Thursday, December 23, 2010

தடுமாறும் ஐ தே க'வும்,எதிர்காலமும் !!

<
இரண்டு தசாப்த காலமாக எதிர்க்கட்சி வரிசையில்(ஒரு இரண்டு ஆண்டுகள் தவிர்த்து) ஐக்கிய தேசியக் கட்சி,ரணில் விக்கிரமசிங்க தலைமையில்!!
பலமான எதிர்க்கட்சியாக சில காலம் இருந்தது உண்மை தான்..ஆனால் தற்போது கட்சிக்குள் குத்தல்கள்,பிளவுகள்,விரிசல்கள் என்று ஏராளம் பிரச்சனைகள்.வெளியில் ஒன்றுமில்லை என்று காட்டிக்கொண்டாலும் உள்ளே அதிகமாகப் புகையும் பொது விஷயங்கள் வெளி உலகுக்கு தெரியவருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து நான்கு ஜனாதிபதி தேர்தல்களில் தோல்வி..எத்தனை பொதுத் தேர்தல்கள் என்று ஞாபகம் இல்லை..அத்தனை நடந்து விட்டன..

மாபெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பங்களுக்கான காரணங்கள் என்ன?பல காரணங்கள் கூறப்படுகின்ற போதிலும்,பின்வரும் சில காரணங்கள் முக்கியமானவை.
-சரியான தலைமைத்துவம் இல்லாமை..
-கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை
-இளையோருக்கு கட்சிக்குள் மதிப்பில்லை
-கிராமிய மட்டத்தில் கட்சிக்கு அக்கறையின்மை
போன்ற காரணங்களைக் காட்டி கட்சியின் பல முக்கிய புள்ளிகள் அரசின் பக்கம் சென்றுவிட்டனர்.எஸ் பி திசாநாயக்க,ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ என்று எத்தனையோ பேர்.(ஜி.எல்.பீரிஸ் விதிவிலக்கு.எந்த அரசாங்கம் வந்தாலும் அவரை தங்கள் பக்கம் இழுத்துவிடும்)..இப்படியே போனால் அரசாங்கம் ஐ தே க'வை விழுங்கிவிடும்,கட்சியே அழிந்து விடும் என்ற பயம் கட்சி ஆதரவாளர்களுக்கு வந்திருந்தது..(இவ்வாறே பலமாக இருந்த ஜே.வி.பி சிதைந்து சின்னாபின்னமாகிவிடிருக்கிறது!!).

இதனால் கட்சியை புனர் நிர்மாணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு போராடி வந்த கட்சியின் உறுப்பினர்கள்(முக்கியமாக சஜித் பிரேமதாச அணி) பல சவால்களுக்கு பின்னர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி கட்சி மறுசீரமைப்புக்கான மாநாட்டை நடாத்தி முடித்துள்ளனர்.தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் ஐ தே க'வை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதே அந்த மறுசீரமைப்பு மாநாட்டின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது..அந்த மாநாட்டை சட்ட ரீதியாக தடுக்க பல முயற்சிகள் நடைபெற்றபோதிலும்,தயாசிறி ஜெயசேகர,சஜித் போன்றோர் அந்த சிக்கல்களை வென்று மாநாட்டை திறம்பட நடாத்தினர்,.

உண்மையான ஒற்றுமை??

அன்று திரண்டிருந்த மக்களையும்,அரங்கிலே சஜித் மற்றும் ரணில் இருவரையும் ஒன்று சேரப் பார்த்த போது நிச்சயமாக துவண்டு போயிருந்த கட்சி ஆதரவாளர்களுக்கு புத்துயிர் கிடைத்திருக்குமென்பதில் சந்தேகமில்லை.
ஐ தே க'வின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதில் முக்கிய அம்சங்களாவன,
-கட்சியின் தலைமை ரணிலிடமே இருக்கும்
-கட்சிக்குள் ஜனநாயகம் பேணப்படும்
-இளைஞர்களுக்கான இடம் உறுதிப்படுத்தப்படும்
-கட்சியின் தீர்மானங்கள்,நிர்வாக தெரிவுகளுக்கு இரகசிய வாக்கெடுப்பை அமுல்ப்படுத்துதல்.
-வடக்கு,கிழக்கில் தமிழ்க்கட்சிகளுடன் கூட்டணி இன்றி,தமிழ் முஸ்லிம் தலைவர்களை ஐ.தே.க'வுள்ளேயே உருவாக்கல்.
போன்றனவாகும்.

