Thursday, July 4, 2013

"சிங்கம் 2"-விமர்சனம்!உண்மையிலேயே செம வேட்டை..!!

                       

படம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போதிருக்கிறது.பில்லா-நாகராஜசோழன் எம் எல் ஏ-முனி-விஸ்வரூபம்-துப்பாக்கி என்று அதே வரிசையில் இப்போது இயக்குனர் ஹாரியின் 'சிங்கம்'.

விஜய் வேண்டாமென்று நிராகரித்த கதைகள் வேறு நடிகர்கள் நடித்து ஹிட் ஆகியிருக்கின்றன.அப்படியான ஒன்று தான் சூர்யாவின் சிங்கம்.அதன் முதல் பாகம் வந்து ஹிட் அடிக்க,இந்தியிலும் அஜய் தேவ்கன்,காஜல் நடிப்பில் ரீமேக் ஆகி வெளியாகியது.அந்த வெற்றியை தொடர்ந்து,சிங்கம் பார்ட் 2 வெளிவந்திருக்கிறது.சிங்கம் படத்துக்கான விளம்பரங்கள், ப்ரொமோஷன் நிகழ்சிகள் என்று கடந்த ஒரு மாதமாகவே அனைத்து டிவி சேனல்கள் ஒரு பக்கம் என்றால்,சூர்யாவின் நடிப்பு,இயக்குனர் ஹாரியின் இயக்கம்,மற்றும் இதன் முதல் பாகத்தின் பிரமாண்டமான வெற்றி என்பன மறுபக்கம்  படத்துக்கான எதிர்பார்ப்பை எகிறிவிட்டிருந்தன.

சிங்கம் 1'இன் இறுதியில் பொலீஸ் வேலையிலிருந்து விலகி மளிகை கடை வைப்பதாக சொல்லிவிட்டு தூத்துக்குடியில் ஆயுத கடத்தல் நடக்கும் விவகாரத்தை கவனிக்க விஜயகுமார் துரைசிங்கத்தை அனுப்பி வைத்திருப்பார்.அதன் தொடர்ச்சியாக தான் சிங்கம் 2 வந்திருக்கிறது.தூத்துக் குடியில் ஒரு கல்லூரியில் என்சிசி ஆபீசராக வேலை பார்த்துக்கொண்டு தூத்துக்குடியில் ஆயுத கடத்தல் நடக்கிறதா என்பதை நோட்டம்விட்டு வரும் துரைசிங்கத்துக்கு அது ஆயுத கடத்தல் இல்லை,ஹெரோயின் கடத்தல் என்பது தெரியவருகிறது.சகாயம்,தங்கராஜ்(சங்கமம் ரகுமான்),பாய் என்கின்ற மூன்று தாதாக்கள் தூத்துக்குடியில் இயங்க,இவர்களுக்கெல்லாம் தலையாக 'டானி"இயங்கிக்கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார் சிங்கம்.'ஆபரேஷன் D"என்கின்ற பெயரில்,இடையே வரும் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து இந்த போதை மருந்து கடத்தல் கும்பலை ஒட்டுமொத்தமாக பிடித்து அழிக்கும் முயற்சியில் துரைசிங்கம் பாய்ந்து வேட்டையாடும் படலம் தான் சிங்கம் 2'..!முழுக்கதையையும் சொல்லிவிட்டால் விறுவிறுப்பிருக்காது.காரணம் தியேட்டரில் பார்க்கவேண்டிய படம்.அதனால் பெரும்பாலான சுவாரசியங்களை சஸ்பென்ஸ்லேயே விட்டுவிடுகிறேன்.

                   

படம் சொல்லி 'ஹிட்'அடித்திருக்கிறது.படத்தின் ஹீரோக்கள் இருவர்,ஒருவர் இயக்குனர் ஹாரி,இன்னொருவர் சூர்யா!வேகமான திரைக்கதை, பார்வையாளனை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் 'இது எப்படி சாத்தியம்" என்று கேட்க வைக்காத லாஜிக்குடன் கூடிய காட்சிகள் என்று படத்தின் வேகமான ஓட்டத்துடன் ஒட்டி இருக்கவைத்துவிடுகிறார் ஹாரி.மசாலா படம் தானே,எதை வேண்டுமானாலும் காட்டிவிடலாம் என்பதை விடுத்து திரைக்கதையில் எந்த ஓட்டைகளுமின்றி காட்சிகளை அமைத்து மற்றைய மசாலா பட இயக்குனர்களுக்கு ஹாரி ஒரு 'குட்டு'போட்டிருக்கிறார் என்றே சொல்லலாம்!ஹாரி தான் இப்படி என்றால்,இயக்குனரின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிர்கொடுத்திருக்கிறார் சூர்யா.சூர்யாவின் நடிப்பு பிரமாதம்!ஆக்க்ஷன் காட்சிகளில் தூள் பரத்துகிறார்.பாடல் காட்சிகளில் துள்ளலான நடனம்,அதுக்கேற்ற நடிப்பு,கோபம் என்று சூர்யாவுக்கே பொருந்திய கதாபாத்திரமாகிவிட்டது சிங்கம்!

என்சிசி ஆபீசர் வேலையை களைந்துவிட்டு பொலீஸ் டியூட்டிக்கு பொலீஸ் ட்ரெஸ்'சை மறுபடி மாட்டிக்கொண்டு சிங்கம் வேட்டைக்கு கிளம்புகையில் நம்மை அறியாமலேயே க்ளாப்ஸ் வாங்கிவிடுகிறார் சிங்கம்!ஹாரி படத்தின் வழமையான டாட்டா சுமோக்கள்,அரிவா,வெள்ளை வேஷ்டி சட்டை கூட்டம்னு இருந்தாலும்,படம் ரெண்டே முக்கால் மணி நேர படமாக இருந்தாலும்,எந்த இடத்திலும் பார்வையாளர்களை சலிப்படைய வைக்காத கதையின் வேகம்,ட்விஸ்ட்டுகள்,சீட் நுனிக்கே இழுத்துவரும் விறுவிறுப்பு... அது தான் சிங்கம் 2....!

