Saturday, September 29, 2012

"பர்பி"(Barfi!)'யும் ஆஸ்கார் 2013 'ம்...!


"பர்பி"(Barfi !) கடந்த பதின்னான்காம் தேதி வெளியாகி ஆஸ்கார் வரைக்கும் பேசப்படுகின்ற ஒரு ரொமாண்டிக்,காமெடியான இந்தி சினிமா.பெண்களின் மனம் கவர் நாயகன் ரன்பீர் கபூர்,ஆண்களின் ஆசை நாயகிகள் பிரியங்கா சோப்ரா மற்றும் இலியானாவின் நடிப்பில் "Gangster (2006)",Kites (2010) போன்ற படங்களை இயக்கிய அனுராக் பாசு'வின் எழுத்து,இயக்கத்தில் வெளியாகி இருக்கின்ற இந்த பர்பி தான் "சிறந்த பிறமொழி படத்துக்கான ஆஸ்கார்"பரிந்துரையாக 85ஆவது ஒஸ்கார் விருதுகளுக்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டிருக்கிறது.

படத்தின் கதை என்றால்,ரன்பீர் கபூர்(பர்பி) ஒரு காது கேட்காத வாய் பேசாத ஆனால் ஒரு ஜாலியான கேரக்டர்.தன் கிராமத்துக்கு வரும் இலியானா(ஸ்ருதி)மீது காதல் கொள்கிறார் இந்த பர்பி.ஆனால் ஏலவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இலியானா கூட பர்பியின் அழகான மனதை கவரும் நடவடிக்கைகளால் பர்பி மீது காதல் கொள்கிறார்.தனியே முத்தமிடவும் செய்கின்றனர்.ஆனால் ஸ்ருதியின் தாயாரின் வற்புறுத்தலின் பேரில் தனக்கு நிச்சயிக்கப்பட்டவனையே திருமணம் செய்துகொள்கிறார் ஸ்ருதி.மறுபக்கம் பர்பியின் அப்பா ஒரு கார் டிரைவராக பிரியங்கா சோப்ராவின்(ஜில்மில் சட்டர்ஜி) தகப்பனிடம் வேலை செய்கிறார்.பிரியங்கா "ஆட்டிசம்" எனும் நோயால் பாதிக்கப்பட்ட பெண்.இவரும் பார்பியும் சிறுவயது நண்பர்கள்.ஒரு கட்டத்தில் பர்பியின் தந்தையின் ஆப்பிரேசனுக்கு பணம் தேவைப்பட,வேறு வழி இல்லாத பர்பி தன் பால்ய சினேகிதி ஜில்மில்'ஐ கடத்தி,அவளின் பணக்கார தந்தையிடம் பணம் பறிக்க நினைக்கையில் தான் ஏற்கனவே ஜில்மில் கடத்தப்படுகிறாள் என்பது தெரியவருகிறது..அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை படத்தில் பாருங்கள்.


படத்தில் பெரிதாக பத்து பதினைந்து கேரக்டர்கள் கிடையாது. ரன்பீர், இலியானா,பிரியங்கா,இலியானாவின் அம்மா,நண்பி,பிரியங்காவினதும்  ரன்பிரினதும் தகப்பனார்கள்,ஒரு போலீஸ்காரர் தான் தான் படம் முழுவதும்.

பர்பி(ரன்பீர் கபூர்)
Rockstar 'இல் ஆண்டின் தொடக்கத்தில் மனதை கொள்ளைகொண்ட ரன்பீர் கபூர்,இந்த படத்தில் முழுமையாக தனது நடிப்பாலும் அழகாலும் தன்வசப்படுத்தி விடுகிறார்.இந்த பர்பி பாத்திரத்துக்கு மிக பொருத்தமான தெரிவு.அமீர்கானால் கூட இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது.முகபாவனைகள் அபாரம்.படத்தின் அரைப்பகுதி ரன்பிரின் முக உணர்ச்சிகளால் தான் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.அத்தனை நகைச்சுவை காட்சிகளிலும் தூள் பண்ணுகிறார்.தன்னை முத்தமிட்டுவிட்டு இன்னொருவனை கல்யாணம் செய்துகொள்ளும் இலியானாவை சந்தித்து பேசுகையில்...இல்லை இல்லை சந்தித்து தன் உணர்ச்சிகளை கொட்டுகையில் ஒரு கணம் மனம் கரைந்துவிடுகிறது.

