவையா ஐயா?தூக்கி எலும்பை எண்ணி இருக்கமாட்டார்கள்?


இயக்குனருக்கு மூன்றாவது படம் இது,தமிழில் இரண்டாவது.ஒருவருடத்துக்கு மேலாக படத்தை கையாண்ட இயக்குனர் பொன்னான வாய்ப்பை நழுவவிட்டுவிட்டார் என்றே கூற வேண்டும்.உன்னைப்போல் ஒருவனில் ஷார்ப்பாக இருந்த காட்சிகள் பில்லாவில் மிஸ்ஸிங்.படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை திரில்லிங் ஆகவே கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.ஆனால் மசாலா படம் போலல்லாது கொஞ்சமாவது லாஜிக்கை கவனித்திருக்கலாம் இயக்குனர்.

உள்ளூர் உளுந்துவடை டானில் இருந்து இன்டர்நசனல் டான் வரைக்கும் பாதுகாப்பு என்பது கொஞ்சத்துக்கும் இல்லாமல் தான் வலம்வருகின்றனர்.அதிகபட்சமாக இரண்டு பேர் பாதுகாப்பு.எந்த ஒரு உள்ளூர் டானையும் சுலபமாக சென்று அவருடன் தோளுக்கு மேல் தோள் போட்டு கதைக்க கூடிய நிலை.இப்படி என்றால் நானுமே டான் ஆகிடுவனே சக்ரி!மசாலா படங்களில் ஒன்று சொதப்பினாலும் மற்றைய அம்சம் காப்பாற்றி விடும் ஒரு அளவுக்கேனும்.நகைச்சுவை அல்லது பாடல்கள் என்று படத்தை கொஞ்சமாவது ஓட வைக்கும்.ஆனால் டான் கதையை தெரிவு செய்துவிட்டு,கதை மீது அபரீத நம்பிக்கையால் படத்துக்கு நகைச்சுவையே தேவை இல்லை என்று முடிவு செய்த பின்னரும் கூட படத்தின் கதையில் இவ்வளவு ஓட்டைகள் இருக்குமானால் அது கதையாசிரியர்,இயக்குனரின் தவறே!

சாதாரண அகதியை சர்வதேச டான் ஆக்கிவிட வேண்டும் அதுவும் இரண்டு மணி நேரங்களில் என்பதாலோ என்னவோ,தல கைவைக்கும் எல்லாமே வெற்றி வெற்றி தான்.இவர் எதிர்க்கும் டான் எல்லாம் அதிகபட்சமாக ஒரு துப்பாக்கியும் ஒரு கத்தியும் தான் வைத்திருப்பார்.அடியாட்கள் அனைவரும் கோர்ட் சூட் போட மறந்திருக்க மாட்டார்கள் ஆனால் கைவசம் ஒரு ஆயுதம் கூட இருக்காது சண்டைக்கு.பில்லா 3 வந்தால் கராத்தே குங்க்பூ தான் சண்டை முறைமைகளாக இருக்கும் போல!ஒரு பிஸ்னெஸ் திறம்பட நடாத்தி கொடுத்தவுடனேயே தல டானுக்கு வலது கை ஆகிவிடுவார்.தல மீது அப்படி நம்பிக்கை இருக்கும் டானுக்கு.


இயக்குனர்,தல கூட தனது ரசிகர்களுக்காக,இளைஞர்களுக்காக மட்டுமே படம் எடுத்த மாதிரி தெரிகிறது.படம்பார்க்க வருபவர்களில் பெண்கள்,குழந்தைகள் என்ற வகையினரும் இருக்கின்றார்கள் என்று மறந்துவிட்டனர்,அந்தளவுக்கு வன்முறைகள் படத்தில்.கழுத்தறுப்பு காட்சிகள்,கத்தி குத்துக்கள் என்று பார்க்க போகும் ஆண்களையே பீதியாக்கும் வகையிலான கொலைகள்.படத்தின் ஒவ்வொரு பிரேம்'இலும் கட்டாயம் ஒரு கொலை நிச்சயம் என்பதால் அடுத்தடுத்த காட்சிகளில் யாரு கொல்லப்பட போகின்றார்கள் என்று மனம் முன்னமே ஊகிக்க தொடங்கிவிட்டது.

