Tuesday, April 30, 2013

சமந்தா-காஜல்-சிவகார்த்திகேயன்..!இது நம்ம தெரிவு..!!



சமந்தா மற்றும் காஜலின் படங்களை 'சாட்டில்' அனுப்பிவிட்டு,'உங்க சாய்ஸ் இதில எது?'என்று யாராவது கேட்கும்போதெல்லாம் எனது தெரிவு சமந்தாவாகத் தான் இருக்கிறது.இருபத்தெட்டு வயதாகும் காஜலை,மாற்றான்-துப்பாக்கி படங்களுடன் சலித்துவிட்டது.என்ன தான் 'மேக்கப்' செய்துகொண்டாலும்,அந்த வயதுக்குரிய ஒரு முதிர்ச்சி காஜலில் தெரியத்தொடங்கிவிட்டது.பல பெண்களுக்கு பிந்திய இருபதுகளில்,உடல் பருமன் அதிகரித்து இடுப்பின் கீழே சகிக்கமுடியாத அளவுக்கு சதை போட்டு,மன அளவில் இளமையாக இருந்தாலும்,உடல் 'நீ ஒரு அம்மா தான்'என்று கட்டம்போட்டு காட்டிவிடும்.ஆனால் சமந்தாவின் உடல்வாகு,அவர் பிந்திய இருபதுகளிலும் இப்படியே தான் இருப்பார் என்கின்ற ஒரு உள்மனது மதிப்பீட்டின் காரணமாய்,இப்போது சில மாதங்களாய்  கேட்பவர்களுக்கெல்லாம் சமந்தா என்கின்றேன்.இதுவே சித்தார்த்துடன் அடுத்தமாதம் கல்யாணம் என்று செய்திவந்தால்,அடுத்த நிமிடமே சமந்தாவுக்கு துரோகி பட்டம் கட்டிவிட்டு எனது தெரிவு உடனடியாய் இன்னொருவர் பக்கம் மாறத்தான் போகிறது.

                                                 ****
சாதாரணதர பரீட்சை முடித்து உயர்தரம் ஆரம்பிக்கும்.உயர்தரத்தில் முதலாவது தவணை செம விறுவிறுப்பாய் இருக்கும்.எதிர்காலத்தில் டாக்டர் இஞ்சினியர் ஆகவேண்டும் என்ற தீராத தாகம் இருப்பவர்கள் தாமாகவே கணித- விஞ்ஞான துறையை தேர்ந்தெடுத்திருப்பார்கள்.இது தான் நமக்கு சரி என்று மறுபக்கம் கலை-வர்த்தக பிரிவை அரைவாசிப்பேர் தேர்ந்தெடுப்பார்கள்.ஆனால் இந்த கணித விஞ்ஞான துறையில் எமது பிள்ளை டாக்டராக, இஞ்சினியராக வரவேண்டும் என்ற ஆசையுடன்,தமது விருப்புக்காக அன்றி,பெத்தவங்க விருப்பத்துக்காக, கட்டாயத்துக்காக சேர்ந்த கூட்டம் தான் அதிகமாக இருக்கும்.தனக்கு பிடிக்காததை இன்னொருத்தன் தெரிவு செய்து புகுத்தினால் அதை மூளையும் மனதும் எந்தளவுக்கு அனுமதிக்கும் என்பது சிறிது நாட்களிலேயே அவர்களுக்கு தெரிய வந்துவிடும்.முதலாம் தவணை பரீட்சையிலேயே மூன்று பாடமும் இருபது,முப்பது என்று மார்க் வந்திருக்கும். இதற்க்கு மேலும் இருந்தால் தப்பிப்பிழைப்பது கடினம் என்று தெரிந்து இரண்டாம் தவணை தொடக்கத்தில் வர்த்தக பிரிவு வகுப்பில் முன்வரிசைகளை அலங்கரித்த வரலாறு பலருக்கு உண்டு.பாடசாலைக்கு எந்தளவு தாமதமாக வந்தாலும், வர்த்தகப்பிரிவில் முதல் வரிசை எப்படியும் 'ப்ரீயா' தான் இருக்கும்.சாதாரண தர பரீட்சையில் 'A' சித்தி வேண்டாம் என்று நானாகவே ஒதுங்கிகொண்ட பாடங்கள் இரண்டு.ஒன்று கணிதம்,மற்றையது விஞ்ஞானம்.எவ்வளவு தான் முயன்றும் இந்த இரு பாடைகளும் சாரி,பாடங்களும் எனக்கு முரண்டுதான் பிடித்தது. அதனால் இவை இரண்டையும் தவிர்த்துவிட்டு மற்றைய எட்டு பாடங்களிலும் கவனத்தை செலுத்தினேன்.நான் எதிர்பார்த்த பரீட்சை முடிவு 8 'A' & 2 'B'.கணிதத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் 'B' தான் என்று விடைத்தாள் திருத்தப்படு முன்பதாகவே முடிவுசெய்திருந்தேன் நான். முடிவுகள் வெளிவந்தன. 7 'A' & 3 'B' என்று.எதிர்பார்த்த இரு பாடங்களுக்கும் 'B' கிடைத்ததில் பெரிய சந்தோசம். எதிர்பாராமல் ஒரு பாடத்துக்கு 'B' கிடைத்தது.அது எப்படி என்று இன்னமும் தான் எனக்கு புரியவில்லை.ஆங்கிலமா? ஆங்கில இலக்கியமா?புவியியல்?ம்ம்ஹும் அந்தப்பாடம்,தமிழ்..!எது எப்படியோ உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவை தெரிவு செய்ய இந்த இரண்டு 'B'க்களும் பேருதவி புரிந்ததனால் இன்னமும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.  
                                                           *****   
95 இல் யாழிலிருந்து இடம்பெயர்ந்து வரணிக்கு போய் சிறிது காலம் இருந்துவிட்டு அதன் பின்னர் கிளிநொச்சிக்கு சென்றோம்.இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். கிளிநொச்சியில் நிம்மதியாக ஐந்தாறு மாதங்கள்..மீண்டும் அங்கிருந்து இடப்பெயர்வு.இம்முறை அக்கராயன்.புலிகளின் பகுதியிலிருந்து இலகுவாய் வெளியே அவர்களின் கட்டுப்பாடற்ற பகுதிக்கு சென்றுவிட முடியாது.'பாஸ்' முறை,ஆள் பிணை என்று பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும்.அப்பா வியாபாரம் என்பதனால்,அடிக்கடி இடம்பெயர்ந்துகொண்டிருந்தது  ஏராளமான இழப்புகளை கொடுத்திருந்தது.சாம்பலிலிருந்து எழுந்து பறப்பது என்பது தமிழர்களுக்கு பழக்கப்பட்டுவிட்ட ஒன்று.ஒவ்வொரு தமிழ் குடும்பமும் குறைந்தது இரண்டு மூன்று இடப்பெயர்வுகளை சந்தித்திருக்கும்.முதல் இடப்பெயர்வில் 50வீதமான பொருட்கள் எஞ்சும்.இரண்டாவது இடப்பெயர்வில் அது 25வீதமாகும்.மேலும் மேலும் இடம்பெயருகையில் முக்கிய ஆவணங்கள்,நகை,பணம் மட்டும் தான் கையில் எஞ்சியிருக்கும்.அதனால் அக்கராயனிலிருந்து மீண்டும் ஒரு இடப்பெயர்வுக்கு அப்பா விரும்பியிருக்கவில்லை. ஆனால் ஒற்றைக்காலில் நின்று அன்று அம்மா எடுத்த முடிவு தான் இன்று நாம் இந்த நிலையிலிருக்க காரணம்.அப்போது அக்கராயனிலிருந்து கிளம்பி வவுனியா வந்து ஏதோ ஒரு முகாமில் சில வாரங்கள் தங்கியிருந்து  திருகோணமலை சென்று அங்கிருந்து  கப்பல் மூலம் மீண்டும் யாழ் மீண்டோம்.நாங்கள் வெளியேறி சிறிது காலத்திலேயே புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதாக பேசிக்கொண்டனர்.அப்போது வெளியேறி இருந்திருக்காவிட்டால் இச்சமயம் எம் வாழ்க்கை முடிந்திருக்குமோ இல்லை முள்ளுக்கம்பிகுள்ளோ இருந்திருக்கும். 

                                                             ****            
உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் சுஜாதா விருதுகள்-இந்த ஆண்டிற்கன தேர்வு ஆறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.இறுதித் தெரிவுகள் இப்படி அமைந்திருக்கின்றன:

சுஜாதா சிறுகதை விருது: அஜயன்பாலா
நூல்: அஜயன் பாலா சிறுகதைகள்
வெளியீடு: நாதன் பதிப்பகம்
தேர்வுக்குழு: சுப்ரபாரதிமணியன், அழகிய பெரியவன், சுரேஷ்குமார இந்திரஜித்

சுஜாதா நாவல் விருது : தமிழ் மகன்
நூல்: வனசாட்சி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
தேர்வுக்குழு: எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேச பாண்டியன், இமையம்

சுஜாதா கவிதை விருது: மனோ.மோகன்
நூல் பைத்தியக்காரியின்பட்டாம்பூச்சி
வெளியீடு: புதுஎழுத்து
தேர்வுக்குழு: கலாப்ரியா,சமயவேல், இந்திரன்

சுஜாதா உடைநடைவிருது (இரு நூல்களுக்கு வழங்கப்படுகிறது)
பா.பிரபாகரன்
நூல் குமரிக்கண்டமாசுமேரியமா?,
வெளியீடு கிழக்குபதிப்பகம்

ராஜு முருகன்
நூல் வட்டியும்முதலும்
வெளியீடு ஆனந்தவிகடன்

தேர்வுக்குழு : இரா.நடராசன், ’தீக்கதிர்’குமரேசன், பாரதி மணி

சுஜாதா சிற்றிதழ்விருது (இரு இதழ்களுக்கு வழங்கப்படுகிறது)


இதழ்கள்: ஞானம், 
தி.ஞானசேகரன் , ஆசிரியர்-ஞானம்

கருக்கல் 
 எம்.எஸ்.பாண்டியன், ஆசிரியர்-கருக்கல்
தேர்வுக்குழு:தமிழவன், கழனியூரன், அ.முத்துக்கிருஷ்ணன்