வீட்டில் ரன்பிரின் தகப்பனார் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுகையில் ரன்பீர் அது நடப்பது தெரியாமலே காதல் தோல்வியடைந்த இரவு தண்ணியடித்து மயக்கத்தில் கிடப்பது உச்சக்கட்ட உணர்ச்சிகளின் தூண்டல்..!

                          

இலியானா(ஸ்ருதி)
"நண்பன்" படத்தில் நடிப்பு என்றால் என்ன என்று கேட்டு இடுப்பை மட்டும் ஆட்டிவிட்டு சென்ற இலியானாவா இது என்று கேட்க வைக்கிறார்.தன்னால் முடிந்த உச்சபட்ச நடிப்பை இயக்குனருக்கு கொடுத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.ஒரு கையாலாகாத பாத்திரம்.ஒரு பக்கம் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை மறுபக்கம் பர்பி என்று தடுமாறும் வாழ்க்கை.இலியானாவின் பாய்ன்ட் ஒப் வியூல தான் படம் செல்கிறது போல காட்டப்பட்டிருக்கிறது.

பிரியங்கா சோப்ரா (ஜில்மில் சட்டர்ஜி)
பிரியங்காவின் உதடுகளை பார்க்கவோ,கண்களை பார்க்கவோ,கவர்ச்சியை பார்க்கவோ இதுவரை படம் பார்க்க சென்றிருந்தால் இம்முறை பிரியங்காவின் நடிப்பை பார்க்க செல்லலாம்.படத்தில் பர்பி பர்பி என்கின்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவுமே வாயிலிருந்து வெளிவரவில்ல,சிந்தும் உணவுகளும் குடிக்கும் பாலையும் தவிர.ஆட்டிசம் என்கிறன மனவளர்ச்சி சம்பந்தப்பட்ட கோளாறால் பாதிக்கப்பட்ட கேரக்டர்(development disability).மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாவோ அல்லது வேறு வகையிலோ தன்னை சுற்றிய உலகுடன் தொடர்பு கொள்ள முடியாத குறைபாடு.எவ்வித உடல்ரீதியான குறைபாடுகளும் இல்லாமல் தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக்கொண்டு அதனில் அமிழ்ந்து கிடக்கும் வாழ்க்கை கொண்டவர்கள் இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.

ஒரு கட்டத்தில் இலியானா ரன்பிருடன் சேர்ந்து ஊர் சுற்றுகையில் சாதாரணமாக ஒரு பெண்ணிடம் ஏற்படும் பொறாமை,அல்லது என்னவென்று சொல்வது,"அவர் எனக்குத்தான்" என்கின்ற உணர்வை தன் நடிப்பின் அட்டகாசமாய் செய்து காட்டியிருப்பார் பிரியங்கா.ரன்பிருக்கும் பிரியங்காவுக்கும் இம்முறை எத்தனை அவார்டுகள் கிடைக்கப்போகின்றனவோ தெரியவில்லை.
-----

படம் முழுவதும் நகைச்சுவைக்கு குறைவே கிடையாது.அதுவும் போலீஸ் ஆபிசருக்கும் ரன்பிருக்கும் இடையிலான "டொம் அண்ட் ஜெர்ரி" பாத்திரப்படைப்பு நிச்சயம் சிரித்தே வயிறு நோக வைக்கவல்லது.படம் எழுபதுகளின் நடப்பதை போன்று காட்டி இருக்கிறார்கள்.அதற்கேற்ற ஒளிப்பதிவு,இடத்தேர்வுகள் அபாரம்.நாங்களும் எழுபதுகளுக்கே சென்றுவிடுகிறோம்.

படத்தின் இன்னொரு பலம் படத்தின் இசை,பின்னணி இசை.Bodygurad ,Rush ,Race3 ,Dhoom3 போன்ற அதிரடி படங்களின் இசையமைப்பாளர் ப்ரிதம் சக்ரபோர்த்தி தான் இப்படத்துக்கும் இசை.பாடல்கள் எல்லாம் மெல்லிசையில் மனதை வருடுகிறது என்றால் படத்தின் பின்னணி இசை அபாரம்.அனைத்து சீனிலும் ஒரு வயலின் இசை அல்லது பல வயலீன்கள் ஒன்றிணைந்து தரும் இசைவெள்ளத்தில் படத்துடன் ஒன்றித்து போய்விடுகிறோம்.ஜாலியான காட்சிகளில் வேகமாகவும்,சோகமான இடங்களில் மெல்லிதாகாவும் சார்லி சாப்ளின் படங்களில் வரும் பின்னணி இசையினை போன்றது பர்பியி'லும் இசை.