ஹீரோ தன்பாட்டில் கொலை கணக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றார்.போலீஸ்காரரை கூட கொல்கின்றார்.முகாமிலிருந்து கூட தேடவில்லை.போலீஸ் டிப்பார்ட்மென்டே 'இவரை டான் ஆக்க இயக்குனர் முயற்சிக்கிறார் விட்டுவிடுவோம்"என்று மெளனமாக இருந்துவிட்டனர் போலும்.இன்டர்நசனல் டான்'ஐ அவரது இடத்துக்கே சென்று அழிக்கிறார்..எப்படி?தானும் இன்னும் இருவருடனும் ஒரு துப்பாக்கியுடனும்!உன்னை போல் ஒருவனில் கமல் தனியாளாக நின்று வேலையை முடித்து நம்ப கூடியதாய் இருந்தது.ஆனால் இது? நாட்டின் சி எம் கூட ஒரு ஜீப் பாதுகாப்புடன் தான் செல்கின்றார்.நம்ம ஊரில் அமைச்சரின் பாதுகாவலருக்கே இரண்டு வண்டி பாதுகாப்பு இருக்குமையா!


அஜித்'ஐ தவிர மிகுதி அனைத்து கேரக்டருமே வெறும் "ஜஸ்ட்"என்கின்ற மாதிரி தான் படைக்கப்பட்டிருக்கிறது.ரஹ்மான்,ஸ்ரீமன்,அஜித் அக்கா,அவர் மகள் ஓமனக்குட்டி என்று வரிசை நீளுகிறது.ஓமனக்குட்டி நடிப்புக்கு சரிப்பட்டு வரமாட்டார் போல தான் தெரிகிறது.படத்தை பார்ப்பவர்களுக்கு மனதில் ஏகப்பட்ட கேள்விகள் எழுவதை தடுக்க முடியவில்லை.அத்தனைக்கும் சஸ்பென்ஸ் வைத்து இயக்குனர் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.அஜித் படத்தில் என்ன இரும்பு மனிதனா?மரண அடிவிழுந்தாலும்,கூடவே வயிற்றில் சதக் என கத்தியால் குத்திவிட்ட பின்னரும் கூட சர்வ சாதாரணமாக சண்டை பிடிப்பார்.எதிரியை கொன்றுவிட்டு சாதாரணமாக ஒன்றுமே நடக்காத மாதிரி நடந்து செல்வார்.

படத்தின் பின்னணி இசை கலக்கல்.ஒவ்வொரு சீனுக்கும் திரிலிங்கை, பயத்தை கொடுப்பதில் பின்னணி இசைக்கு முக்கிய பங்கிருக்கிறது.யுவனின் இசையுலகின் சறுக்கல் பயணம் இந்த பில்லா பாடல்களுடன் தொடங்குகிறது.ஈழத்தமிழர் என்று மீண்டும் வியாபாரத்துக்காய் ஊறுகாய் ஆகி இருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.இனியாவது ஈழத்தமிழர்  என்று யாராவது கூறியால் உங்களை வைத்து காசு பாக்கபோகின்றார்கள் என்று ஒரு தெளிவு வரவேண்டும்.

படம் சரியாக போகாவிட்டால் ஒருவகையில் எனக்கு சந்தோசமே.விஜய்க்கு எப்படி குருவி,வில்லு,சுறா என்று ஒரே மாதிரியான கதைகளை தெரிவு செய்யப்போய் தன்னை தானே சுட்டுக்கொண்டு இப்போ ரசனைக்கு விருந்தளிக்க கூடிய வகையில் விதம் விதமான படங்களை தருகிறாரோ,அது போலே அஜித்துக்கும் இந்தப்படம் சரியாக போகாவிட்டால் தான் இந்த கோர்ட் சூட் கலாசாரத்திலிருந்து வெளியில் வந்து வேறுபட்ட பாத்திரங்களில் நடிப்பார்.இப்படமும் பெரிய வெற்றி என்றால் அடுத்து அஜித்தை வைத்து இயக்கம் விஷ்ணுவரதன் கூட மற்றுமொரு கோர்ட் சூட் கதையுடனேயே கிளம்பி இருப்பார் என்பது நிதர்சனம்.இப்போவாவது வேறுபட்ட கதை களத்தை தெரிவு செய்யட்டும்.தலை கதையில் தலையிட வேண்டும்.இல்லாவிட்டால் இது போன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்.