இதிலிருந்து பல விஷயங்கள் புலனாகக்கூடும்.
முக்கியமாக கட்சி சீர்திருத்த மாநாட்டில் விளக்கங்கள் யாவும் சிங்கள மொழியிலேயே காணப்பட்டன என்றும் தமிழ் மொழி மூல விளக்கங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.அடிப்படையிலேயே பிழை.திருமதி மகேஸ்வரனை பற்றி குறிப்பிடத் தெரிந்த தலைவர்களுக்கு தமிழ் மொழி மூல விளக்கங்களோ,எழுத்து மூலமான சீர்திருத்தங்களை தமிழ் மூலமாக வழங்க வேண்டும் என்றோ தோன்றியிருக்கவில்லை.அவ்வாறெனில் ஐ.தே.க தனக்கு தமிழ் மக்களின் ஆதரவு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதா?
தமிழ் மக்கள் வாக்களிப்பது குறைவு என்றாலும் வாக்களித்த நேரங்களில் அதிக ஒட்டு வாங்கிய பெரும்பான்மை கட்சி ஐ தே க என்பதை தலைவர்கள் மறந்துவிட்டனர் போலும்.

கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்ட ஐ தே க இனிவரும் காலங்களில் அந்த கூட்டணிகளுக்கு பாய் பாய் காட்டியுள்ளது.இதற்கு முக்கிய காரணம் முஸ்லிம் காங்கிரஸ்(ரவூப் ஹக்கீம்'இன்) பொதுத் தேர்தலில் ஐ தே கவுடன் போட்டியிட்டு விட்டு தற்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை ஏற்று இயங்கி வருகிறதே ஆகும் எனக் கூறப்பட்டாலும்,கடந்த காலங்களில் பெரும்பான்மையான சிங்கள வாக்குகள் ஐ.தே.கவுக்கு கிடைக்காமல் போனதற்கு காரணம் அக்கட்சி சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கிறது என்ற ஆளுந்தரப்பின் குற்றச்சாட்டாகும்.(வெளியில் ஆதரவு.உள்ளுக்குள்?).
அத்துடன் சிறுபான்மைக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தால் அவற்றின் கோரிக்கைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றவேண்டிய தேவை,கடைப்பாடு ஐ தே கவுக்கு நேரலாம் அதனால் பெரும்பான்மையினரின் ஆதரவு கிடைக்காமல் பொய் விடலாம் என்ற நிலைப்பாடே ஆகும்.இது அரசாங்கம் தற்பொழுது கடைப்பிடித்துவரும் அதே கொள்கையே ஆகும்.

இனப்பிரச்சனைக்கு தீர்வு சம்பந்தமாக மாநாட்டில் வாய் திறக்காத ஐ தே க,இனிவரும் காலங்களின் பாரம்பரிய இனவாதக் கட்சியாக உருவாகக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாவே உள்ளன.அதன் மூலம் பெரும்பானமையினரோரின் வாக்குகள் மூலம் ஆட்சியை மீளக் கைப்பெற்றுவது நோக்கமாகும்.எனவே பிரதான இரு கட்சிகளிடையே வரும் காலங்களில் எந்தவித வேறுபாடும் காணப்படப்போவதில்லை.ஒரே நோக்கம் ஆனால் இரு கட்சி என்ற நிலைப்பாடே இருக்கப்போகின்றது.இனவாத செயற்பாடுகள் கொடி கட்டிப் பறக்கப் போகின்றன.கேட்பதற்கு தமிழ் மக்களுக்கு நாதி இருக்காது.சிங்கள மொழி மூலம் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று பிரச்சனை நடந்த போது எதிர்க்கட்சி மௌனத்தையே கடைப்பிடித்தது.இனி வரும் காலங்களில் இதை விட மோசமான நடவடிக்கைகள் தொடரும்.

ரணில் மீதான நம்பிக்கை கட்சி ஆதரவாளர்களிடையே கூட இல்லாமல் போய் விட்டது.அனைவரும் சஜித்'தையே தலைவராக்க முயல்கின்றனர்.ஆனால் கட்சி மாநாட்டில் ரணிலையே தொடர்ந்து தலைவராக வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.அவரும் கட்சியை விட்டுப் போவதாக இல்லை.சஜித் 'தும் வெளிப்படையாக எதுவும் பேசுவதாக இல்லை.ரணில் கட்சியின் சொத்தென்று கூறி வரும் அவர்,உண்மையாக தலைமைத்துவத்தை கொண்டிருப்பின் எப்போதோ தடைகளை உடைத்து தலைவராகி இருப்பார்.
எதிர்காலம் இவர்கள் கைகளில்!!