சிங்கம் 1'இல் சிங்கத்தின் நாயகியாக வந்த அனுஷ்காவுக்கு போட்டியாக ஹன்சிகா பாடசாலை மாணவியாக வந்து சிங்கத்தின் மேல் காதல் கொள்கிறார்.நன்றாக மெலிந்திருக்கிறார்.அப்படியே அனுஷ்காவை அழகில் ஓரம்கட்டிவிடுகிறார்.விஜயகுமார், விவேக்ராதாரவி,மனோரமா,நாசர் என்று பழைய கூட்டணி இதிலும் தொடர்கிறது.கூடவே சந்தானத்தின் வருகை நகைச்சுவைக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறது.விவேக்கை விட சந்தானம் அதிகமாய் ஸ்கோர் பண்ணுகிறார்.இரட்டை அர்த்த காமெடிகளுக்கு தியேட்டர் அல்லோலகல்லோலப்படுகிறது!சூர்யா ஒரு பக்கம் மாஸ்னா,சந்தானம் மறுபக்கம் மாஸ்!

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஏலவே வெளிவந்திருந்தாலும், பெரிதாக ஸ்கோர் பண்ணியிருக்கவில்லை.ஆனால் படத்துடன் சேர்த்து பார்க்கையில் பாடல்கள் அனைத்தும் பிடித்திருக்கிறது.எல்லாம் ஹாரி மேஜிக்!ஓபினிங் சாங்'இல் அஞ்சலி வந்து ஆடிச்செல்கிறார்.ஹன்சிகாவின் காதல் பாடலான'புரியவில்லை இது புரியவில்லை'பாடல்  நன்றாக இருந்தது. பாடல் காட்சிகளில் விஜய் போன்று 'முட்டி மூமெண்ட்ஸ்"போடுமளவுக்கு மெருகேறியிருக்கிறார் சூர்யா!

படத்தில் ஒரு இலங்கை வில்லனும் வருகிறார்.ஆம்,ஒரு சிங்கள வில்லனை அழைத்து சிங்கத்தை போட்டுத்தள்ளும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள் வில்லன் க்ரூப்.ஆனால் இறுதியில் தாங்களே அவனை போட்டுத்தள்ளி யிருந்தார்கள்.தமிழனுக்கு கெடுதல் விளைவித்த சிங்களவனை அழைத்து அடித்து கொன்று பழிதீர்த்திருக்கிறார்கள் என்றார் பக்கதிலிருந்த ஒருவர். கூடவே 'இந்து சமுத்திரத்த ஆளுவது இந்தியா' தாண்டா அப்பிடின்னு ஒரு பஞ்ச் வரும் படத்தில்.அது கூட இப்போதிருக்கும் சீனா-இந்தியாவின் இந்து சமுத்திர போட்டியில் இந்தியா தான் 'தலை'அப்பிடின்னு சீன அரசுடன் நல்லுறவாடும் இலங்கைக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை என்றும் அதே நண்பர் கமெண்ட் அடித்தார்.சிரித்து மகிழ்ந்தேன்.

படத்தில் குறைகள் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக எதுவுமே இல்லை. வழக்கமாகவே ஹாரி படங்களில் சத்தம்,வன்முறை அதிகமாக இருக்கும். க்ளைமேக்ஸ்'இல் மசாலா படத்துக்கே உரிய  ஒரு சில லாஜிக் பிழைகள் தென்படலாம்.அதை தவிர வேறு குறைகள் தெரியவில்லை. உலகம் முழுவதுமாக  2400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆன சிங்கம்-2,அடுத்த இரண்டு வாரத்துக்கு போட்டியில்லாமல் சக்கைபோடு போடப்போகிறது.காரணம் அடுத்த பெரிய படமான மரியான் 19ஆம் தேதி தான் வெளிவருகிறது.அதனால் சிங்கம் 1'ஐ போல சிங்கம் 2'உம் மெகா ஹிட் அடிக்கும் போல்தான் தெரிகிறது!
என்னுடைய மார்க் 73/100

(Brit tamil இணையத்துக்காக எழுதியது)
--------------------------------------------
படம் வருமுன்னரே ஒரு விமர்சனம் எழுதி சிங்கம்-2'ஐ கலாய்த்து ஓட்டியிருந்தேன்.அதுக்கு நேர் எதிர்மாறு படம்.முதல் விமர்சனம் படிக்க:

"சிங்கம் 2"-முதல் விமர்சனம்-செம்ம வேட்டை..!!!

Post Comment

Thursday, June 27, 2013

"சிங்கம் 2"-முதல் விமர்சனம்-செம்ம வேட்டை..!!!


படம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போதிருக்கிறது.பில்லா-நாகராஜசோழன் எம் எல் ஏ-முனி-விஸ்வரூபம்-துப்ப்பாக்கி என்று அதே வரிசையில் இப்போது இயக்குனர் ஹாரியின் 'சிங்கம்'.

விஜய் வேண்டாமென்று நிராகரித்த கதைகள் வேறு நடிகர்கள் நடித்து ஹிட் ஆகியிருக்கின்றன.அப்படியான ஒன்று தான் சூர்யாவின் சிங்கம்.அதன் முதல் பாகம் வந்து ஹிட் அடிக்க,இந்தியிலும் அஜய் தேவ்கன்,காஜல் நடிப்பில் ரீமேக் ஆகி வெளியாகியது.அந்த வெற்றியை தொடர்ந்து,சிங்கம் பார்ட் 2 வெளிவந்திருக்கிறது.ஏற்கனவே படத்தின் ட்ரெயிலரில் சூர்யா அனைத்து சேனல்களிலும் மணிக்கு மூன்று முறை வந்து 'யார்லே..எலே வாங்கலே..." அப்பிடின்னு அரிவாவ கையில வைச்சு மிரட்டி அப்பாவி ஜனங்களை தியேட்டருக்கு வான்னு மிரட்டியிருந்தார்.எங்க போகாமல் விட்டால் வெட்டிவிட்டிடுவாரோன்னு பயந்து நானும் போயிட்டேன்.. அதன் பின்னர் நடந்தது என்ன?