என்ன விஜய் தோற்றுக்கொண்டு இருந்த போது தொடர் வெற்றிகளை தரும் சூர்யாக்கு தல"யும் ரசிகர்களும் சவால் செய்யுமளவுக்கு இருந்தனர் பில்லா,மங்காத்தா என்று வெற்றிகளால்.இப்போ அடுத்ததாக வரும் விஜய்யின் துப்பாக்கியும் மண்ணைகவ்வுமாக இருந்தால் அடுத்த வருடம் வரைக்கும் அஜித் விஜய்யை ஓவர்டேக் செய்து சூர்யாதான் முதல் நாயகனாக வலம்வர கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது . 

BODY OF LIES படத்தில் இருந்து சுடப்பட்டிருக்கும் காட்சி இந்த வீடியோவில் 3-வது நிமிடத்தில் இருந்து இறுதிவரையில் இருப்பதுதான் என்று சக பதிவர் உண்மைத்தமிழன் பகிர்ந்திருந்தார்..பார்த்தால் ஆம் அப்படியே சுட்டு இருக்கின்றார்!அத்துடன் scareface நான் பார்க்கவில்லை.அதிலிருந்தும் காட்சிகள் சுடப்பட்டனவாம் என்கின்றார்கள்.விடுங்கப்பா யார் தான் இப்போ சுடாத பழம்?


எனக்கே இவ்வளவு ஏமாற்றமாய் இருக்கும் போது அடுத்த ப்ளக்புஸ்ட்டர் படமாக எதிர்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தான் படம் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இவ்வளவு வன்முறைகளை யாரும் குடும்பமாக போய் இருந்து பார்க்க போவதில்லை.ஓவர் பில்ட் அப் படத்துக்கு அவசியமா என்றால்,அவசியம் தான் என்றே கூறுவேன்.எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாவிட்டால் பெரிய தாக்கம் வரப்போவதில்லை ஆனால் அந்த எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு படம் வெளிவந்து முதலிரண்டு வாரங்களில் தயாரிப்பாளர்கள்,விநியோகஸ்தர்கள் இலாபம் பார்க்க முடியுமானால் அந்த பில்ட் அப் தேவையே!

நண்பர் ஒருவர் கூறியது போல,
தல படத்துல இத்தனை பேரை சுட்டதுக்கு பதிலா, அந்த சக்ரி டொலட்டியை சுட்டிருக்கலாம்...
#ஆயிரம் எதிரியை விட்டு வைக்கலாம் ஒரு துரோகியை விட்டு வைக்க கூடாது...#பில்லா - II

Post Comment

Sunday, July 1, 2012

சல்மான் கான்-கத்ரினா கைப்'பின் "எக் தா டைகர்"[Ek Tha Tiger]!




"எக் தா டைகர்"(ek Tha Tiger), இது தான் சல்மான் கான் அடுத்து விருந்து படைக்க இருக்கும் அதிரடி ஆக்சன், ரொமாண்டிக்,திரில்லர் படம்!ஹீரோயின் வேறு யாருமல்ல,மனசை அள்ளும் கனவு நாயகி கத்ரினா கைப் தான் சல்மானின் ஜோடியாக வருகிறார்.ஆதித்ய சோப்ரா தயாரிப்பில் கபீர் கான் இயக்கும் மூன்றாவது படமான எக் தா டைகர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது.இசை சொகைல் சென். இப்படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆசை,ஆவல் ஆரம்பத்திலேயே இருந்தாலும்,(சல்மானின் லேட்டஸ்ட் ஹிட்ஸ்,கத்ரினா கைப்) அண்மையில் வெளிவந்த படத்தின் ட்ரெய்லர் தான் மேலும் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டிருக்கிறது!ஆக்சன் காட்சிகளில் சல்மானும்,வழமைபோலவே அழகால் கத்ரினா கைப்'பும் படத்தின் இரு தூண்கள் என்று கூறலாம்!என்றாலும் பெருமளவான காட்சிகளை ட்ரெய்லரிலேயே காட்டியிருப்பதால் புதுசாக படத்தில் எதனை காட்டப்போகிறார்கள் என்றும் ஏக்கம் இல்லாமல் இல்லை!