ரபீர்,இலியானா,பிரியங்கா என்கின்ற இம்மூவரும் எனக்கு கிடைத்திருந்தால் ஒரு அற்புதமான காதல் படம் ஒன்றை எடுத்திருக்க முடியும் நான் ஒரு இயக்குனராய் இருந்திருந்தால்.ஆனால் மூவரையும் வேறு திசைக்கு மாற்றி ஒரு வேறுபட்ட ரசனைக்குரிய படமாய் தந்த "பெருமை" கான்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் அனுராக் பாசுவுக்கே சாரும்.
-----------------------------------------------------------------------------------------------
                     

ஒரு நண்பி தான் படத்தை பார் நல்லா இருக்கு என்று கடந்த திங்கள் கூறி இருந்தாலும் நேரம் கிடைக்காததால் நேற்று தான் பார்க்க முடிந்தது.படம் பார்க்க தொடங்கும் முன்னரேயே படம் ஆஸ்கார் என்று செய்தி கேள்விப்பட்டிருந்ததால் தான் என்னமோ,படத்தில் பல காட்சிகளை மனது ரஹ்மானின் ஆஸ்கார் படமான ஒத்து நோக்கியது..அதிலும் இந்தியாவின் பல கேவலங்கள் வெளி உலகுக்கு சொல்லப்பட்டிருந்தன.அது போல இதனிலும் சில.முக்கியமாக இந்திய போலீஸ் என்றாலே இப்படி கோமாளிகள் தான் என்கின்ற மனபிரம்மை வெளிநாட்டவர்களுக்கு இந்த "ஒஸ்கார்" மூலம் தெளிவாக காட்டப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க "பர்பி" பல வெளிநாட்டு படங்களை சுட்டு ஒன்றாக்கிய கலவை என்று கோஷமிட தொடங்கியிருக்கின்றனர்.படம் பார்த்தவர்களுக்கு படத்தில் வந்த சில காட்சிகளாவது வேறு சில ஹாலிவூட் படங்களை ஞாபகப்படுத்திவிட்டிருக்கும்.ஆனால் ஒன்று இரண்டல்ல படத்தின் பெரும்பாலான காட்சிகள் அனைத்துமே அவ்வாறு சுடப்பட்டு தான் வெளிவந்திருக்கிறது என்பதை கீழ்வரும் காணொளியை பார்ப்பதன் மூலம் கண்டுகொள்ளலாம்.





இது மட்டுமல்லாது இதனை போல பல காணொளிகள் யூடியூபில் வெளிவந்தவள்ளமுள்ளன.மேலே காணொளியை பார்த்திருந்தால் அவை பின்வரும் படங்களை ஞாபகப்படுத்தியிருக்கும்.


Singin' in the Rain (1952)

Jackie Chan's Project A (1983)
Buster Keaton's Cops (1922)
The Notebook (2004) 
Mr Nobody (2009)
Black Cat, White Cat (1988)
The Goonies (1985)
Fried Green Tomatoes (1991)
Kikujiro, Benny & Joon (1993)
Korean film Oasis (2002)
Chaplin's City Lights (1931)


படத்தில் பர்பி போலீஸ்காரருடன் ஒரு கதவின் பின்னால் ஒளிந்து ஒளிந்து செய்யும் லூட்டிகள் அனைத்தும் The Adventurer (1917என்கின்ற சார்லி சாப்ளினின் படத்தில் உருவியது.அத்துடன் படத்தின் பின்னணி இசை கூட Amelie (2001) என்கின்ற படத்திலிருக்கின்ற மாதிரியே இருக்கிறது என்று கூறப்படுகிறது.

பாங்கில் கொள்ளையிட பிடிக்க வரும் போலீஸ்காரரிடம் தப்பிக்க "ஸ்லைடிங்" கதவு வரும் ஸீன் சார்லி சாப்ளினின் "The Adventurer "(1917)படத்தில் சுடப்பட்டது. 


கதவில் அடிபட்டு மூக்கு வளைந்தது போல பிரியங்காவை குஷிப்படுத்த ரன்பீர் காட்டும் ஸீன்,மற்றும் சோபா ஒன்றில் டம்மி உருவம் ஒன்றுடன் விளையாடுவது ஆகிய இரண்டும் Singin’ In The Rain (1952) படத்தில் உருவப்பட்டது.

ரன்பிருடனான காதலை நிறுத்த தனது பழைய பாய் ப்ரெண்டை இலியானாவின் தாயார் இலியானாவுக்கு காரில் சென்று காட்டுவது மற்றும் க்ளைமாக்சில் பிரியங்கா மற்றும் ரன்பிரின் ஹாஸ்பிட்டல் ஸீன் இரண்டும் "The Notebook (2004)" படத்திலிருந்து எடுக்கப்பட்டது.