சுஜாதா இணையவிருது: வா.மணிகண்டன்
வலைப்பதிவு: http://www.nisaptham.com/
தேர்வுக்குழு:இரா.முருகன், இயக்குநர் ராம், மனோஜ்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.'சுஜாதா இணைய விருது'க்கான எனது பரிந்துரையாக 'படலை'யில் எழுதிவரும் ஈழத்தமிழ் எழுத்தாளர் அண்ணன் 'ஜேகே'யாக தான் இருந்தது. விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பியுங்கள் என்றபோதே அண்ணனுக்கு கூறினேன் உங்கள் தரப்பிலிருந்து அனுப்புங்கள்.உங்களை விட்டால் வேறு யாருக்கு கிடைக்க இருக்கிறது என்று நம்பிக்கையூட்டி.ஏனோ கிடைக்கவில்லை. நம்மவர்களுக்கென்று ஒரு அங்கீகாரம் கொடுக்க இப்படியான விருதுகள், அடையாளங்கள் இல்லை என்றே கூறலாம்.இலங்கை வலைப்பதிவர்களுள் ஜேகே அவர்கள் சத்தமில்லாமல் பெரிய வாசகர் வட்டத்தை தன்பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த 'தெரிவுகள்' மாறிவிடும் என்பதில் நம்பிக்கை இல்லை.அண்ணன் எழுதுவது பெரும்பாலும் இலங்கை சம்பந்தமாகவே இருப்பதால் (இலங்கையில் பிறந்தால் பின்னர் அமெரிக்கா சம்பந்தமாகவா இருக்கும்!) இந்திய நண்பர்களை ஈர்த்திருக்க வாய்ப்பில்லையோ என்னமோ! எமது வழிகள் எமக்கு தானே புரியும்.அவரின் 'கந்தசாமியும் கலக்சியும்' என்கின்ற விஞ்ஞான தொடர் நாவல் அவரின் இணையப்பக்கத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டது. சுஜாதாவின் பின்னர் யாருமே விஞ்ஞான சம்பந்தமாக தொடுகிறார்கள் இல்லை என்கின்ற ஆதங்கத்தில் எழுதினேன் என்பார்.ஆனால் சுவாரசியத்துக்கு குறைவில்லாத நாவல்.ஒவ்வொரு பகுதியும் எப்போது வெளிவரும் என்று காத்திருக்க வைத்த தொடர் அது.இப்படியான எழுத்தாளர்களை விருதுகள் கௌரவிக்காவிடில்,விருதுகளுக்கு தான் என்ன மதிப்பு? 

                                                               ****
தினம் ஒரு நிலைத்தகவல் பேஸ்புக்கில் பகிர்பவரானால்,அவரால் வருடம் 365 நிலைத்தகவல்கள் பகிரப்பட்டிருக்கும். ஆனால் வருட முடிவில் குறித்த ஒரு நிலைத்தகவலை மறுபடியும் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டால்,அது பகிர்ந்த தினம் ஞாபகம் இல்லையேல் ஒவ்வொரு நிலைத்தகவலாக தேடவேண்டும்.ஏதும் குறிச்சொல்லை பயன்படுத்தி பேஸ்புக்கிலோ அல்லது தேடியந்திரத்தில் சென்றோ அதனை தேடமுடியாது.இப்படியாக பேஸ்புக்கில் எழுதப்படும் அனைத்துமே ஒன்றுக்கும் பயன்படாத குப்பை போன்றதாக தான் முடிகிறது என்றார் அண்மையில் 'தமிழ் விக்கிப்பீடியா அறிமுக கருத்தரங்கை' நடாத்த இந்தியாவிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர். உண்மை தான்.ப்ளாக் அல்லது வேறு இணையதளங்களில் எழுதுவதானால் இந்த பிரச்சனை இல்லை.ஆனால் இப்போதெல்லாம் இலக்கியவாதிகள் தொடக்கம் ப்ளாக் வைத்திருப்பவர் வரை, அனைவரும் பேஸ்புக்கில் தான் உளறுவதை காணமுடிகிறது.காரணம் விவாதம்,லைக்குகள்,ஷேர்கள் என்று அதில் கிடைக்கும் 'ரீச்'.மற்றையது சோம்பேறித்தனம். முன்னர் போல் அதிகமானோர் வருவதில்லை என்று ப்ளாக் எழுதுபவர்களும் அதனை விட்டு விலகிக்கொண்டிருக்கின்றனர் இன்ட்லி போன்ற திரட்டிகள் கொடுத்த பிரச்சனையால்.இலங்கையில், இருவருடங்களுக்கு முன்பதாக ஒரு 25-50 பேர் தொடர்ந்து எழுதும் ப்ளாக்கராக இருந்தனர்.அது இப்போது 0-5 ஆக சுருங்கிவிட்டது.முன்னர் மொக்கை பதிவுக்கு கூட 4000-5000 வரை கிடைக்கும் 'வ்யூ'க்கள் இப்போது ஆயிரத்தை தாண்டுவதே பெரும்பாடாய் இருப்பதாக ப்ளாக்கில் இப்போதும் எழுதும் நண்பர்கள் கூறினார்கள்.இதனைவிட ப்ளாக்கில் எழுதுவதை நிரந்தரமாக கைவிடலாம் என்கின்ற தெரிவை மேற்கொள்வதில் பல பதிவர்கள் முனைப்பாய் இருக்கிறார்கள்.வாசிப்பவர்களுக்கு ப்ளாக் மீதான மோகம் குறைவடைந்து செல்கின்றது என்பது உண்மை போல்தான் தெரிகிறது.ஒவ்வொரு பதிவருக்கும்,அவர்கள் தமது எழுத்தின் வசீகரத்தால் கவர்ந்திழுத்த வாசகர்கள் தான் மீண்டும் மீண்டும் வருகிறார்கள்.அவர்களும் வராது போயின் கடையை சாத்திவிட்டு வேறுவேலை பார்ப்பதே உசிதம் போல் தோன்றுகிறது.இல்லாவிட்டால்,யார் வாசித்தாலென்ன வாசிக்காவிட்டால் என்ன எனது திருப்திக்கு, பிறிதொரு காலத்தில் நான் மீட்டிப்பார்க்க இனிமையாய் இருக்கும் என்பதனால் எழுதுகிறேன் என்று கூறிவிட்டு எழுதவேண்டியது தான்.சுயதிருப்தி.


தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அண்மையில் வெள்ளவத்தை ஹம்ப்டன் வீதியிலிருக்கும் தேசிய கலை இலக்கியப்பேரவையில் 'தமிழ் விக்கிப்பீடியா அறிமுக பட்டறை'ஒன்று நடைபெற்றது.
  • தமிழ் விக்கிப்பீடியா பொது அறிமுகம் -
  • விக்கியாக்கம் முறைகளும் கொள்கைகளும்
  • விக்கிப்பீடியா பயனர் பங்களிப்பின் அவசியம்
  • விக்கிப்பீடியா தொகுத்தல்
  • வார்ப்புரு, ஊடகக் கோப்புகள் பயன்பாடு
  • சிறப்புத் தொகுப்புகள் எ.கா: கணிதச் சமன்பாடுகள், வேதியியல் குறியீடுகள் முதலியன
பற்றிய அறிமுகம் தரப்பட்டது.இலங்கையிலிருந்து எழுதும் சில தமிழ் விக்கிப்பீடியர்களும் வந்திருந்தனர்.உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் வெறும் ஐம்பதாயிரம் ஆக்கங்களே விக்கிப்பீடியாவில் இருக்கின்றது என்பது வெட்கப்படவேண்டிய ஒன்று.ஒவ்வொருவரும் தத்தமக்கு தெரிந்த,விரும்பிய துறைகளை சார்ந்தோ,விரும்பிய விடயத்தை பற்றியோ விக்கிப்பீடியாவில் எழுதி பங்களிப்பு செய்யலாம்.இதுவொன்றும் பெரிய கடினமான வேலை கிடையாது.ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்துவிட்டால்,அதன் பிற்பாடு அனைத்தும் பழகிவிடும்.தினசரி இரண்டு லட்சம் பார்வையாளர்களை தமிழ் விக்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.வெறுமனே பேஸ்புக்கிலோ ப்ளாக்கிலோ எழுதுவதை விட விக்கிப்பீடியாவில் எழுதினால் காலம்காலமாக அந்த ஆக்கம் எத்தனையோ பேருக்கு பயனுள்ளதாக அமையும்.ஏன் எமது பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் கூட சிலசமயம் எமது ஆக்கங்களை உசாத்துணையாக கொள்ளகூடும்! 

ஆளுக்கொரு கட்டுரை எழுதினாலே தமிழ் விக்கிப்பீடியா அடுத்த சில மாதங்களிலேயே லட்சம் ஆக்கங்களை தொட்டுவிடும்!


                                           ******
'சேட்டை' போய் பார்த்துவிட்டு 'ஜொள்ளு +மொக்கை+கக்கா=சேட்டை'என்று திட்டி  எழுதியிருந்தேன்.ஆனால் கடந்த சனிக்கிழமை  'கேடி பில்லா கில்லாடி ரங்கா'வை பார்த்த பின்பு தான் 'சேட்டை'எவ்வளவு மேல் என்று புரிந்தது.விமல்,சிவகார்த்திகேயன் என்று இரண்டு காமெடிக்கு புகழ்போனவர்களை  வைத்து 'கலகலப்பு' ரேஞ்சுக்கு ஒரு காமெடி படம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பிலிருந்தேன்.என்னை பொறுத்தவரை படம் படு மொக்கை.எங்காவது சில இடங்களில் கஷ்டப்பட்டு சிரிக்க வைக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.ஒரு சிலர் விமர்சனங்களில்,படத்தை ஆகா ஓகோ அளவுக்கு புகழ்ந்து எழுதியிருந்ததை கவனித்திருந்தாலும்,ஏனோ எனக்கு சிரிப்பே வரவில்லை. சிவகார்த்திகேயன் ஹீரோவாக சரிப்பட்டு வரமாட்டார் என்று தான் தோன்றுகிறது.அனுருத் இசையில் ஏலவே ஹிட் ஆகியிருக்கும் பாடல்களை கொண்ட இவரின் அடுத்த படமான  'எதிர்நீச்சல்' எப்படி அமையப்போகிறது என்று பார்க்கலாம்.'அது இது எது'வில் ரசித்த சிவகார்த்திகேயன் ஹீரோவாய் அவதாரம் எடுத்து சலிக்க வைக்கிறார்.இன்னமும் சினிமாவுடன் ஒட்டிக்கொள்ளாத 'டிவி புகழ்'சிவகார்த்திகேயனாக தான் எனக்கு தெரிகிறார்.விஜய் டிவியில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கையில் ஹீரோவாய் நடிப்போம் என்று கிளம்பிய இவரின் தெரிவு தவறானதோ என்று தான் சிந்திக்க வைக்கிறார்.(சிவா ரசிகர்கள் மன்னிச்சூ..நான் கூட அவரின் தீவிர ரசிகன் தான் தொலைக்காட்சியில்;திரைப்படங்களில் அல்ல.)இதனை விட சன்டிவியில் ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் 'சண்டே கலாட்டா' நிகழ்ச்சி செம கலகலப்பாக இருக்கும்.மதுரை முத்து மற்றும் தேவதர்ஷினி இணைந்து கலக்கும் இந்த கலாட்டாவுக்காகவே ஒவ்வொரு ஞாயிறு காலையும் அடித்துப்பிடித்து எழும்பிவிடுவேன் ஒன்பது மணிக்கு முன்பதாக.விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு'வில் ஆரம்பித்து சன்டிவியின் 'அசத்தப்போவது யாரு'நிகழ்ச்சியின் மூலமாய் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்த மதுரை முத்துவுக்கு இந்த சண்டே கலாட்டா இன்னமும் அதிக ரசிகர்களை பெற்று தரும் என்று நம்பலாம்.