First trailer: Salman Khan and Katrina Kaif’s peerless love in ‘Ek Tha Tiger’

படத்துக்கான படப்பிடிப்பு கடந்த வருடன் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து இந்தியா, ஈரான், கியூபா,துருக்கி,அயர்லாந்து என்று பத்து நாடுகளில் நடத்தி முடித்திருக்கின்றன. சல்மான் மட்டுமல்லாது கத்ரினா கைப் கூட இந்த படத்தில் சில ஸ்டான்ட் காட்சிகளில் நடித்திருப்பதுடன் அதுவே அவரது முதலாவது ஆக்சன் படமாகவும் இருக்கப்போகின்றது. பெருத்த எதிர்பார்ப்புகளுடன் வெளிவர இருக்கும் "எக் தா டைகர்" பொலிவூடில் மிகப்பெரிய ஹிட் படமாக அமையவிருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாய் தெரிகிறது.

"எக் தா டைகர்"("Ek Tha Tiger ") படத்தின் ட்ரெய்லர்


முகத்தில் ஏற்படும் தொடர்ச்சியான வலியால் அமெரிக்கா சென்று சத்திரசிகிச்சையை முடித்து சல்மான் ஓய்வெடுத்ததால் இடை நடுவில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு செப்டெம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.என்றாலும் எவ்வித சண்டை காட்சிகளிலும் நடிக்க சல்மான் தயங்கவில்லை என்று படத்தின் ஸ்டான்ட் மாஸ்டர்ஸ் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.சல்மானினதும் கத்ரினாவினதும் ஆக்சன் காட்சிகள் படம் வெளியானபின்னர் பெரிதாக பேசப்படும் என்று கூறப்படுகிறது.


கியூபாவின் தலைநகர் ஹவானாவில் படப்பிடிப்பு நடந்த சமயம் கியூபாவின் உள்ளூர் இயக்குனர் ஒருவர் சல்மான் கானை அணுகி கியூபாவின் உல்லாசப்பயணத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் வெளியிடப்படும் விளம்பர படத்தில் நடித்து தரும்படி கேட்கவும்,உடனே சம்மதித்த சல்மான்."எக் தா டைகர்" படப்பிடிப்பு இடம்பெற்ற செட்'டிலே அந்த விளம்பர படத்துக்காக நடித்துக்கொடுத்தார்.உலக அளவில் சல்மானின் செல்வாக்கு கியூபாவின் உல்லாசத்துறையின் வளர்ச்சியில் உதவும் என்று பாராட்டியும் இருக்கின்றார் அந்த உள்ளூர் இயக்குனர்!அமிதாப் பச்சன்,அமீர் கான் போன்றோர் இந்தியாவுக்கு இதே சேவையை செய்திருந்தாலும்., வெளிநாடு ஒன்றுக்கு இவ்வாறான விளம்பரங்களில் இந்திய நடிகர் ஒருவர் நடித்திருப்பது இதுவே முதல் தடவை!

3 இடியட்ஸ்,பொடி கார்ட், இப்போ ரவுடி ரதோர் என்று இருநூறு கோடி வசூலை நோக்கிய படங்களில் நடித்த கரீனா கபூரை தொடர்ந்து, கஜனி'யில் நடித்த அசினை தொடர்ந்து இப்போ கத்ரினாவும் அந்த பட்டியலில் இந்த படத்தின் மூலம் இணைவார் என்று நம்பலாம். படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போதே இந்த படம் நிச்சயமாக இருநூறு கோடி வசூலை தாண்டும் என்று உறுதியாக கூறிவிடலாம்.தியேட்டரை நோக்கி ரசிகர்களை இந்தப்படத்தின் ட்ரெய்லர் இழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.சல்மானுக்காகவோ..கத்ரினாவுக்காகவோ....படத்தின் ஆக்சன்,ரொமான்ஸ்'காகவோ என்று பல காரணங்களில் ஒன்றாவது ரசிகனை தியேட்டரில் வந்து படத்தை பார்க்க வைக்கும்.