ஆரம்பமே அமர்க்களம் தான்.ஒரு காலேஜுக்குள் புகுந்து ரவுடிக்கும்பல் ஒன்று அட்டகாசம் செய்துகொண்டிருக்கிறது.பொண்ணுங்க மேல கைவைக்கிறதும்,எதிர்த்து கேக்கிறவங்கள அடிச்சு நொறுக்கிறதுமா இருக்கும்போது,இத பாத்து பொறுக்கமுடியாத அஞ்சலி துரைசிங்கம் ஐயாவுக்கு(அதாங்க சிங்கம் பார்ட் 2) போன் போட்டு சொல்றாங்க.சர்ர்னு ஒரு பொலீஸ் ஜீப்ல வந்து இறங்கிறார் சூர்யா.அப்பிறம் என்ன? ஓட ஓட அடி..இடைக்கிட,உசரம் பத்தாம போக,பாஞ்சு பாஞ்சு அடிக்கிறார்...அதுக்கு 'பாஞ்சு அடிச்சா பதினஞ்சு டன் வெயிட்டா..'''அப்பிடின்னு ஒரு பஞ்ச் சொல்லி சமாளிச்சிக்கிறார்.பைட்டு சீன் முடிஞ்ச சந்தோசத்தில காலேஜ் பொண்ணுங்க கூட ஆட்டம் போடுறார்.அஞ்சலி சேர்ந்து ஆடுறாங்க.இத தூத்துக்குடில படமாக்கியிருக்காங்க.எல்லாரும் இவர் புகழ் பாடுறாங்க.'இட்ஸ் சிங்கம் டான்ஸ்"அப்பிடின்னு காலேஜ்ல ஆட்டம்போடுறாங்க.

சென்னை ரவுடிஸ் எல்லாரையும் ஆல்ரெடி போட்டு தள்ளினதால,இம்முறை கொஞ்சம் பெரிய ரவுடீஸ் கொண்டுவர வேண்டியது அவசியம் எண்டதால,கதைய கொஞ்சம் அரசியலோட சம்பந்தப்படுத்தி,ஆப்ரிக்கா வரைக்கும் கொண்டு போயிருக்கிறார் ஹாரி.கதை ஆப்ரிக்காவுக்கு போகுது இடைவேளைக்கு அப்புறமா தான்.'ஐ ஆம் வெயிட்டிங்க்' அப்பிடின்னு துப்பாக்கில விஜய் பஞ்சு வைச்ச மாதிரி 'வாங்கலே......" அப்பிடின்னு ஆப்ரிக்க தீவிரவாதிகளுக்கு அடித்தொண்டையில சவால் விடுறார் ஈஸ்வரசிங்கம்.

சிங்கம் முதல் பாகத்திலேயே அனுஷ்கா மேட்டர்,கல்யாணம் கட்டிக்கிற அளவுக்கு வந்திட்டதால,இந்த பார்ட் 2'ல புதுசா ஹன்சிகாவ இறக்கியிருக்காங்க.ஹன்சிகா கொஞ்சம் மெலிஞ்சு காலேஜ் பொண்ணா வர்ராங்க.அனுஷ்கா இடைவேளைக்கு முன்னாடி கொஞ்ச சீன்லயும், இடைவேளைக்கு அப்புறமா க்ளைமாக்ஸ்லயும் ஒருதடவை வர்றாங்க.அதை தவிர படம் முழுக்க ஹன்சிகா தான் ஆட்சி பண்றாங்க.அனுஷ்காவுடன் பாடல் காட்சிகளில் துள்ளி துள்ளி நடிச்ச சூர்யா ஹன்சிகா எண்டதால,தரையிலயே நின்னு நடிக்கிறாப்லே.ஹன்சிகாவோ, அனுஷ்காவோ,ரெண்டு பேருமே சூர்யாவோட அம்மா மாதிரி தான் இருக்காங்கப்பா..!


நம்மகூட ஜாலியா இருந்த பய இப்போ குளுகுளு ஹன்சிகாவ கண்டவுடன அந்த பக்கம் தாவிடிச்சே அப்பிடின்னு பீலிங்ல இருந்த அனுஷ்காவுக்கு ஒரு டெமோ குடுத்து விளக்குறார் சூர்யா.அத கேட்டிட்டு,வழமையான மோட்டு ஹீரோயின் மாதிரி 'உங்கள புரிஞ்சுக்கிட்டேங்க..ஐ லவ் யு சோ மச்" அப்பிடின்னு உருகுறாங்க அனுஷ்கா..அட இதில்லாம் எதுக்குன்னு கேக்கிறீங்களா?அடுத்த பாட்டு போடுறதுக்கான சிச்சுவேசனாம்!!

இடைவேளைக்கு அப்பிறமா ஆப்ரிக்கா போகனும்கிறதால அந்த இடத்தில ஹாரி ஒரு பஞ்ச் வைக்கிறார்..'ஊரு விட்டு ஊரு..நாடு விட்டு நாடு...கண்டம் விட்டு கண்டம் குறிக்கோளோட பாஞ்சு தாக்கிற சிங்கம் டா' அப்பிடின்னு.ஒவ்வொரு பஞ்சும் பறந்து பறந்து கையால ஓங்கி எதிலயாவது அடிச்சு தான் சொல்றார் சூர்யா.ஏன்னா,அப்போதான் நங்கூரம் மாதிரி நச்சின்னு மனசில பதியுமாம்.