பேஸ்புக்கில் பல்லாயிரம் 'ஷேர்கள்'ஐ தாண்டி வெற்றிகரமாக சுழன்றுகொண்டிருக்கிறது இந்த எழுமலையான் படம்.இதுவெல்லாம் சித்து விளையாட்டு என்று எண்ணித்தான் நான் முதலில் ஷேர் செய்யாமல் தவிர்த்திருந்தேன்.ஆனால் அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் தான் என்னுடைய தெரிவு முட்டாள்தனமானது என்பதை  உணர்த்தின.வழமையாக எழுமணிக்கெல்லாம்(!!) காலையில் எழுந்திருக்கும் நான் அதன் பின்னர் எழு ஐந்துக்கு எழும்பத்தொடங்கினேன்.கண்ணாடியை பார்த்து தான் அனைவரும் பல்லு விளக்குவார்கள்,முகத்துக்கு பவுடர் போடுவதோ,தலை சீவுவதோ கண்ணாடியை பார்த்து தான் நடக்கும்.நானும் அப்படித்தான் இருந்தேன்.ஆனால் அண்மைக்காலமாய் எல்லாவற்றையும் விட்டத்தை அண்ணாந்து பார்த்தவண்ணம் செய்துகொண்டிருந்தேன். காலையில் சோறு சாப்பிட்டேன்..மதியமானால் டீ மட்டும் குடித்தேன்.இரவானால் குளித்து வெளிக்கிட்டு வெளியே சுற்றக்கிளம்பி விடுகிறேன்.காக்கா கூட பேசுறேன்..பல்லி கூட பம்பரம் விடுறேன்..எறும்புக்கு பாயா வைக்கிறேன்.என்னடா இப்பிடியாகிட்டோம்னு ஜோசித்து பார்த்த போது தான் அடடா இதெல்லாம் அந்த எழுமலையான் சித்து விளையாட்டு தான் என்று புரிந்துகொண்டேன்.இனிமேலும் இப்படி அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என்பதற்காக இப்போது நானும் அதனை பகிர்ந்துவிட்டேன்.இனி இரவில் 'வாக்கிங்' போகமாட்டேன்..அப்படி போனாலும் எழுமலையான் துணை இருப்பான் என்கின்ற துணிவு எனக்கு நிறையவே இருக்கிறது!

டிஸ்கி : எனது வலைப்பதிவின் அகலத்தை அதிகரித்து சில லொள்ளுத்தனங்களை செய்திருக்கிறேன்.யாரும் டிசைனிங் தெரிந்தவர்கள் இப்பக்கத்துக்கு 'ஹெடர்' ஒன்று அழகுற வடிவமைத்து தந்தால் மிகுந்த உதவியாய் இருக்கும்.நமக்கு தான் அந்த விடயங்கள் சரிப்பட்டு வருவதில்லையே! 

Post Comment

Wednesday, April 24, 2013

விஜய்-ஜோதிகா முத்தமும்;ஈகோவும்..|குஷி|..!


                               


'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலியாகட்டும் இல்லை நண்பன் நண்பியாகட்டும், தங்கள் நிலையிலிருந்து இறங்கிப்போகாத மனநிலை கொண்டவர்கள் எந்த உறவிலும் நீடித்திருக்க தகுதியற்றவர்கள் தான்.

தான் தவறு என்று தெரிந்திருந்தாலும் ஒத்துக்கொள்ளாத மனநிலை, அன்பையோ, இரக்கத்தையோ  சம்பந்தப்பட்டவர்களிடம் வெளிப்படுத்த முடியாத மனநிலை,'நான் எந்நிலையில் தான் இருப்பேன்,நீங்கள் வேண்டுமானால் இறங்கி வாருங்கள்' என்று நினைத்துக்கொள்ளும் மனநிலை என்று இந்த 'ஈகோ கேரக்டர்ஸ்' பலவித பரிணாமங்களை எடுத்துக் கொள்கின்றன.இது நிச்சயம் இப்போதிருக்கும் உறவு நிலையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தாலும்,விட்டுக் கொடுக்க முன்வரமாட்டார்கள். 'உனக்கு தான் ஈகோ' என்று மாறி மாறி குற்றம் சாட்டும் மனநிலை கூட ஒருவகை ஈகோ தான்.எது எப்படியோ,'எனக்கு ஈகோ இருக்கிறது'என்று ஒத்துக்கொள்ளும் மனப்பாங்கு கொண்ட 'ஈகோஸ்டிக் கேரக்டர்ஸ்' மிக குறைவே! 


ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலிருக்கும் 'ஈகோ'வை வைத்து வெளிவந்த படம் ஒன்று சொல்லுங்கள் என்று யாரை கேட்டாலும்,முதலில் வரும் பதில் 'குஷி' என்பதாகத்தான் இருக்கும்.அந்தளவுக்கு மனசில் பதியும்வகையில் 'ஈகோ கேரக்டர்ஸ்' பற்றி எஸ் ஜே சூர்யா 'குஷி'யை இயக்கியிருந்தார். பார்ப்பவர் மனங்களில் நிச்சயம் ஒரு தாக்கத்தை/மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட படமாக குஷி அமையப்பெற்றது என்று கூறிக்கொள்ளலாம்.

பிறந்த குழந்தையாக இருந்தபோதே தெரியாமல் சந்தித்துக்கொண்ட 'ஷிவா(விஜய்), 'ஜெனீபர்(ஜோதிகா), பள்ளிப்பருவத்தில் ஒருமுறை தெரியாமல் சந்தித்துக்கொண்ட ஷிவா-ஜெனீபர், 'உங்களை எங்கோ பார்த்த ஞாபகம் இருக்கே' என்கின்ற அறிமுகத்துடன் காலேஜில் சந்தித்துக் கொள்கின்றனர். அங்கு நண்பர்களாகின்றனர்.ஷிவாவின் நண்பன் பாபுவினதும் ஜெனீபரின் நண்பி சாந்தியினதும் காதலை சேர்த்துவைப்பதை மையப்படுத்தி ஷிவா-ஜெனீபர்' இருவர்க்கிடையில் 'சொல்லாத காதல்' பிறந்துகொள்கிறது. 

அந்த காதல் இருவரினதும் ஈகோவால் என்ன பாடுபடுகிறது..எத்தனை துன்பங்களை அனுபவிக்கிறது..எத்தகைய பிரிவை உண்டாக்கிறது..இறுதியில் சேர்த்து வைக்கிறதா இல்லை பிரித்து வைக்கிறதா என்பதை எஸ் ஜே சூர்யா தனக்கே உரிய பாணியில் புரியவைத்திருப்பார்.திறமையான இயக்குனர்கள் எல்லாம் நடிகனாக ஆசைப்பட்டு நாம் இழந்தவை ஏராளம்.சுந்தர் சி'யாவது இப்போது திருந்தி ஓரிரு மொக்கை படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார். எஸ் ஜே சூர்யா ரஹ்மான் ஆகும் முயற்ச்சியில் இருப்பதாக கேள்வி. 

தமிழில் அதே எஸ் ஜே சூர்யாவின் 'வாலி'படத்தில் முதன்முதலில் தலை காட்டியிருந்தாலும்,சூர்யாவுடன் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' அஜித்துடன் 'முகவரி'யில் நடித்திருந்தாலும்,'குஷி' படம் ஜோதிகாவின் கேரியரில் ஒரு திருப்புமுனை என்று கூறலாம்.சற்றே திமிர் பிடித்த-ஜாலியான,அதேசமயம் கோபமான,'ஈகோ' கொண்ட 'ஜெனீபர்' பாத்திரத்தில் அற்புதமாய் நடித்திருப்பார் 'ஜோ'!

ஜெனி:கையில என்ன?
ஷிவா:லெட்டர் 
ஜெனி:லவ் லெட்டரா?
ஷிவா: எப்பிடி கரெக்டா கண்டுபிடிச்சீங்க?
ஜெனி:அதான் மூஞ்சிலையே எழுதி ஒட்டிவைச்சிருக்கே..
சென்ஸ் இல்ல? மனேர்ஸ் இல்ல?பப்ளிக்ல எப்பிடி பீகேவ் பண்ணனும்னு தெரியாது?ரோடில லவ் லெட்டர் குடுக்கிறே?யாராவது பாத்தா என்ன நெனைப்பாங்க?பேன்ட் போட்டிருக்காய்..சேர்ட் போட்டிருக்காய்..ஷூ போட்டிருக்கிறாய்..கார் வைச்சிருக்கிறாய்..ஆனா இப்பிடி ஸ்டுபிட்டா நடந்துக்கிறியே..ஏதாவது உருப்படியா நல்ல வேலை இருந்தா பாரு...

என்று ஆரம்பித்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல்ப் வாங்கி 'சாரி சாரி சாரி'என்று கெஞ்சுகையில்  'ஜோ'வின் துடிப்பான துள்ளலான நடிப்பும், கெஞ்சலான முகபாவமும் நம்மை வஞ்சிக்கும். 