படத்தில் கத்ரினாவும் சல்மானும் ஒரு மொக்கையான சீனில் தான் அறிமுகமாகுவார்கள்:
கத்ரினா: Hi, I'm Zoya, friends call me "Zee "
சல்மான்: I'm Manish, friends call me "Doordarshan "

கத்ரினா: Bahut kharaab joke tha ( இதொண்ணும் அவ்ளோ பெரிய காமெடி
இல்லையே :P )!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தங்கள் பற்றிய காட்சிகளுடன் தினசரி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெறும் நேரடி-மறைமுக மோதல்களும்,இந்தியாவின் "றோ'க்கும் பாகிஸ்தானின் ISI'க்கும் இடையிலான பனிப்போர்களும் படத்தின் முக்கிய கருவாக அமைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.சல்மான் கான் இந்திய "ரோ" புலனாய்வாளராக வேடமேற்றிருக்கிறார் என்பது தெரிந்ததே.

இந்த படத்துக்காக சல்மான் கானுக்கு இந்திய நாணய மதிப்பில் 32 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது (US $6.38m, GBP £4m ) க் தா படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சல்மானுக்கு கத்ரினாவை விட இருபது வயது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது(சுப்பர் ஸ்டாருடன் ஒப்பிடுகையில் எதெல்லாம் எம்மாத்திரம்!)படத்தின் கதை சற்றே வெளியாகி இருக்கிறது.அயர்லாந்தின் "டப்ளின்" ட்ரினிடி கல்லூரியின் சயன்டிஸ்ட் ப்ரொபசர் ஒருவர் பாகிஸ்தானுக்கு அணுஆயுத தொழில்நுட்பத்தை கள்ளமாக வழங்குகிறார் என்று தெரியவருகிறது.அதனை கண்டுபிடிக்க இந்திய அரசு ரகசிய ஏஜென்ட் ஒருவரை அனுப்புகிறது.அவர் தான் "டைகர்" சல்மான் கான்!அதை கண்டுபிடிக்கிற நோக்கத்தோடு செல்கின்ற டைகர், அங்கு ப்ரொபசரின் உதவியாளராய் இருக்கும் சோயா (Zoya) மீது காதல்கொள்கிறார்.இந்திய சினிமா வழக்கப்படி சோயா  ஒரு நடனக்கல்லூரி மாணவி.அதன் பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த மிஷனை தடைகளை உடைத்து எதிர்ப்புகளை சிதறடித்து சிறப்பாக செய்து முடிக்கிறார்களா என்பதே "எக் தா டைகர்" படத்தின் கதை.கதை சிம்பிளாக இருந்தாலும்,அதை படத்தில் காட்டி இருக்கும் விதம் தான் பாராட்டை பெறப்போகிறது என்று மனம் சொல்கிறது.


கதிரினா கைப்-சல்மான் கான் ஜோடியை நான்கு வருடங்களின் பின்பதாக இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் கண்டுகளிக்க போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இறுதியாக இருவரும் சேர்ந்து நடித்த படம் "யுவராஜ்" ஆகும்.இது 2008 இல் வெளிவந்தது.படத்தின் ட்ரெய்லர்'ஐ பார்த்துவிட்டு பொலிவூட் பிரபலங்களும் இப்படத்தை பற்றி போற்ற ஆரம்பித்துவிட்டனர்.ப்ரீத்தி சின்டா ட்விட்டரில் "Saw the trailer of EK THA TIGER n Omg! Salman Rocksss!!" என்று ட்வீட்டி இருந்தார்!
படத்தின் ட்ரெய்லர் பற்றி மேலும் சில பிரபலங்கள் ட்வீட்டி இருப்பவை:

Neil Nitin Mukesh ‏(Actor)
Incredible theatrical of "EK THA TIGER". @kabirkhankk@BeingSalmanKhan and katrina ! Awesomness!
Siddharth ‏(Actor)
Have you seen the new "Ek tha Tiger" promo? Salman Khan! Unstoppable!!!
Nikhil Advani (Director)‏
Hey @kabirkhankk congrats on a dhamakedaar trailer of #ETT. It rocks!!! Utregi nahi.
Gaurav Kapur ‏(Tv Host)
My tweet took 40 mins to load. Probably coz the internet has been mauled by a tiger ;)
Shruti Seth ‏(Actor)
@kabirkhankk @minimathur CONGRATS!! The Ek Tha Tiger trailer is INSANE!!! Can't wait to watch the movie.
Roshan Abbas ‏(Tv Host)
@kabirkhankk baap re what action! Mazaa aa gaya! Saw it online now. Will drop in and see on screen! Adrenalin pumping action.


ரொம்பவே அதிகமாய் கிசுகிசுக்கப்பட்ட சல்மான்-கத்ரினா ஜோடி பிரிந்ததன் பின்னர் இப்படத்தின் மூலம் இந்த இருவரின் கெமிஸ்ட்ரி எவ்வளவு அற்புதமாக திரையில் இருக்கும் என்று ரசிகர்கள் பார்த்து வியக்கப்போகின்றார்கள் என்று படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் கூறினார்.உண்மை தான் ட்ரைலர்'லயே இந்த ஜோடி அசத்துகிறது.படத்தில் கலக்கும் என்று எதிர்பார்க்கிறேன். என்னதான் பிரிந்து இருந்தாலும் ஒருவருக்கொருவர் நட்பாகவே இருக்கின்றார்களாம் சல்மானும் கத்ரினாவும்.தொழில்முறையிலான உறவைதாண்டி தனிப்பட்ட முறையில் அமெரிக்கா சென்று சல்மான் சிகிச்சை பெறும்போது பார்த்துவிட்டு வந்திருக்கிறார் கத்ரினா.


மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது எக் தா டைகர்.படத்தின் தயாரிப்பாளர்களான "யாஷ் ராஜ் பிலிம்ஸ்" போலிவூடின் அனைத்து வசூல் சாதனைகளையும் தகர்த்தெறியப்போகும் இந்த படத்துக்கு மொத்தமாக 117 கோடி செலவு செய்திருக்கிறார்களாம்!கிட்டத்தட்ட 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஷாருக்கானின் "ரா ஒன்" (அனிமேசன் செலவுகளே அதிகம்) வசூலித்தது என்னமோ 175 கோடி அளவிலேயே.ஆனால் சல்மான் கானின் முன்னைய படமான பொடிகார்ட் அதையும் தாண்டி 183 கோடிகள் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானின் மெகா ஹிட் தபாங்,பொடிகார்ட் படங்களின் வசூலை எல்லாம் இந்த படம் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ச்சியான மெகா ஹிட் நாயகனாகி வலம்வருகிறார் சல்மான் கான்."ரா ஒன்'னில் சாருக்கான் சொதப்பியத்தின் பின்னாடி சல்மான் கான் ஒரு படி உயரத்திலேயே இருக்கிறார்.ஜேம்ஸ் போண்ட் படங்கள் போன்ற இரகசிய ஏஜெண்ட்(Raw agent) கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கும் சல்மான்கானுக்கு, ஷாருக்கான் "டான்" அஜித்தின் "பில்லா" பட வரிசைகள் போன்று இப்படமும் அவரது கேரியரில் இடம்பிடிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.இந்திய சுதந்திர தினமன்று "எக் தா டைகர்" உலகம் முழுவதும் தியேட்டர்களை கலங்க வைக்கும்!

இந்தியாவின் அதிகப்படியான வசூலை அள்ளிய திரைப்படம் என்று பெயரை பொறிக்கப்போகும் "எக் தா டைகர்" படத்துக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துக்கள்!!


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...