கண்டம் விட்டு கண்டம் தேடி போற ஈஸ்வர சிங்கம் அயன் படத்தில கருப்பனுக கூட டீல் வைச்சிக்கிற மாதிரி டீல் வைச்சு மெயின் வில்லனான முகேஷ் ரிஷி'யயும்,தென்னாபிரிக்க நடிகர் ஒருவரையும் கண்டுபிடிக்கிறார்.க்ளைமாக்ஸ் பைட் நைஜீரியால நடக்குது.

இசை தேவிஸ்ரீ பிரசாத்.பெரிதாக வேலையில்லை இவருக்கு.சிங்கம் ஒன்ரின் பாடல்களுக்கு எக்ஸ்ராவா ரெண்டு ஸ்வரத்த போட்டு பாட்டை ரிலீஸ் பண்ணியிருக்காப்லே!'காதல் வந்தாலே காலிரண்டும் தன்னாலே'பாடலை போலவே ஒரு பாடல் அதே போல செட் போட்டு அதே போல குனிஞ்சு குனிஞ்சு ஆடியிருக்காப்லே சூர்யா!"கன்னுக்குள்ள கண்ண வைச்சு என்ன சுடாதை"எண்ட டூயட் தான் அது.

விவேக்கு முதல் பாகத்தில எரிமலை எப்படி பொறுக்கும்னு ஆட்டுப்புழுக்கைய ஆத்தில கரைச்சு பர்போம்மன்ஸ் காட்டியிருந்ததால,இந்தவாட்டி ப்ரொமோசன் குடுத்து இன்ஸு ஆக்கியிருக்காங்க,அதாம்பா இன்ஸ்பெக்டர்.நாடுவிட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம் பாயும்போது தமிழ் நாட்டில சிங்கத்துக்கு உதவி பண்றது நம்ம எரிமலை தான்! 

"ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு"காத்திருந்து கண்ணி வைச்சவன பிடிச்சிருக்கேன்..ஒரு பய தப்பமுடியாது"அப்பிடின்னு சொல்லும்போதாச்சும் 'இது தப்பாச்சே" அப்பிடின்னு எந்திரிச்சு ஓடியிருக்கனும்..முதல் பாகத்தில தமிழ் நாட்டு எதிரிகளையும்,இரண்டாம் பாகத்தில சர்வதேச எதிரிகளையும் போட்டு பந்தாடியிருக்கிறதால,மூணாவது பாகத்தில ஏலியன்ஸ் கூட பைட்டு வைக்கலாம்னு ஹாரியும் சூரியாவும் ப்ளான் போட்டிருக்காங்கப்பா.அதுக்கு ஒரு ட்ரெய்லர் விட்டு அதில "ஊரு விட்டு ஊரு,நாடு விட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம்,கெரகம் விட்டு கெரகம் பாஞ்சு தாக்கும் அப்பலோ சிங்கம்டா" அப்பிடின்னு பஞ்ச் வைப்பாரு.'வாங்கலே.." அப்பிடின்னு வாண்டட்டா ஏலியன்ஸ இங்க கூப்பிடுவாரு..அதுக்கு முன்னாடி நாம வேற கெரகம் ஒன்னுக்கு போயிடணும்பா..! 

'போங்கலே................!"


Post Comment

Tuesday, June 25, 2013

எஸ்.ரா'வின் 'சீட்டாட்டம்' -சிறுகதை..!

எஸ்.ரா'வின் சிறுகதை தான்.,ஆனால் அதற்கு முன்பதாக சுயபிரசங்கம்..

           "தைரியசாலிகளாகவும்,காந்தசக்தி பொருந்திய கண்கள் பொருந்தியவர்களுமான இவர்கள் சுக்கிர ஆதிக்கரென பார்த்த மாத்திரத்தில் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.மனம் எப்போதும் அழகான விடயங்களிலும் சங்கீதம்,நடனம்,கவிதை,சினிமா முதலிய இன்பகரமான விஷயங்களிலும் ஈடுபட்டிருக்கும்.ஐம்புலங்களினாலும் அனுபவிக்கக்கூடிய விடயங்களை எல்லாம் நன்கு கவனிப்பர்.சந்தோஷமாக வாழ்வதே இவர்கள் வாழ்வின் இலட்சியம்.போகங்கள் மனதை இழுக்கும்.வேதாந்திகள் உலகம் மாயை என்று சொல்லக்கேட்டால் இவர்களிக்கு சிரிப்பாக இருக்கும்.இத்தனை சுகங்கள் நிறைந்த இடத்தையா இப்படி கூறுகின்றனர் என்று நினைப்பார்கள்.

காவியம்,ஓவியம்,சங்கீதம்,நடனம் போன்றவற்றில் மனதை பறிகொடுக்கக் கூடிய இவர்களே இன்றுவரை பண்டைய சின்னங்களையும் நாகரிகங்களையும் கலைகளையும் பாதுகாத்து நமக்கு அளிப்பவர்கள். உல்லாசங்களில் கவனம் செலுத்துவதால் சுற்றுப்புறம்,வீடு,  தோட்டம் போன்றவற்றில் கவனம் செலுத்துவர்.வீட்டை அழகுப் பொருட்களால் நிரப்ப விரும்புவர்.இவர்களில் ஆண்களுக்கு கூட நகைகள் அணியப்பிடிக்கும். எப்போதும் சிரித்த முகத்தினராய் இருப்பார்கள். கலைஞர்களை ஆதரிப்பார்கள்.இந்த எண்ணின் கீழ் தான் பிரசித்தமான கலைஞர்கள் பிறக்கிறார்கள்..'"