படத்தில் மிக பிரபலமாக பேசப்பட்டது இரண்டு காட்சிகள்.ஒன்று ஜோதிகாவின் இடுப்பை விஜய் பார்க்கும் ஸீன்.மற்றையது படத்தின் இறுதியில் வரும் லிப் லாக்.இப்படம் சூர்யாவின் வீட்டில் நிரந்தரமாக தடை செய்யப்பட்ட படமாக இருக்கலாம்.கோயிலில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும்.காற்று பலமாய் வீச,தீபம் அணைந்துவிடும்போல தோன்றும்..அச்சமயம் ஒரு ஆணும் பெண்ணும் ஓடிவந்து அது அணையாமல் கைகளால் மூடி பிடிப்பார்களே? ஆம் அந்த காட்சியின் 'ஒரிஜினல்' இந்த படத்தில் தான் இருக்கிறது என்று நினைத்தேன்.ஆனால் அது ராஜ்கிரண்-வனிதா நடித்த 'மாணிக்கம்' படத்தில் தான் முதல் இடம்பெற்றது என்றார் நண்பர்,பதிவர் துஷி.

காதல் படங்களுக்கு உயிர் கொடுப்பதே 'தவிப்பு' தான். எப்போது இவர்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள்..எப்போது காதலை சொல்வார்கள்? எப்போது ஒன்று சேர்வார்கள்..எப்போது கல்யாணம் நடக்கும்? என்று ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தவிப்பை கூட்ட கூட்ட ஒரு கட்டத்தில் படம், பார்ப்பவர்களை நுனிக்கதிரைக்கு கொண்டுவந்துவிடும்.அந்த மாதிரியான ஏகப்பட்ட சீன்கள் 'குஷியில்'உண்டு!கெளதம் மேனனுக்கு மாஸ்டராய் இருந்திருப்பார் போலும் எஸ் ஜே சூர்யா..!

ஷிவாவும்,ஜெனியும் தமது நண்பர்களின் காதலை சேர்த்துவைத்து காரில் அனுப்பிவிடும் சமயம்..அப்படி இப்போதாவது அந்த அடம்பிடிச்ச கழுதை 'ஈகோ'வை விட்டுவிட்டு இருவரும் காதலை சொல்லிக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.கை குலுக்கிக் கொள்வார்கள்.'பாய்'சொல்லி பிரிந்து விடுவார்கள்.
இருவரும் ஊருக்கு கிளம்பும் காட்சி.காதலை சொல்லவில்லையே என்கின்ற தவிப்பில் ஜெனி call பண்ணுவார்.அந்த சமயத்தில் தான் ஷிவாக்கும் அதே நினைப்பு வந்து ஜெனிக்கு call பண்ணுவார்.போன் என்கேஜ் ஆகி கதைக்க முடியாமல் போய்விடும்.அங்கும் நமது எதிர்பார்ப்பு பொய்த்துவிடுகிறது.

ட்ரெயின்க்கு கிளம்புகிறார்கள்.அப்போதாவது கதைப்போம் என்று இருவரும் நினைக்கிறார்கள்.ஜெனி ஷிவா வீடு செல்ல,ஷிவா ஜெனி வீடு தேடி செல்ல.. அப்போதும் மிஸ்ஸிங்.அடுத்த காட்சி சென்றல் புகையிரத நிலையத்தில். அங்கும் இருவரும் தத்தமது அப்பார்ட்மெண்ட் செல்லாமல், மற்றையவர் அப்பார்ட்மெண்ட் செல்ல...அப்போதும் எமது எதிர்பார்ப்பு தவிடுபொடி!அடடா பெரும்பாலான காதல் கதைகள் புகையிரத நிலையத்தில் தான் முடிவது என்று எதிர்பார்த்தால்..அங்கும் சூர்யா நம்மளை கவிழ்த்து விடுகிறார்.தமது ட்ரெயினுக்கு செல்கையில் இருவர் வண்டியும் எதிரெதிரே வீதியில் நிற்கும்.பார்ப்பார்கள்..ஆனால் சுயநினைவில் இல்லை இருவரும்..

இப்படியாக படம் முழுவதுமாய் தவிப்பு தவிப்பு ஏக்கம் காதல் ஈகோ என்று அமர்க்களப்படுத்தியிருக்கும் படம் தான் குஷி.விஜய்யிடம் நடிப்பை வெளிக்கொணர்வது எப்படி என்பது எஸ் ஜே சூர்யா,ஷங்கர்,முருகதாஸ் போன்றோருக்கு தான் தெரிகிறது.படத்துக்கு விஜய்-ஜோதிகா தெரிவு அபாரமானது. வேறு யாராலும் அந்தந்த பாத்திரத்துக்கு கச்சிதமாய் பொருந்தியிருக்க முடியாது.ஜெனியின் அப்பாவாக வரும் விஜயகுமார்.. காமெடிக்கு விவேக்..ஷிவாவின் அப்பாவாய் நிழல்கள் ரவி,அனிதாவாய் வந்து கவர்ச்சியில் கலக்கிய மும்தாஜ்... 'மகெரீனா'பாடலுக்கு வந்த ஷில்பா ஷெட்டி என்று ஏராளமானோர் மனதில் நிக்கின்றார்கள்.  


 படத்தின் வெற்றிக்கு கதை-திரைக்கதை எந்தளவு முக்கிய பங்கு வகித்ததோ, அதற்கு குறைவில்லாத பங்களிப்பை தேனிசைத்தென்றல் தேவாவின் இசை வழங்கியிருந்தது.பாடல்களாகட்டும்,பின்னணி இசையாகட்டும்,கதையின் ஓட்டத்தோடு சேர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் தேவாவின் இசை படத்துக்கு முக்கிய பலம்.2000 ஆம் ஆண்டு எல்லாம் தேவா உச்சத்தில் இருந்த காலம். 'மேகம் கறுக்குது...','ஒஹ் வெண்ணிலா..','யார் சொல்வதோ','ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன்..','மக் மக் மகெரீனா', என்று அனைத்து பாடல்களும் ஹிட் என்றால், 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' பாடல் சூப்பர் ஹிட் என்று சொல்லலாம்.

சில்க் ஸ்மிதாவின் காலத்துக்கு பின்னர் ஒரு கவர்ச்சி நடிகையாக தனி முத்திரை பதித்தவர் மும்தாஜ்.படம் வெளிவந்த காலத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்டது 'கட்டிப்புடி கட்டிப்புடி' பாடல்.காட்சிகள் தான் கொஞ்சம் நெருக்கமானது என்றால்,பாடலில் வரும் பாருங்கள் ஆங்..ஆ...அவ்வ்.. என்று விதம் விதமான சத்தங்கள்...எல்லாம் சேர்த்து ஒரு செம 'ஐட்டம் சாங்'காக சில காலம் பிரசித்தமாய் இருந்தது அந்தப்பாடல்.


மக்கோரீனாவில் ஷில்பா ஷெட்டி.(முக்கியமாக 2.28-2.30min பாருங்கள் அவ்வ்)அப்படியே 5.22 தொடக்கம் பாடல் இறுதிவரை பாருங்கள்,ஒரு ஒன்றரை நிமிட பாடல் காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். கூடவே பின்னால் நின்று ஆடும் 'டான்ஸ் க்ரூப்பில்' இன்றைய எத்தனை 'டான்ஸ் மாஸ்டர்கள்' ஆடுகிறார்கள் என்று கண்டுபிடியுங்கள். 

 
(படத்தில் வரும் பின்ணனி இசைக்கோர்வை)


 
'மேகம் கறுக்குது' பாடல். பெண்களின் பேவரிட்டாகவும்,'ஜோ'வின் குட்டை பாவாடைக்காக ஆண்களின் பேவரிட்டாகவும் இருந்தது.  

 
'ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்..'இளசுகளின் பேவரிட்.மக்கேரீனா பாடலும்,இப்பாடலும் ஒலிக்காத ஐஸ்க்ரீம் வாகனங்கள் இருந்திருக்காதென நினைக்கிறேன்!

 
'யார் சொல்வதோ யார் சொல்வதோ..'

 
'கட்டிப்புடி கட்டிப்புடி டா...' பெருசுகள் கண்,மற்றும் காதை பொத்திக்கொள்ள, இளசுகள் இரண்டையும் பெரிதாய் திறந்துவைத்து பார்த்த/கேட்ட பாடல்.  

 
'ஓ வெண்ணிலா....' 'காதல் தேசம்' படத்தின் 'ஓ வெண்ணிலா..இரு வானிலா' பாடலை அடிச்சுக்க முடியாவிட்டாலும்,காதல் பிரிவில் தவிர்க்கமுடியாத பாடல்.சோகமான காட்சிகள் படத்தில் வரும்போது, இப்பாடலை கொண்டு அமைக்கப்பட்ட பின்னணி இசை டச்சிங். 

 இப்படத்தில் இசையமைத்ததற்காக அவ்வாண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் கிடைத்தது. ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் அவார்ட் கிடைத்தது. 2001 இல் பவன் கல்யான் மற்றும் பூமிகாவை வைத்து,அதே 'குஷி' என்கின்ற பெயரில் தெலுங்கிலும் இயக்கி வெளியிட்டார் எஸ் ஜே சூர்யா.இதற்க்கு இசை ஏ ஆர் ரஹ்மான்.படம் அங்கும் ஹிட்.அதை தொடர்ந்து 2003 இல் இந்தியில் 'பரீட் கான் மற்றும் கத்ரீனா கபூரை வைத்து இந்தி 'குஷி'யை எடுத்தார்.இது 'ஏனோ ஒந்தாரா' என்கின்ற பெயரில் கன்னடத்திலும் வெளிவந்தது.'ஈகோ'வை கட்டிப்பிடித்துக்கொண்டு உடும்பாட்டம் அனைத்து சமூகத்திலும் பலர் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட சாட்சி ஏது!

குறிப்பு: 'குஷி' படம் பற்றி வெளிவந்த முதல் தமிழ் பதிவு இதுதான் என்று நினைக்கிறேன்.இணையத்தில் தேடிப்பாருங்கள்.

Post Comment

Monday, April 15, 2013

நடிகை ஸ்ரேயா பௌலிங்..!

                         


'எத்தின டிக்கெட் வேணும்னு சொன்னீங்க?'னு சிங்களத்தில கேட்ட டிக்கட் கவுண்டர் பையனிடம் இரண்டாவது முறையாக 'பதினாறு' என்றேன்.கூடவே, 'இத்தனை டிக்கட் எடுக்கிறோமே, டிஸ்கவுன்ட் கிடையாதா சார்' என்று சகட்டுமேனிக்கு கேட்டேன்.

'இவிங்கெல்லாம் கால் கிலோ வாழைப்பழம் வாங்கினாலே ஒரு பழம் டிஸ்கவுன்ட்டு கேக்கிற பயலுக' அப்பிடின்னு மனசுக்குள்ள நினைச்சிருப்பானோ என்னமோ,மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல் 'இல்லை'அப்பிடின்னு சொல்லி டிக்கட்டை கையில் திணிச்சான்.