அடுத்த மூன்று மாதங்களுக்குள் கட்சியில் மறுசீரமைப்பு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது,.(பதினோரு நாட்கள் கடந்துவிட்டன.)
ரணிலையே தலைவராக வைத்திருந்தால் இவ்வளவு ஆர்ப்பாட்டம்,மாநாடு நடத்தி எந்தப் பயனும் இல்லை.அதை கட்சியும் நன்கறியும்.
பல இளைய இரத்தம் கட்சிக்குள் உள்ளது..சஜித்,கயந்த,தயாசிறி என புதியவர்களை ஆனால் செல்வாக்கு மிக்கவர்களை கட்சியின் முக்கிய பதவிகளில் கொண்டுவருவதன் மூலம் கட்சிக்கு புத்துயிர் அளிக்கமுடியும்.அதே சமயம் கட்சியின் சொத்தென வர்ணிக்கப்படும் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியில் கௌரவ பதவி ஒன்றை வழங்கலாம்.
ரணிலை விட சஜித்துக்கே தற்பொழுது ஆதரவு,மக்கள் சக்தி அதிகமாக உள்ளது.புதிதாக இப்போது சில நாட்களாக ரணில் வீதியில் இறங்கி துண்டுப் பிரசுரம் வழங்குவதை பார்த்தால் அதிசயமாக உள்ளது.பதவியை தக்கவைக்க முயல்கிறாரோ?
கௌரவப் பதவி நிச்சயம் வேண்டும்!!

தானாக தலைமைத்துவத்தை விட்டுக் கொடுத்தால் கட்சிக்கும்,ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கும் நல்லது.ஒரு உறையில் இரு கத்திகள் இருக்கமுடியாது.கட்சி மறுசீரமைப்பு கூட்டத்திலேயே தன்னை விட சஜித்துக்கு மக்கள் சக்தி,ஆதரவு அதிகம் என்பதை ரணில் உணர்ந்திருப்பார்.உணராவிடில் அவர் தலையெழுத்தை அவரே தீர்மானிக்கட்டும்.

இன்னும் 109 நாட்களுக்குள் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் யாவும் நிறைவுக்கு வரும்.அப்போது தெரியும் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகின்றன என்று.ஐ தே க உருப்படுவதட்கு இதை விட்டால் இனி வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும்.அல்லாவிடில் மாபெரும் கட்சியான ஐ தே க கண் முன் அழிவடைவதை யாராலும் தடுக்கமுடியாது என்பது கண்கூடு!!

அரசியல் குசும்பு;பிரபல தனியார் தொலைக் காட்சி ஒன்று தனது செய்திகளில் கட்டாயமான செய்தியாக(பிரச்சாரமாக??) ஒரு புதிய தமிழ் எம்.பி'யின் செய்திகளையே ஒளிபரப்பி வருகிறதே..தொலைக்காட்சியே தனிநபர் பிரச்சாரப் பீரங்கியோ??

டிஸ்கி:அம்மா அப்பாவும் சொன்னவா அரசியல் வேணாம் வேணாம் என்று..இந்த தம்பிக்கு...

Post Comment

6 comments:

ம.தி.சுதா said...

:))

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

ஷஹன்ஷா said...

அன்றைய பலமான கட்சி இன்று இப்படியா......??
அரசியலில் எல்லாம் சகஜமப்பா..........!!

http://sivagnanam-janakan.blogspot.com/2010/12/blog-post_22.html

Kiruthigan said...

ஐயகோ என்ன மதி சுதா சுடுசோறு வாங்கவில்லை..!!?
நல்ல பதிவு

கன்கொன் || Kangon said...

அண்ணே, என்னண்ணே திடீரென தேசிய அரசியல் பற்றிப் பதிவெல்லாம்? ;-)
சமூகப்பொறுப்புள்ள பதிவராகிற்றீங்களோ? ;-)

ஆனா உண்மைதான்,
ஐதேக ஒரு பொறுப்பான, பலமான எதிர்க்கட்சியா இல்லாததும் இலங்கை பின்தங்கியிருப்பதுக்கு ஒரு காரணம்.
இளைய இரத்தங்களைக் கொண்டுவந்து கட்சியை புனரமைப்புச் செய்ய வேண்டும்.

// எனவே பிரதான இரு கட்சிகளிடையே வரும் காலங்களில் எந்தவித வேறுபாடும் காணப்படப்போவதில்லை. //

:-)))
உண்மை.

நல்ல அலசல்... :-))

sinmajan said...

பொறுத்திருந்து பார்ப்போம்.. இந்தச் சீர்திருத்தங்கள் எல்லாம் என்னவாகிறது என..

U.N.P said...

அரசியல் நடத்துறான அராஜகம் நடத்துறான ........................?

நல்ல பதிவு ......... தொடரட்டும்......

Related Posts Plugin for WordPress, Blogger...