கொஞ்சமாவது எண் ஜோசியம்,அதாங்க நியுமொரொலொஜி பற்றி தெரிந்திருந்தவர்கள் உடனேயே அடையாளம் கண்டுபிடித்திருப்பார்கள் மேலே குறிப்பிட்டது எந்த எண் பற்றியது என்று.'6'ஆம் எண்காரர் பற்றி எண் ஜோசியத்தில் கூறியிருப்பதை தான் எடுத்துவந்து சேர்த்திருக்கிறேன்.கடவுள் நம்பிக்கை அருகிப்போய்விட்ட என்னிடத்தில் சற்றே நம்பிக்கைக்கு ஆளான விஷயம் இந்த ஜோசியம்,அதுவும் முக்கியமாக எண் ஜோசியம்.நானும் ஆறாம் எண்ணில் பிறந்துவிட்டதால் பெருமை பீற்றிக்கொள்வதற்காக இதனை பகிரவில்லை,கட்டாயம் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்.எண் ஜோசியத்தில் நம்பிக்கை வர வைத்தது என்னமோ இந்த ஆறாம் நம்பர் தான்.

சிறுவயதில் இருந்து மேலே குறிப்பிட்டது போன்று இசை,கவிதை,கலை ஆர்வம்,நகைச்சுவை உணர்வு தானாகவே என்னுள் இருக்கின்றது.நகைச்சுவையை எங்கள் பாஷையில் சொல்வதானால் 'மொக்கை'.எப்போதும் சந்தோஷமாக,பிரச்சனைகளை மறந்து ப்ரீயாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பேன்.இதனால் தான் எண் ஜோசியம் மீது நம்பிக்கை வந்தது என்றில்லை.இவை எல்லாவற்றையும் ஒரு சம்பவத்தின் பின்னர் தான் தொடர்புபடுத்தி பார்க்க ஆரம்பித்தேன்.ஓரளவுக்கு ஒரே எண்காரர்கள் பொதுவான குணாதிசயங்களை கொண்டிருப்பதை கண்கூடாக காண முடிந்தமை தான் எண் ஜோசியம் உண்மையாக இருக்குமோ என்கின்ற நம்பிக்கையை கொடுத்தது.

பல்கலைக்கழகம் நுழைந்த முதல் வருடம் பொதுவாகவே ராகிங் எனப்படும் பகிடிவதை இருக்கத்தான் செய்யும்.கூட்டமாக இருத்தி வைத்து வதைத்து (F)பன் எடுக்கும் காலம்.இடையிடையே யாராவது சீனியேர்ஸ் வந்து 'ஆறாம் நம்பர் எல்லாம் கை தூக்கு?'என்று கேட்பார்கள்.அவர்கள் இருக்கும் மூட்'டை பொறுத்து அவர்களுக்கான 'வெகுமதிகள்' வழங்கப்படும்.ஒரு தடவை ஒரு பெண்ணுக்கருகில் உட்கார்ந்திருந்தேன்.வழக்கம் போல ஒருவர் வந்து 'டேய் நீ ஆறாம் நம்பர் தானே?எழும்பி போய் அங்கால மூலையில இரு போ" அப்பிடின்னு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போன்று ஒதுக்கி வைத்தார்.ஏன் எல்லோரும் இந்த கொலைவெறியில் இருக்கிறார்கள் என்று ஜோசிக்கத்தொடங்கினேன்.யூனிவர்சிட்டியில் மட்டுமல்ல,பொதுவாகவே ஆறாம் நம்பர் ஆட்கள் மீது ஒரே இமேஜ் தான் இருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாக தான் தெரியவந்தது.ஆமாங்க அந்த இமெஜ் வேறொன்றுமில்லை 'பொம்பிளை கள்ளனுக"..!

பொதுவாகவே பெண்கள் விஷயத்தில் இந்த ஆறாம் எண்காரர்கள் கில்லாடிகளாக தெரிந்தார்கள்.ஒரு கூட்டத்தில் பொண்ணுகளை உசார் செய்வதில் ஒருத்தன் திறமையாக இருந்தால்,உடனே நான் அவனுடைய பிறந்த தினத்தை கேட்டு தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பேன். ஏமாற்றமின்றி பெரும்பாலானோர் ஆறாம் எண்காரரே!பெண்கள் எங்கள் கண்கள்.,பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை..பெண்கள் சுற்றிவர இல்லாவிட்டால் வாழ்க்கையே இருண்டுவிட்டது போன்று தோன்றுவது எல்லாம் இவர்களுக்கு எப்போதும் பெண்கள் சூழ இருப்பதை வேண்டி நிற்கும்.பெண்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது அது கல்லூரிகளாகட்டும், வேலைத்தளங்களாகட்டும்.

யாழ்-கொழும்பு போக்குவரத்து இப்போது தரைவழி ஆகிவிட்டது.2007-08 இல் எல்லாம் விமானம் மூலம் தான்.ஒருதடவை சென்றுவர குறைந்தது 20000 முடியும்.அதைவிட மலிவாக இந்தியாவுக்கு சென்று வந்துவிடலாம்.கொழும்பு வந்த பின்னர் ஒருதடவை யாழ் சென்று திரும்புகையில் விமானத்தில் எடுத்துவந்தது ஒன்றே ஒன்று தான்.என்னுடைய யமகா கீபோர்ட். காம்பியூட்டர் கூட கொண்டுவர நினைத்திருக்கவில்லை.கவிதை என்கின்ற பெயரில் பாடசாலை உயர்தரத்திலும் சரி,கல்லூரிக்காலங்களிலும் சரி சுற்றியிருப்பவர்களை தொல்லைப்படுத்தி வந்திருக்கிறேன்.இவற்றை எல்லாம் நினைத்துப்பார்க்கையில் தான் எண் ஜோசியம் மீதான நம்பிக்கை துளிர்விட்டிருந்தது எனக்கு.ஆறாம் எண்காரரை தவிர்த்து எண் ஜோசியம் மீது நம்பிக்கையை அதிகரித்த பெருமைக்குரியவர்கள் எட்டாம் எண்காரர்கள்.அந்த கதைகளை இங்கே தவிர்ப்பது சில நட்புகள்-உறவுகளின் நீட்சிக்கு நல்லது.