'கஸ்டமர் கெயார்' சரியில்லைன்னு சொல்லி இவன பிடிச்சு உள்ள போடணும்னு நினைச்சிக்கிட்டே வந்த வேலைய முடிப்பம்னு உள்ளே சென்றேன்.

என்னைய மேலேயும் கீழேயும் பார்த்து,'இதுக்கு முதல் எப்பவாச்சும் 'பௌலிங்' (Bowling) விளையாடின அனுபவம் இருக்காடா?' என்றான் கூடவே வந்த பதினஞ்சு வானரங்களில் ஒருத்தன்.

நான் ஒன்றுமே பேசவில்லை.

'உன்ன பாத்தா இது தான் பெஸ்டு டைம் போல இருக்கே?'என்றான்.

'நான் தான் உன்கிட்ட எதுவுமே கேக்கேலையேடா,அப்புறம் என்னடா வேணும் உனக்கு?'

'இல்லை,இது எனக்கு பெஸ்ட்டு டைம்மு..எனக்கு யாராச்சும் பார்ட்னேர்ஸ் இருந்தா சமாளிச்சுக்கலாம்..இல்லைனா என்னைய தான் இன்னிக்கு முழு பயபுள்ளைகளும் டார்கட் பண்ணி அடிக்க போறாங்கடா..'என்றான்.சற்றே பயம் கலந்த பதட்டம் அவன் மூஞ்சியில் அப்பட்டமாய் தெரிந்தது.

'நான் அப்பவே இது வேணாம்,எங்கியாச்சும் சாப்பிட போவோம்னு கேட்டேன்டா..ஒரு பயலும் ஒத்துக்கலை..பௌலிங் தெரியாதுன்னு சொன்னா நோண்டி ஆயிரும் மச்சி,அதான் ஒண்ணும் சொல்லாம நானும் வந்திட்டேண்டா...' அவன் புலம்பல் ஓய்ந்தபாடில்லை.

உள்ளே போயாச்சு.அரைகுறை வெளிச்சத்தில் ஆளுக்காள் பனம்பழம் சைஸில் ஒவ்வொரு பந்தை வைத்து உருட்டிகொண்டிருந்தனர்.கலர் கலர் பந்துகளை விட,காற்சட்டை போட்ட பெண்களும்,குட்டை பாவாடையில் பந்துருட்டும் பெண்களும் தான் அனைவர் கவனங்களையும் ஈர்த்துக்கொண்டது.

கூடவே வந்திருந்த பாய்ப்ரெண்ட்ஸ் எல்லாம்,என்னோட கேர்ள் பிரெண்டை எத்தின பசங்க சைட் அடிக்கிறாங்கன்னு எண்ணிக்கொண்டிருந்தார்கள். 'மார்க்கெட் ரிசேர்ச்' போலும்!

நமக்குன்னு பந்து உருட்டிவிட இரண்டு ஏரியா தந்தார்கள்.வந்திருந்தவர்கள் இரண்டாய் பிரிக்கப்பட்டு ஒரு ஏரியாக்கு எட்டு பேர் வீதம்,கையில் கொஞ்ச கலர் பந்துகளும், போட்டுக்கொள்ள 'ஷூ'க்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன!

'அடே தெரிஞ்சா சொல்லி தாடா,இதுக்கு முதல் இந்தபக்கம் வந்ததே இல்ல மச்சி'.இவன் ஒரு பக்கம் நொய் நொய்னு கத்திக்கிட்டிருந்தான்.இந்த நேரத்தில நாலைஞ்சு பேர் பந்தை உருட்டிவிட்டிருந்தனர்.

அவனோட முறை வந்தது.

பச்சை கலர் பந்தை நடுக்கத்துடனேயே தூக்கிக்கொண்டு மூன்று தரம் முன்னாடி பின்னாடியாய் ஆட்டி,வேகத்தை கூட்டி ஒரு கட்டத்தில் பந்தை ரிலீஸ் செய்தான்.எதோ எதிரே நிக்கிறவனுக்கு 'கேட்சிங்' பிராக்டிஸ் குடுப்பவன் போல உருட்டி விடுறதுக்கு பதிலாக மேலே தூக்கி எறிந்துவிட்டான்.ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டிருப்பான் போல!

ஹஹஹ ஹிஹிஹி என்று பொண்ணுகளும் பையன்களுமாய் கலாய்த்துவிட்டார்கள்,பாவம்.எது நடக்கக்கூடாதென்று பயந்தானோ அது நடந்துவிட்டது!

'நாறப்பயலே,இதுக்கு தான் அப்பவே வேணாம்னேன் கேட்டியா?'அவனை பொறுத்த வரைக்கும் என்னையை பார்த்து 'நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி' கேள்வி கேட்டுவிட்டான்!

இரண்டு பேர் கழித்து என்னுடைய முறை வந்தது.எனக்கு முதல் விளையாடியது ஒரு பொண்ணு.பத்தோ பன்னிரண்டு வெள்ளை காய்கள் இருக்கும் அடிப்பதற்கு,அதில் ஒன்று மட்டுமே மீதம் இருக்கும் வகையில் அபாரமாக அடித்திருந்தாள்.நிச்சயம் முன் அனுபவம் இருந்திருக்கவேண்டும் அவளுக்கு.

கையில் பவுடர் பூசிக்கொண்டு,ஒரு பந்தை எடுத்து மேலும் கீழுமாய் தூக்கி அதன் கனத்தை பார்த்தேன்.எப்படியும் குறைந்தது இரண்டு கிலோ தேறும் போல் தெரிந்தது!

'கமோன் மைந்தன்' பின்னாடி நின்ற எவனோ ஒருத்தன் உசுப்பேத்துறான்னு மட்டும் புரிந்தது.கூடவே ஓரிரு கைதட்டல்களும்! அடடா,என்னையே நம்பி இருக்கிற இவங்களுக்கு என்ன செய்யப்போறாய் மைந்தா.....

அதிகமாய் அலட்டிக்கவில்லை.பந்தை எடுத்து முன்னாடி சென்றேன்.இரண்டு சுற்று சுற்றிவிட்டு வேகமாய் உருட்டிவிட்டேன்..

நல்ல வேகத்துடன் சரியான பாதையில் உருட்டிவிட்டால் என்னாகுமோ,அது நடந்தது எனக்கு.கிளீன் ஹிட்!!சடபுட சடபுட என்று அனைத்தும் கீழே விழுந்தன!!

பரத்த ஆரவாரம்.யாருமே இதை எதிர்பார்த்திருக்கவில்லை போலும்!ஹிஹி ஏன் நான் கூட இதை எதிர்பார்க்கவில்லை!ஒரு கணம் மனசில 'பட்டர்ப்ளை எபெக்டு'!

அனைவரும் கைதட்டுகிறார்கள்,ஒரு முகம் மட்டும் என்னை முறைத்து பார்ப்பது புரிந்தது..அட நம் 'நொய் நொய்' நண்பன்! 

'கவுத்துப்புட்டியே மச்சி...'இன்னும் கவலையில் தான் இருந்தான் அவன். 'கொஞ்சமாச்சும் சொல்லி தந்திருக்கலாமேடா..?'

'அட போடா நீ வேற,நீ விளையாட்டு தெரியாதவன்கிட்ட இதுபத்தி கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தாய்..நான் இதுபத்தி விளையாட்டு தெரிஞ்சவன்கிட்டே கேட்டேன்.. பேசிக்கலி,உள்ளே வரும்போது நானும் உன்னமாதிரி தாண்டா.."

அநேகமாக என் முகத்தில் தான் துப்பியிருக்க வேண்டும்.வெளிச்சம் அதிகமில்லாததால் கைப்புள்ளைக்கு சேதமில்லை..!


Post Comment

Friday, April 12, 2013

இலங்கையின் முதல் "Gay"ஆர்தர் சி கிளார்க்??


      

'Sir ஆர்தர் சி கிளார்க்' பற்றி இலங்கையில் தெரியாதவர்களே இருக்கமுடியாது. இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும், இலங்கைக்கு குடிபெயர்ந்து,ஐம்பது வருடங்களுக்கு மேல் தங்கியிருந்து ஏராளமான விஞ்ஞான ஆராய்ச்சிகள்,விண்வெளி சம்பந்தமான எதிர்வுகூறல்கள்,விஞ்ஞான கட்டுரைகள் எழுதுதல்,விஞ்ஞான புனைகதை எழுத்தாளர் என்று பல விஷயங்களில் புகழ்பெற்றவர்.கிட்டத்தட்ட இலங்கையில் 'விஞ்ஞானி' என்று பலராலும் அறியப்பட்ட வெகுசிலரில் முதல்வர்.விஞ்ஞானத்துக்கான இவரின் சேவையை பாராட்டி 1998 இல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இவருக்கு 'நயிட்' பட்டம் வழங்கி கௌரவித்தார்.

'மர்லின் மேபீல்ட்' என்கின்ற அமெரிக்க பெண்ணை மணந்து சிறிது காலத்திலேயே விவாகரத்து பெற்ற ஆர்தர் சி கிளார்க்,அதன் பின் இறக்கும் வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆரம்பத்திலிருந்தே திருமணம் எனக்கு ஒத்துவராமல் தான் இருந்தது என்று கிளார்க் கூறியிருந்தார்.அந்த திருமணத்தின் காரணமாக ஒரு மகனும் பிறந்திருந்தான்.'மர்லின் மேபீல்ட்' ஒரு சுழியோடும் வல்லுநர்.

கிளார்க் மறுமணம் செய்துகொள்ளவில்லை ஆயினும்,இன்னொருவருடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டார்.அவர் தான் 'லெஸ்லி ஏகனாயக்கே',ஒரு ஆண்!!!!இவர் கூட ஒரு சுழியோடும் வல்லுநர் தான்.ஆரம்ப வயதுகளிலிருந்தே ஆர்தர் சி கிளார்க்குக்கு சுளியோடுவதில் அலாதி பிரியம்.லெஸ்லி ஏகனாயக்கே இவரின் சுழியோடுதலில் 'பார்ட்னராக' இருந்து பின்னர் வாழ்க்கை துணை ஆகியிருக்கிறார்!