சரி,கலை வல்லுனர்களில் பெரும்பாலானோர் இந்த எண்காரர்கள் என்று மேலே கூறியிருந்தார்கள் அல்லவா,காவியக்கவி கவியரசர் கண்ணதாசன், இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன், ஏ ஆர் ரஹ்மான் போன்ற பலர் ஆறாம் எண்காரரே.முதல் குறிப்பிட்ட இருவரினதும் பிறந்ததினமும் எனது பிறந்த தினமும் ஒன்று.ஆம் அது நேற்று :) ஏன் தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை,ஜெயலலிதா போன்றோரும் ஆறாம் எண்காரர்தாம்.

வாலி பாடிச்சென்றார்..,எனக்காக..!

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக -
அன்னை மடியை விரித்தாள் எனக்காக 

தவழும் நிலவாம் தங்கரதம் 
தாரகை பதித்த மணிமகுடம் 
குயில்கள் பாடும் கலைக்கூடம் 
கொண்டது எனது அரசாங்கம்.."

இந்த நம்பர்களை வைத்து எஸ் ரா எழுதிய 'சீட்டாட்டம்' என்கின்ற சிறுகதை என்னை மிகவும் யோசிக்க வைத்த சிறுகதை.அந்த சிறுகதையையும் எண் ஜோசியத்தையும் சம்பந்தப்படுத்திக்க நான் முயலவில்லை.ஆனால் வாசிக்காதவர்கள் கட்டாயம் ஒருதடவை வாசித்துப் பாருங்கள்.வாசித்து முடிந்தவுடன் ஏதாவது எண்ணவோட்டங்கள் மனதில் எஞ்சி நிற்பது திண்ணம்.


சீட்டாட்டம்

   சிறுகதை
இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள், சில சமயம் கற்பனையை விட உண்மை விசித்திரமாகவே இருக்கும்,
அவர்கள் சீட்டுவிளையாடிக் கொண்டிருந்த அறை கடற்கரையோர வீடு ஒன்றில் உள்ளது, அந்த வீட்டின் உரிமையாளர் வினி, அவள் இப்போது நொய்டாவில் வசிக்கிறாள், அவள் சென்னையில் இருந்த போது அந்த வீட்டில் தங்கியிருந்தாள், அவள் ஊரைவிட்டுப் போன பிறகும் சீட்டாட்டம் தடை செய்யப்படக்கூடாது என்பதற்காக சமையலுக்கும் உதவிக்கும் ஒரு ஆளை நியமித்துப் போயிருக்கிறாள், அந்த ஆள் தினமும் இரண்டு முறை உணவுத் தட்டுகளை அறையின் ஜன்னலில் வைத்துப் போகிறான், சில நேரம் பழங்கள் மற்றும் உணவு அப்படியே சாப்பிடப்படாமல் இருக்கின்றன, சில நேரம் சிகரெட் தேவை என்ற குறிப்பு ஜன்னலில் சொருகப்பட்டிருக்கிறது, அந்தச் சமையற்காரன் உள்ளே விளையாடும் மூவரையும் பார்த்ததேயில்லை ஆனால் அவர்களைப் பற்றி அவனாக நிறையக் கற்பனை செய்து வைத்திருக்கிறான்
அவர்கள் மூவரும் சீட்டாடத்துவங்கிய போது மூன்று நிபந்தனை விதித்தார்கள், முழுமையாக ஒருவர் வெற்றி பெரும்வரை ஆட்டத்தைப் பாதியில் விட்டு எவரும் விலகிப் போக கூடாது. விளையாட்டின் போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக்கூடாது, சீட்டாட்டம் முடிவுக்கு வரும்வரை அந்த அறையின் கதவு மூடப்பட்டிருக்க வேண்டும் என்பதே நிபந்தனை,
அந்த மூவருக்கும் பெயர்கள் இருந்த போதும் அவர்கள் 3, 6, 9 என அவர்களின் விருப்பமான எண்களால் அழைக்கப்படவே விரும்பினர், மூன்றாம் எண் உள்ள அந்த ஆள் இருபத்தியோறு வயது நிரம்பியிருந்தான், அதிகம் குடித்து அலையும் அவன் நான்குமுறை காதல் தோல்வியடைந்திருந்தான், ஆறாம் எண் உள்ளவன் ஒரு வணிகன், அவன் மனைவி அழகானவள், அவளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டான், அவளது அழகு நெருப்பைப் போல காண்பவரைப் பற்றிக் கொண்டுவிடுகிறது என்று சந்தேகம் கொண்டவானயிருந்தான், ஒன்பதாம் எண் உள்ளவன் நாற்பது வயதான ஒரு உயர் அதிகாரி அவன் மற்றவர்களைத் தோற்கடிப்பதில் ஏற்படும் சந்தோஷத்திற்காகவே சீட்டில் ஆர்வம் கொண்டிருந்தான், இவர்கள் மூவரும் ஒன்பதாம் எண் உள்ளவனின் ரகசியத் தோழியான வினி என்பவள் வீட்டினைச் சீட்டு விளையாடத் தேர்வு செய்தார்கள்,
சீட்டாட்டத்தில் அவர்கள் மாறிமாறி ஜெயிப்பதும் தோற்பதுமாக இருந்தார்கள், ஒரு ஆள் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றிபெற முடியாதபடி விளையாட்டு நீண்டு கொண்டேயிருந்த்து, இந்த விளையாட்டு அவர்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் பற்றிய சில யூகங்களே நிஜத்தை விட முக்கியமானது, அவர்கள் இப்படி எல்லாம் நினைத்திருக்க்கூடும் என்பதே இதன் புதிர்தன்மை,
யூகம் 1 : சீட்டில் ஆறர்ம் எண் கொண்டவன் தோற்றுப்போய்விட்டால் அதற்கு ஈடாக அவன் மனைவியை பறித்துக் கொண்டு அவளுடன் சல்லாபம் செய்யலாம் என்பதைப் பற்றி கற்பனை செய்து கொண்டான், அது சீட்டு விளையாட்டினை விட சுவாரஸ்யமாக இருப்பதாக நினைத்தான் 3ம் எண் உள்ளவன்
யூகம் 2 : 3ம் எண் உள்ளவன் இன்று தோற்றுப்போய் விட்டால் இங்கேயே தற்கொலை செய்து கொண்டுவிடுவான், அவனது சாவின் பிறகு அவனது பழைய காதலிகளை சந்தித்து அவனது கடைசி நிமிசம் பற்றிச் சொல்லி அவர்களோடு நெருங்கிப் பழக அதிக சாத்தியமிருக்கிறது என்பதை நினைத்து மகிழ்ந்தான் 6ம் எண் மனிதன்
யூகம் 3  :ஒன்பதாம் எண் உள்ளவன் தன் எதிரில் ஆடும் நபர்கள் திடீரெனப் பெண்களாக மாறிவிட்டால் அவர்களுடன் எப்படி உறவு கொள்ளலாம் என்று கற்பனை செய்தான்
யூகம் 4   : தனது தோல்விக்குக் காரணமான ஒன்பதாம் எண் உள்ளவனை கொல்வதற்கு என்ன ஆயுதங்களை தேர்வு செய்வது எப்படிக் கொல்வது என்று நினைத்தபடியே மௌனமாக விளையாடினான் ஆறாம் எண்
யூகம் 5 : இந்தச் சீட்டுவிளையாட்டு ஒரு சதித்திட்ட்ம் இதைத் தீட்டியவள் 9ம் எண்ணின் கள்ளக்காதலி அவள் மூவரையும ஒழிப்பதற்காக இதை ஏற்பாடு செய்திருக்கிறாள்,  இந்தச் சதி அவள் நினைத்த்து போல நடக்க கூடாது, ஆகவே ஆட்ட முடிவில் அவளைக் கொன்றுவிட வேண்டும் என்று நினைத்தான்3 எண் உள்ளவன்
யூகம் 6   :கையில் உள்ள சீட்டுக்ள் யாவும் உயிருள்ள பறவைகள் போல பறந்துவிடந்து துடிக்கின்றன, அதைக் கட்டுபடுத்தி வைப்பது சிரம்மானது என்று திகைத்தபடியே சீட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான் ஆறு எண் உள்ளவன்
யூகம் 7  :இரவும் பகலும் மாறிக் கொண்டேயிருக்கிறது, கடிகாரம் இல்லாமல் சீட்டின் உதவியாலே காலத்தை அளக்கமுடிகிறது, இதுவரை எவ்வளவு சீட்டுகள் இறஙகியிருக்கின்ற்ன  எவ்வளவு ஆட்ட்ம் முடிந்திருக்கிறது என்பதை வைத்து நாட்களைக் கணக்கிடுவது ஒரு விசித்திரம். என்றான் 3ம் எண் உள்ளவ்ன்
யூகம் 8  :ஒரு சீட்டினை ஒருவன் கையில் இருந்து கிழே போடுவதற்கும் மற்றவன் அதை எடுப்பதற்கும் இடையில் எண்ணிக்கையற்ற  உலக நிகழ்வுகள் நடக்கின்றன, பலர் பிறக்கிறார்கள் பலர் சாகிறார்கள் பலர் புணர்கிறார்கள் பலர் முத்த்மிட்டுக் கொள்கிறார்கள் பல கொலைகள் நடக்கின்றன பலர் காதலிக்க துவஙகுகிறார்கள் பலர் துரோகம் செய்கிறார்கள், பலர் செய்வதற்கு எதுவும் இல்லாமல் சகமனிதனை துன்புறுத்துகிறார்கள், இதற்கு இடையில் தான் சீட்டாட்டம் நடக்கிறது என்றான 9ம் எண் உள்ளவன