       

||ஆர்தர் சி கிளார்க்,மற்றும் லெஸ்லி ஏக்கனாயகே ||

'எனது வாழ்வில் கிடைத்த ஒரே ஒரு மிக பொருத்தமான நண்பன் லெஸ்லி' என்று பல விருதுகளை பெற்ற புனைகதை நாவலான 'The Fountains of Paradise' என்கின்ற நாவலினை லெஸ்லி ஏகனாயக்கவுக்கு அர்ப்பணம் செய்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ஆர்தர் சி கிளார்க்.இப்புத்தகம் வெளிவந்த ஆண்டு 1979.அந்த ஆண்டே லெஸ்லிக்கு சமர்ப்பணம் செய்யவேண்டிய காரணம்,லெஸ்லி 1977 லேயே ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்துவிட்டார்.அப்போதிலிருந்து அவர் இறக்கும் வரையிலான காலம் வரை,லெஸ்லியின் சகோதரரான 'ஹெக்டர் லெஸ்லி' மற்றும் அவர் மனைவி வலேரி(Valeri), மூன்று பெண்பிள்ளைகளுடனேயே, கொழும்பு பார்ன்ஸ் பிளேசில் வசித்திருந்தார். 

ஆர்தர் சி கிளார்க்கின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஆண்களாகவும்,அவர்களுள் பெரும்பாலானோர் ஆர்தர் சி கிளார்க்குடன் உடல்ரீதியான தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்தமைக்கு இலங்கை அப்போது ஓரினச்சேர்க்கையாளர் சம்பந்தமாக தளர்வான சட்டங்களை கொண்டிருந்தமை தான் காரணம் என கூறுகின்றனர்.உண்மையில் 1950 களில் இலங்கையில் அப்படி ஒரு விசயமே இருக்கின்றது என்று தெரிந்திருக்காது,அதனால் பிரச்சனை இருந்திருக்காது என்று நினைக்கின்றேன்.சுழியோட்ட ஆர்வத்தாலும் இலங்கை வந்தார் என்று மறுபக்கம் கூறப்படுகிறது.திருகோணமலை சிவன் கோயிலுக்கு கீழே ஆழ்கடலில் இருக்கும் நீரோட்டங்களை இவர் கண்டுபிடித்திருந்தார். 

ஆனால் சட்டத்துறை சம்பந்தமான நண்பி ஒருவருடன் கதைக்கையில்,இலங்கையில் இப்போதும் 'Lesbians, Gays, Bisexuals and transgenders'' சட்டத்தின் கீழ் இது ஒரு குற்றம் என்றும்,இதற்க்கு இரண்டு தொடக்கம்  பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறினார். அத்துடன் ஓரினசெயர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் எண்ணத்துடன் ஐ.நா கொண்டுவந்த தீர்மானத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என்றார்.இதனால் தான் பலர் வெளியே கூறாது 'அண்டர்ப்ளே ' பண்றார்களோ தெரியவில்லை ;). 
""Homosexuality is illegal in Sri Lanka (AI July 2006; Freedom House 2006; WSG n.d.a). Under Section 365A of the country's penal code, homosexual acts are punishable by a jail term of up to ten years (Gay Times n.d.; see also AI July 2006).""

ஆர்தருடன் வேலை செய்த விஞ்ஞானிகள்,நண்பர்கள் என பலருக்கும் இவர் ஒரு ஓரினசெயர்க்கையாளர் என்கின்ற விடயம் தெரிந்தே இருக்கிறது.இது 1950களில் கூட!ஆர்தர் சி கிளார்க்கின் இரங்கல் செய்திகளில் கூட பலரும் இவர் ஒரு கே(Gay) என்றே குறிப்பிட்டிருக்கின்றனர்.ஆனால்,விஞ்ஞானத்தில் தனது முழுக் கவனத்தையும் கொண்டிருந்த ஆர்தர் சி கிளார்க்,இவ்விடயத்தை பற்றி பெரிதாக அலட்டிக்கவில்லை உயிருடன் இருந்த போது!

இது பற்றி பலர் பலவிதமாக கூறியிருக்கின்றனர்:

'Everyone knew he was gay. In the 1950s I'd go out drinking with his boyfriend. We met his proteges, western and eastern, and their families, people who had only the most generous praise for his kindness. Self-absorbed he might be, and a teetotaller, but an impeccable gent through and through.''- Michael Moorcock,Journalist.

"It was the general opinion in the country that he was gay, but a paedophile... it's beyond my comprehension. He is one of the people that nobody could touch. A highly reputed figure, very influential." -Sri Lanka's most energetic campaigner against paedophilia, Maureen Seneviratne.

"Yes, Arthur was gay ... As Isaac Asimov once told me, "I think he simply found he preferred men." Arthur didn't publicize his sexuality -that wasn't the focus of his life- but if asked, he was open and honest." -Aurthurs Friend,Kerry O'Quinn.

'Clarke said that some of his private diaries will not be published until 30 years after his death. When asked why they were sealed up, he answered "'Well, there might be all sorts of embarrassing things in them."-his brother Fred Clarke.

'On Sunday the newspaper declared Clarke to be a self-confessed paedophile. He was quoted admitting as much, and a Sri Lankan "friend" - head of current affairs at the Sri Lankan Broadcasting Company - alleged that Clarke was still having sex with boys "a few months ago".-Peter Popham

இதில் '
paedophilia' என்பது, 'செக்ஸ்'நோக்கத்திற்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களை குறிக்கும்.இப்படியான நோக்கத்துடன் பல வெளிநாட்டவர் இலங்கையின் பீச் கரையோரங்களில் வீடுகளை வாங்கி போட்டு,சில காலம் நிரந்தரமாக தங்கியிருந்து உள்நாட்டு இளம்பெண்கள்,சிறுவர்களை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.இவர்களுக்கு பெண்கள்,சிறுவர்களை பிடித்து கொடுக்க ஒரு பெரிய வலையமைப்பே இயங்குவதாக கூறப்படுகிறது!

மேலதிகமாக 1998'இல் இளவரசர் சார்ல்ஸ் இலங்கைக்கு வந்தபோது தான் 'நயிட்'(சார்)பட்டத்தை வழங்குவதாக இருந்தது.ஆனால் அச்சமயம் ஆர்தர் சி கிளார்க் பல சிறுவர்களுடன் உறவு வைத்திருந்ததாக கதை வெளிவந்ததால்,இச்சமயம் அப்பட்டத்தைஉ வழங்குவது தகுந்ததல்ல என்று,அச்சமயம் வழங்கப்படவில்லை.ஆனால்,அப்போதே இதனை ஆர்தர் சி கிளார்க் மறுத்து,'நான் கடந்த இருபது வருடங்களாக 'sexually Not active' என்று கூறியிருந்தார்.

இதை விட சுவாரசிய சம்பவம்,1976 இல் லெஸ்லி எக்கனாயக்கே இறந்த போது அடக்கம் செய்யப்பட்ட  கல்லறைக்கு அண்மையிலேயே தான் ஆர்தர் சி கிளார்க்கும் அடக்கம் செய்யப்பட்டார்.இது இலங்கை வரலாற்றில் உத்தியோகபூர்வமான முதல் சம்பவமாகவும், இவர்கள் இருவரும் தான் முதல் உத்தியோகபூர்வ ஓரினசெயர்க்கையாளர்களாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

எது எப்படியோ,அது ஆர்தர் சி கிளார்க்கின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது.அதனை தப்பு என்று கூறி வாதிட இதனை எழுதவில்லை.ஆர்தர் சி கிளார்க்கின் விஞ்ஞான புனை கதைகளினை சிறுவயது முதல்கொண்டு வாசித்து வளர்ந்தவன் நான்.அப்படி ஒரு விறுவிறுப்பு,சுவாரசியம் இருக்கும் புனை கதைகளில்.கடந்த வாரம் இவரை பற்றி தேட வெளிக்கிடுகையில் தான் இப்படியான ஒரு ஆச்சரியகரமான செய்தி வாசிக்க கிடைத்தது.இது பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பினேன்.அதன் விளைவாக தான் இந்த பகிரல். 

நன்றி:விக்கிபீடியா மற்றும் இணையம் 


Post Comment

Tuesday, April 9, 2013

ஜொள்ளு+மொக்கை+'கக்கா' =சேட்டை..!

                         

இப்படியான ஒரு படத்தை எடுப்பதற்கு பதிலாக 'அமெரிக்கன் பை' போன்ற செக்ஸி+காமெடி படங்களை எடுத்து ரிலீஸ் செய்தாலாவது ரசிகர்களின் ஏகப்பட்ட வரவேற்பால் செமையாக இலாபம் பார்க்கலாம்.சென்சார் குழு படத்தை முழுமையாக பார்த்து தான் சர்டிபிகேட் கொடுக்கிறார்களா இல்லை சட்டத்திலிருக்கும் ஓட்டைகள் போல இங்கும் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றதா என்று ஜோசிக்க வைக்கிறது 'சேட்டை'.

ஏகத்துக்கும் இரட்டை அர்த்த வசனங்களும்,பொதுவில் கதைக்க கூச்சப்படும் சொற்களின் பாவனையும் என்று,ரசிகர்களை கலகலப்பாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை நிறைவேற்ற இப்போதைய இயக்குனர்கள் முதல்கொண்டு காமெடியன் சந்தானம் வரை எத்தகைய அடிமட்டம் வரைக்கும் சென்று நக்கி வைக்க தயாராகவே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

சீரியசாக கதை சொல்லபோய் அதில் இந்த லாஜிக் ஓட்டை அந்த லாஜிக் ஓட்டை என்று எதிர்மறை விமர்சனங்களால் அடிபட்டு தோல்வி படம் கொடுப்பதை விட,சிம்பிளாக 'மொக்கை'என்கின்ற பேஸ்மென்ட்டில் கொஞ்சம் மசாலா தடவி ஒப்பேற்றிவிட்டால், கதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை,லாஜிக் மற்றும் இன்னபிற தவறுகள், வீக்னெஸ்கள் பற்றியும் கவலைப்பட தேவை இல்லை என்று பல இயக்குனர்கள் கிளம்பியிருக்கிறார்கள்.