யூகம் 9  :ஒரு மலர் உதிர்வதை அல்லது பூப்பதைப் போல ஒரு விந்தையே ஒரு சீட்டை எடுப்பது, சீட்டு விளையாட்டு ஒரு விசித்திரத் தியானம், அங்கே நமது எண்ணங்கள் ஒடுங்கிவிடுகின்றன நாம் கரைந்து போய்விடுகிறோம் கண்களும் கைகளும் மட்டுமே செயல்படுகின்றன என்றான் ஆறாம் எண்
யூகம் 10 : சீட்டுவிளையாட்டு என்பது நமது வெறுப்பு. ஆசை மற்றும் கோபத்தை அளவிட உதவும் ஒரு கருவி. சீட்டு ஆடுகின்றவர்கள் தன்னைப் பரிசோதனை செய்து கொள்கிறார்கள், சீட்டுவிளையாட்டில் தோல்வியை இயல்பாக ஒருவராலும் எடுத்துக் கொள்ள முடியாது, புத்தன் சீட்டு ஆடினாலும் தோற்பதை கண்டு கோபமடைந்தே தீருவான் என்றாம் 3ம் எண் ஆள்
யூகம் 11  :சீட்டுவிளையாட்டில் மனம் எப்போதுமே இல்லாத விசயங்களைக் கற்பனை செய்கிறது, நடக்காத சாத்தியங்களை நிறைவேற்றி பார்க்கிறது, சீட்டு ஆடுபவர்களுக்கு உலகம் ஒரு இலந்தைபழம் அளவு சுருங்கிப்போய்விடுகிறது என்றான் 9ம் எண் ஆள்
யூகம் 12  :ஒருவர் கையில் உள்ள சீட்டும் மற்றவர் கையில் உள்ள சீட்டும் விநோதமான உறவு கொண்டிருக்கின்றன, அவை மனிதர்களின் வழியே தன் ஒன்ற சேருதலையும் பிரிவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன என்றான் 6ம் எண் மனிதன்
யூகம் 13  :எல்லாச் சீட்டுகளும் ஒன்று போலக் காணப்பட்டாலும் அதன் மதிப்பும் சேர்கையும் ஒன்றுபோல இருப்பதில்லை ஆகவே உலகை கையில் எடுத்து விளையாடுவதன் சிறிய வடிவமே சீட்டாட்டம், ஆகவே சீட்டாடி வெல்ல தெரிந்தவன் உலகை எளிதாக புரிந்து கொண்டுவிடுவான் என்றான் 9ம் எண்மனிதன்
யூகம் 14  :ஒவ்வொரு முறை சீட்டில் தோற்கும் போது காம்ம் பொஙகுகிறது, வென்றவனும் காமத்தை பற்றியே நினைக்கிறான், ஆகவே சீட்டு விளையாட்டின் வெற்றியும் தோல்வியும காமத்தூண்டல்களே, எல்லா விளையாட்டின் வெற்றியும் புணர்ச்சியால் மட்டுமே சாந்தியடைகிறது மனிதன் தனது ஒரே புகலிடமாக பாலின்பத்தையே கொண்டிருக்கிறான் என்றான் 3ம் எண் உள்ளவன்
யூகம் 15  :சீட்டுவிளையாட்டின் போது உருவாகும் மௌனம் தூக்கின் முன்னால் நிற்கும் மௌனம் போல அடர்த்தியானது, அது தொடர்ந்து மனதை வன்முறையை நோக்கியே செலுத்திக் கொண்டிருக்கிறது, சீட்டு மனிதன் கண்டுபிடித்த ரகசியமான ஆயுத்ம் என்று நினைத்தான் 6ம் எண் கொண்டவன்
யூகம் 16  :ஏதாவது ஒரு நிமிசம் 3வரும் ஒரே சீட்டைத் தேர்வு செய்வதும் 3வரும் ஒரே சீட்டை கிழே போடுவதும் நடக்கிறது  அப்போது ஒரே ஆள் தான் மூன்று தோற்றத்தில் விளையாடுவது போல உள்ளது என்றான் 9ம் ஆள்.  சீட்டாட்டம் உச்சமடையும் போது நிர்வாணமாக இருப்பது போலேவே தோன்றுகிறது, அறைக்கு வெளியே உள்ள உலகின் சிறு சப்தம் கூட பேரோசையாகி விடுகிறது, ஆகவே சீட்டு விளையாட்டு உலகின் நுண்மையை மனம் அறியும் தருணம் என்றான் 6ம் எண் மனிதன்
யூகம் 17  :சீட்டில் வைக்கப் பணம் இல்லாத போது வீட்டின் அருகாமையில் உள்ள மரங்கள் தெருநாய்கள் காட்டில் உள்ள மிருகங்கள் அருவி ஆறு மலை ஆகாசம் நட்சத்திரம் சூரியன் சந்திரன் என எதையும் பந்தயப்பொருளாக வைத்துச் சூதாடலாம், அது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றே, அதை எவரும் ஆட்சேபணை செய்ய முடியாது. சீட்டுவிளையாட்டு   கணிதத்தின் உன்னத நிலை அதை விளையாடி அனுபவிக்கிறோம் என்றான் 9ம் எண் உள்ளவன்
யூகம் 18  :கள்ளத்தனத்தை கற்றுக் கொள்வதற்கு எளிமையான பயிற்சியே சூதாட்டம், சீட்டு ஆடும் மேஜையில் வைக்கபடும் உணவு பானகம் இரண்டும் ருசியிழந்துவிடுகின்றன, சூது தேனையும் கசக்க செய்யக்கூடியது என்றான் 3ம் எண்காரன்
யூகம் 19  :விதியை நேர்கொள்ள விரும்பினால் சூதாடி பார்க்கலாம்,   எல்லா சீட்டுவிளையாட்டிலும் கண்ணுக்கு தெரியாமல் விதியும் சேர்ந்து உட்கார்ந்தே ஆடுகிறது, அதன் பரிகாசக்குரலை பல நேரங்களில் நாம் கேட்க முடியும் என்றான் 6ம் எண்
யூகம் 20  :தோற்றுத்திரும்புகின்றவன் அடையும் வலி சொல்லற்றது, அதை புரிந்து கொள்ள சூதாடினால் மட்டுமே முடியும் ஆகவே சூதாட்டம் என்பது வலியை விரும்பி ஏற்றுக் கொள்வது என்றான் 9ம் எண்
இப்படி அவர்கள் நினைத்த யூகங்களைத் தாண்டி அவர்கள் விளையாடிக் கொண்டேயிருந்தார்க்ள் 8365 நாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் விளையாடிய போதும் சீட்டாட்டம் முடிவடையவேயில்லை, ஒரு நாள் சமையல்காரன் அந்த அறைகதவை திற்ந்து பார்த்த உள்ள மூன்று காலி நாற்காலிகள் மட்டுமே இருந்தன, அதன் முன்னே உள்ள மேஜையில் சீட்டுகள் சிதறியிருந்தன, அவர்களை காணவில்லை, எங்கே போனார்கள் யார் ஜெயித்தார்கள் எப்போது வெளியேறி போனார்கள் என்பது இன்றுவரை மர்ம்மாக இருக்கிறது, சீட்டுவிளையாட்டினைப் போலவே அவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கும் முடிவில்லாத சாத்தியங்கங்கள் இருக்கின்றன, அதனால் அவர்களை யாரும் தேடவேயில்லை

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...