             

ப்றாத்தல்,கக்கூஸ்,ஆயி போறது,கக்கா,ஜட்டி,கூமுட்டை,கு.... என்று இதை படிக்கும் போதே,என்ன கறுமத்தை எழுதி வைத்திருக்கிறான் என்று  நீங்கள் முகம் சுளிக்கிறீர்கள். ஆனால் படம் முழுவதுமாக இந்த  சொற்கள் தான் நிரம்பி வழிகின்றன.இவற்றுக்கு தான் தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். எத்தனையோ வருடங்களாக காமெடி கிங்காக இருந்த வடிவேல் கூட,இப்படி கீழ்த்தரமான நிலைக்கு என்றைக்கும் போனதில்லை. சந்தானத்திடம் சரக்கு தீர்ந்து போய்விட்டதோ தெரியவில்லை.'டெல்லி பெல்லி' கதை என்றாலும்,தமிழுக்கேற்ற வகையில் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.அல்லது முழுமையாக முதலில் கூறியது போல அமெரிக்கன் பை போன்று கொடுத்திருக்கலாம்!'டெல்லி பெல்லி'யில் இதனைவிட அதிக அஜால் குஜால் இருந்திருந்தது.சரி அவற்றை அப்படியே போட்டிருந்தாலும் ஒரு பிட்டு படம் பார்த்த திருப்தியில் விமர்சனங்கள் ஆகா ஓகோன்னு வந்திருக்கும்.அதுவும் இல்லை.

இந்த படத்துடன் பெண்கள் மத்தியில் ஆர்யாவின் டிமாண்ட் சற்றே குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.ஹன்சிகாகூட திருமணம் நிச்சயமாகி இருக்கும் சமயத்தில் ஹன்சிகாவுடன் கிஸ் அடிக்கிறார்.அப்படியே அஞ்சலியை உதடையும் வஞ்சகமில்லாமல் அடிக்கடி கடித்து வைக்கிறார்.ஆர்யா வரைட்டியான படங்கள் தேடவேண்டியது அவசியம்.அனைத்து படங்களிலுமே ஆர்யாவின் பாத்திரம் என்னமோ ஒரே மாதிரியாக தான் இருக்கிறது.கடைசி வரைக்கும் என்னை குழப்பிய விஷயம் என்னன்னா,பவர்ஸ்டாருக்கா பிறேம்ஜிக்கா நடிப்பு கொஞ்சமாவது வரும் என்பது தான்.அவனோட வாயும் முடியும்..அவனோட வாயிலேயே தேங்காய் துருவி,வாய்க்குள்ளே அம்பது பேருக்கு சம்பல் இடிக்க முடியும்.ம்ம்ம் எல்லாம் செல்வாக்கு..! 

அஞ்சலி,ஹன்சிகான்னு இரண்டு பப்பாளி பழங்கள் படத்தில்.ஹன்சிகா நன்றாக மெலிந்திருக்கிறார்.முகம் மட்டும் அப்படியே ஊதிப்பருத்த பப்பாளி மாதிரி இருக்கிறது. காலிலிருந்து கமெரா மேலே தாராளமாக ஊடுருவி செல்ல இடம் கொடுத்திருக்கிறார்.ஆனால் மெலிந்திருந்தமையால் முகம் சுளிக்க வைக்கவில்லை.ஓகே ஓகே படத்தில் இருந்த சைஸில் இருந்திருந்தால் வாந்தி தான்.ஆனால் அந்த குறையை அஞ்சலி தீர்த்து வைக்கிறார்.முப்பது வயது தானே கை காலை மூடிக்கொண்டு நடிக்கலாம்.அடிக்கடி கையை தூக்கி காட்டி கடுப்பேத்துறார்.


தமனின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லாவிட்டாலும்,படத்துடன் ரசிக்க கூடியதாக இருக்கிறது.'அகலாதே அகலாதே.." பாடல் தான் ரொம்ப பிடித்திருக்கிறது பலருக்கு.சந்தானத்தை ஹீரோவாக்கி ஹீரோவை சப்போர்ட் நடிகராக்கி எத்தனை படங்கள் தான் வெளிவர போகின்றனவோ!சந்தானம் கவுண்டர் காமெடி பண்றதுக்காகவே கூட ஒட்டிக்கிட்டு இருக்க பிரேம்ஜி.வில்லனாக நாசர்.கூடவே காமெடி வில்லனுக பட்டாளம்.பல இடங்களில் 'கலகலப்பு' கதையை ஞாபகப்படுத்தி சென்றது.அங்காங்கே கிடைக்கும் காமெடிக்காக,பரவாயில்லை ஒரு தடவை பார்க்கலாம்.இந்தியில் 'சூப்பர் ஹிட்டாக' டிக்ளேர் செய்யப்பட்ட படம் இது,தமிழில் ஓரளவுக்கேனும் முதலுக்கு நட்டமில்லாமல் ஹிட் ஆகும் என்று நம்பலாம்.ஒஸ்தி மாதிரி இல்லாத வரையில் ஏனோ சந்தோஷம் !

டவுட்டு டோங்கிரி: ஏம்பா, இந்த படத்திலயும் கிலோ என்ன விலை என்று கேட்ககூடிய அளவுக்கு ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருக்கே, இந்த ஓலக இலக்கியவாதிகள், ப்ராப்ள சினிமா விமர்சகர்களெல்லாம் பக்கம் பக்கமா எழுதி கிழிகிழின்னு கிழிப்பாங்கள்லே?

Post Comment

Monday, April 1, 2013

அம்மா பகவானும்,ஊடுருவல் தாக்குதலும்..!

        

முடிவு செய்தாகிவிட்டது.எப்படியும் இன்று பாதுகாப்பு வளையத்தை ஊடறுத்து உட்சென்று,தலைமையகத்தை இரவுக்குள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பதில் நாம் அனைவரும் உறுதியாய் இருந்தோம்.சற்றே நடுக்கமாய் தானிருந்தது என்றாலும் யாரும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.நாங்கள் ஆறு பேர் என்பதும்,தலைமையக எல்லைக்குள் 'பெரிய தலைகளும்' எமது வயதை ஒத்த பருவத்தினருமாய் எப்படியும் ஐம்பது பேருக்கு மேல் இருக்கிறார்கள் என்பதும் தான் நடுக்கத்துக்கு காரணம்.

உள்ளே ஆட்கள் நடமாட்டம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாய் இருந்தது.சிலர் வெளியே போவதும்,புதிதாய் சிலர் உள்ளே வருவதுமென்று வாகனங்களும் முழுவீச்சில் ஓடித்திரிந்தன.ஒரு சமயம் எங்களின் தாக்குதல் நடைபெறும் என்பதை முற்கூட்டியே உளவுத்துறையினர் அறிந்துகொண்டுவிட்டார்களா என்ன?சாத்தியம் மிக குறைவு என்று மனசு தனக்கு தானே சமாதானம் செய்துகொண்டது.மிக குறுகிய காலகட்டத்தில் போடப்பட்ட திட்டம் இது.பெரிதாக வெளியாட்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லவே இல்லை.

வாசலின் ஒரு பக்கமாய் நானும் இன்னொருவனுமாய் பொசிசன் எடுத்துக்கொண்டோம்.மூவர் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தின் பின்புறமாக பதுங்கி இருந்தனர்.ஒருத்தன் கொஞ்சம் தூரம் தள்ளி 'தலைமையிடம்'இருந்து வந்த அழைப்பில் பிசியாய் இருந்தான்.வாகனத்தின் பின்னால் பதுங்கி இருந்தவங்களில் ஒருத்தன் 'டைம் ஆகுதுடா சீக்கிரம் தொடங்குவம்' அப்பிடின்னு கத்திக்கிட்டிருந்தான்.அந்த சத்தம் உள்ளே இருந்தவங்களுக்கு கேட்டிருக்க வேணும்.இதுக்கு மேல தாமதிச்சால் எங்களுக்கு தான் ஆபத்து.அவங்கள் உசாராகி வெளியில வருவதற்கு முதல் முதல் அடியை நாங்கள் வைத்தாக வேண்டும்!

இப்படி தான் முதல் ஒருதடவை 'அட்டாக்' பற்றி எவ்வித திட்டமிடலும் இல்லாமல்,கிட்ட நெருங்கி சென்று வெளியிலிருந்து மெல்லிய தாக்குதல் நடாத்திவிட்டு இழப்புகளின்றி ஓடித்தப்பியிருந்தோம்.அப்போது இருந்ததை விட இம்முறை எத்தகைய தாக்குதல் வந்தாலும் திருப்பித்தாக்கும் வல்லமை கொண்டவர்கள் எமது அணியில் இருந்தார்கள்.அது போதாதென்று 'சம்பவ இடத்துக்கு'வர இயலுமானால் வருமாறு தலைமையகத்துக்கு அண்மையில் இருந்த ஓரிரு நண்பர்களிடம் உதவியும் கோரப்பட்டு,அவர்கள் எந்த நேரத்திலும் எங்கள் அணியுடன் சேர்ந்துகொள்ளகூடும் என்று வந்த செய்தி சற்றே ஆறுதலளிக்கும் செய்தியாய் பட்டது அந்த சமயத்தில்!

'அட்டாக்க்க்க்க்.....' 'தலைமையுடன்' கதைத்துக்கொண்டிருந்தவன் உத்தரவிட்டதுதான் தெரியும்.திறந்திருந்த வாசலை நோக்கி ஆறு பேரும் ஒரே சமயத்தில் பாய்ந்தோம்.
சட் சட் சட் சட்சட் சட்சட் சட்சட் சட் ...... கட் கட் கட் கட்....

பாய்ந்த வேகத்தில் ஐந்து பேர் அப்படியே விறைத்து போய் நின்றனர் என்னை தவிர!அட்டாக்குக்கு வந்த இடத்தில் என்னடா சோதனைன்னு பாத்தால்,யாரோ அவிங்க ஸ்கூல் பழையமாணவர் சங்கத்திண்ட முக்கிய உறுப்பினராம்.'என்ன தம்பி இந்தப்பக்கம்' அப்பிடின்னு அவரு கேக்க,'என்னண்ணே இந்த பக்கம்'னு அட்டாக் பாண்டிகள் விறைக்க.. ஒரு அரைமணி நேர 'விளக்க உரையுடன்' அட்டாக் பெயிலியர் ஆனது தான் மிச்சம்!!

           

நம்ம பையன்களுக்கு அம்மா பகவான்-கல்கி பகவானை கண்ணில காட்டக்கூடாது.அப்பிடி தான் போன வெள்ளிக்கிழமை வெள்ளவத்தை ராஜசிங்க ரோட்டாலை இரவு எழு மணி போல போகேக்க அம்மா பகவான் 'க்ருப்'போட பஜனைகள் நடக்கும் இடம் நம்ம கண்ணுக்கு உறுத்திச்சு. ஏற்கனவே ஒருக்கா இப்பிடி தான் உறுத்தேக்க,ரோட்டில நிண்டு கத்திட்டு போனனாங்கள்..'இவனுகள் கள்ளர் நம்பாதீங்கோ வெங்காயங்களே'எண்டு. இந்தமுறை உள்ளுக்கு போய் ஒரு கலவரம் பண்ணலாம்னு மொக்கையா ப்ளான் பண்ணி ட்ரை பண்ணினோம்(நாங்களும் ரவுடியாம்லே).

என்கூட வந்த பசங்க அஞ்சு பேரும் ஒரே பாடசாலை எண்டதால(யாழின் படிப்புக்கு பெயர் போன பாடசாலை ;) ),அந்த OBA புள்ளிகிட்ட சிக்கிட்டாங்க.அந்தாளும் நிக்கவைச்சு அறுவை விளக்கம் குடுத்துட்டு தான் போங்கடான்னு விட்டிச்சு.பெரும்பாலும் படிச்சவங்க தான் இந்தமாதிரி கேவலம்கெட்ட வேலைகளில் ஈடுபடுறாங்க எண்டத அங்க வந்து போற ஆக்களை வைச்சு தெரிஞ்சுகொள்ள கூடியதா இருந்திச்சு.

என்னதான் இவனுக கள்ளனுக,எமாத்துறாணுக எண்டு விளங்க வைச்சாலும்,ஆதார பூர்வமாய் நிரூபிச்சாலும் கூட,சனம் போகத்தான் போகுது.இளசுகள் பின்னேரத்தில கிளம்பி ரோட்டு சுத்துறது போல, கிழடுகளுக்கு இது ஒரு 'என்டர்டெய்ன்மென்ட்'. பின்னேரங்களில போனோமா,அரட்டை அடிச்சோமா,தாறதுகள சாப்பிட்டோமா,மன நிம்மதிக்கு ஒரு சில பஜனை,பிரார்த்தனையில் ஈடுபட்டோமானு இருக்காங்க.அது சரி ஏன் இளவட்டாரம் இப்பிடி சுத்துதுகள்னு தான் தெரியலை.

அம்மா பகவான் பாடல்கள் தமிழ் சங்கத்தில வெளியிடுறோம் அப்பிடின்னு அழைப்பிதழ் வேறு தந்தார்கள்.பல படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை வெளியிடவே பணரீதியான பிரச்சனையில் தளர்ந்து போய் இருக்கையில்,இவர்கள் இத்தனை வேலை செய்கிறார்கள் என்றால் நிச்சயம் இந்தியாவிலிருந்து பண உதவி கிடைக்காமல் இல்லை.அல்லது உள்ளூர் விளக்கம் கெட்ட பணம் கொழித்தொர் கொடுப்பார்கள் போலும்!இவங்களுக்கு போட்டியா எதிர்ல நான் நித்தியானந்தா மடம் தொடங்கலாம்னு இருக்கேன்.நித்தி உதவாமலா போயிடுவார்!எனக்கும் தங்கள் உடல் பொருள் ஆவியை அர்ப்பணிக்க சில பொண்ணுகள் வராமலா போயிடுவார்கள்!!

        

அரும்பத விளக்கம்:
தலைமை- குறிப்பிட்ட நபரின் காதலி 
அணி- நம்ம வெட்டி பசங்க கூட்டம் 
அட்டாக்- மொக்கை போட்டு கலாய்த்தல் 
ஊடறுப்பு தாக்குதல்-ஹிஹி வாசலில நின்னு உள்ளே எட்டி பாக்கிறது. 

***************************************************************************

இது இவர்களின் திருகுதாளம் பற்றி வெளிவந்த செய்திகளில் ஒன்று.   

ல்கி பகவான் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் முன்னாள் எல்ஐசி ஏஜென்ட் விஜயகுமார் நாயுடுவும், அம்மா பகவான் எனப்படும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் பெண்களுக்கு போதை லேகியம் கொடுத்து வருவது உண்மைதான் என்று, அங்கு போய் வந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் வரதய்யபாளையம் மற்றும் திருவள்ளூருக்கு அருகில் உள்ள நேமம் போன்ற இடங்களில் இந்த விஜயகுமார் நாயுடு – புஜ்ஜம்மாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன.
இங்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு இந்த ஆசாமிகளைப் பார்க்க குறைந்தபட்சம் ரூ 25000 வரை வாங்குவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த இரண்டு பேரின் பாதங்களையும் கழுவி பூஜை செய்ய ரூ 5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஏராளமான பணக்காரர்கள் இப்படி பணம் செலுத்தி பாதங்களைக் கழுவியுள்ளனர்.
ஒரு முறை இந்த ஆசிரமத்துக்குள் நுழைந்துவிட்டால், மீண்டும் ஊர் திரும்ப முடியாத அளவுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் பலரும். இதற்குக் காரணம் கல்கி ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு தீட்சை அளிப்பதாக கூறி போதை மருந்து கலந்து பிரசாதம் வழங்கப்படுவதுதான் என்று ஏற்கெனவே டிவி சேனல்கள் வெட்டவெளிச்சமாக்கின.
போதை மருந்து சாப்பிட்ட பெண்கள் மயங்கிச் சரிவதையும், சில நேரத்தில் சுயநிலை மறந்து ஆட்டம் போடுவதையும் ஆந்திராவின் ஏ.பி.என். தெலுங்கு டி.வி. படம் பிடித்து ஒளிபரப்பியது. இதுநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அடுத்த இரு தினங்களிலேயே மக்கள் அதை மறந்து, நித்யானந்தன் – ரஞ்சிதை கதைக்குத் திரும்பிவிட்டார்கள்.
கல்கி ஆசிரம மோசடி குறித்து ஆந்திர மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கல்கி ஆசிரம நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணையே நடத்தவில்லை!
இதற்கு விஜயவாடாவை சேர்ந்த கல்கி ஆசிரம பெண் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி கல்கி ஆசிரமத்துக்குப் போய், போதை அனுபவம் பெற்று இப்போது தெளிந்துவிட்ட பக்தர் சுதாராணி என்பவர் இப்படிக் கூறியுள்ளார்:
நான் கடந்த 6 ஆண்டுகளாக கல்கி ஆசிரமம் சென்று வருகிறேன். அங்கு தீட்சைகளால் கொடுக்கப்படும் லேகியத்தில் ஒருவித போதைப்பொருள் கலந்துள்ளது. அதை சாப்பிட்ட பெண்கள் பல மணி நேரம் மயக்க நிலைக்குச் சென்று விடுகிறார்கள். எனக்கும் இந்த அனுபவம் நேர்ந்துள்ளது. அதன்பிறகுதான் நான் கவனிக்க ஆரம்பித்தேன்.
இந்த லேகியம் சாப்பிட்ட பலர் சிறுநீரக கோளாறு, வயிற்று கோளாறு, இதய நோய், ரத்த அழுத்த கோளாறின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள்.
இது பற்றி பல தடவை போலீசில் புகார் அளித்தும் இதுவரை கல்கி பகவானிடம் ஒருமுறை கூட விசாரணை நடத்தவில்லை. கல்கி பகவான், அம்மா பகவான் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை. தங்களை கடவுள் என்று கூறி எங்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி பணம் பறித்துவிட்டனர்.
எனவே, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டுக்கு சொந்தமாக்கவேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயம், தங்களை கடவுள் என்று கூறி ஏமாற்றி வரும் 2 பகவான்களும் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி உள்ளனர். கடவுளை எப்படி நோய் தாக்கும்? கடவுளே நோயாளியாக இருந்தால் பக்தர்களின் நோய்களை எப்படித் தீர்ப்பார்?” என்கிறார்.
இந்த சுதாராணியைப் போன்ற பலரும் இப்போது ஒன்றிணைந்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். பல்வேறு அமைப்புகளும் இவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன.

*************************************************************************

இதை இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கூட அம்மா பகவான் பக்தராக இருக்கலாம்.இல்லை, உங்கள் வீட்டில் அம்மாவோ சகோதரிகளோ அப்பாவோ இவர்கள் பின்னால் திரியலாம்..ஏன் உங்கள்  சாமியறையிலும் ஹாலிலும் கூட இந்த கேடுகேட்டவங்களின் படங்கள் கம்பீரமாய் வீற்றிருக்கலாம்!ஏன்,எங்களின் 'அட்டாக்'இல் எங்கள் அணியில் இருந்த ஒருவன் கூட,தனது நிறுவனத்தில் அம்மா பகவான் படம் வைத்து பூஜிப்பதை கண்டிருக்கிறேன்.அதனால் தான்,தாக்குதல் சமயம்,போனிற்கு அழைப்பு வந்ததாக பாசாங்கு காட்டி சற்றே விலத்தி நின்றிருந்தான்.என்ன செய்வது உங்களை,இவர்களை போன்றோர் இருக்கும் வரையில் போலிச்சாமியார்களுக்கு தொல்லை ஏது!நாளை நான் சாமியார் ஆனால்,என்னையும் வைத்து பூஜிக்கத்தான் போகிறீர்கள்.என்னை பற்றி பாடல் இயற்றி இசையமைத்து பாடத்தான் போகிறீர்கள்!என்ன,மடம் ஒன்று கட்டலாம்னா,கைவசம் காசுபணம் தான் இடிக்கிறது.பக்தர்கள் தயை கூர்ந்து உதவினால்,நாளை நானும் சாமியார் தான்!!

இவர்கள் மீதான 'அட்டாக்' காலத்தின் தேவை என்பதை உணர்ந்தால், இவர்களை ஒழிப்பது என்பதும்,எமது கைகளில் தான் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.வேலை வெட்டி இல்லாத சில 'கம்னாட்டிகள்' மேலிடத்திலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.இலங்கையின் ஒவ்வொரு பாகத்திலும் இது வேரூன்றி திறம்பட நடந்துவருகிறது.படித்த முட்டாள்கள் தொடக்கம் சமய முட்டாள்கள் வரை அனைவரையும் இங்கு காணலாம். இவங்களுக்காகவேனும் நாங்கள் 'பொதுபலசேனா' ஒன்றை உருவாக்கவேண்டும்!

மதப்பற்று கொண்டவனை விட்டுவிடலாம்.ஆனால் இந்த மதமாற்று வேலைகளிலும், களவாணி பயலுகளை ஆன்மீக தலைவர்னு சொல்லி ஆட்கள் சேர்ப்பிலும் டுபடும் so called 'கம்னாட்டிகளை' மன்னிக்கவே முடியாது.ஜேசு சீக்கிரம் வந்தாலாவது மன்னிப்பார்னு பார்த்தால்,அவர் தான் போன நூற்றாண்டிலிருந்து இந்தா வாறன் அந்தா வாறேன்னு தண்ணி காட்டிக்கிட்டிருக்காரே..!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...