ரன்பீர் ஒரு சிலையின் மீது படுத்திருந்து விழித்தெழுவது போன்ற காட்சி சார்லி சாப்ளினின்  City Lights (1931) படத்தின் அப்பட்டமான காப்பி.

கல்கத்தாவில் போஸ்டர் ஓட்டும் போது பசை பூசிய காகிதத்தில் ரன்பிரின் கை,கால்கள் ஒட்டுவது போன்ற காட்சி "Mr Bean episode titled Back To School "இல் எடுக்கப்பட்டது.

ரன்பிரும் பிரியங்காவும் வீதியில் ஆணி வைத்து வரும் காரை பஞ்சராக்கும் காட்சி "Kikujiro "(1999) படத்தில் எடுக்கப்பட்டது.மேலதிகமாக இந்த படம் தான் மிஸ்கினால் "நந்தலாலா"(2010) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது அனுமதியில்லாமல்.

ஆரம்ப காட்சியில் சுவர் மீது ஏணி வைத்து ரன்பீர் மாறி மாறி சரியும் காட்சி "Keaton short Cops " (1922) படத்தில் எடுக்கப்பட்டது.இதே படத்திலிருந்து தான் ரன்பீர் பஸ்இல் தொங்கி போகும் காட்சி கூட சுடப்பட்டதாம்.

போலீஸ் கலைக்கும் போது சைக்கிளில் ஒடுங்கிய ஒழுங்கை ஒன்றில் ரன்பீர் ஓடும் காட்சி ஜாக்கிசானின் "Project A " (1983) படத்தில் ஆட்டையப்போட்டது.அதில் கதவை தட்ட கதவு திறக்கப்பட அதில் போலீஸ் அடிபட்டு விழுவதும் அப்பட்டமான காப்பி.

ஆற்றங்கரையில் சாமியார் மடியை உற்றுநோக்கி அதிலிருக்கும் பேப்பரை பார்ப்பது போன்ற காட்சி பல விளம்பரங்களில் வந்திருந்தாலும் அது  ஒரு ஸ்வீடிஷ் செய்தித்தாள் ஒன்றின் விளம்பரம் என்று கூறப்படுகிறது.
பிரியங்காவை குஷிப்படுத்த ரன்பீர் தனது கண்களில் பேப்பரை ஒட்டி விளையாட்டு காட்டுவது "Mr Bean’s Holiday (2007)" படத்தில் வந்ததாகும்.
இப்படி பல உதாரணங்கள் கூறப்படுகின்றன.

இந்த விமர்சனத்துக்கெல்லாம் படத்தின் இயக்குனர் தான் செய்தது தவறு இல்லை என்கின்ற மாதிரி தான் பதிலளித்திருக்கிறார்.இப்படத்தை ஹாலிவூட் படத்தின் நகல் என்று கூறுவதை விட ஹாலிவூட் படங்களால் இன்ஸ்பையர் ஆகி ஹாலிவூட்டுக்கு வழங்கப்படுகிற ஒரு மரியாதையாகவே கொள்ளப்பட வேண்டும் என்று ஒரு சாரார் படத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.


படத்தை ஒஸ்காருக்கு "சிறந்த வெளிநாட்டு பிறமொழி படத்துக்கு" பரிந்துரை செய்த கமிட்டியின் தலைவரான மஞ்சு பூரா(Manju Borah) தாங்கள் இப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்புவதற்கு எந்தவித கையூட்டையும் பெறவில்லை.படத்தின் "treatment and freshness" காரணமாக தான் பர்பியை தெரிவு செய்தோம்.எந்த ஒரு இயக்குனருக்கும் வேறு ஒரு இயக்குனர் அல்லது சினிமாவின் பாதிப்பு கட்டாயம் இருக்கத்தான் செய்யும்.மிகவும் கிரியேட்டிவான இயக்குனர் தான் அனுராக் பாசு.பதினோரு பேரை கொண்ட கமிட்டி ஒட்டுமொத்தமாக இப்படத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் தான் இப்படம் தெரிவுசெய்யப்பட்டது என்கிறார் மஞ்சு.  

எது எப்படியோ,ஒரு ஜாக்கி சான் படம்,அல்லது சார்லி சாப்ளினின் படம் பார்க்காத சினிமா துறை சார்ந்தவர் யார் தான் இருக்கமுடியும்.அப்படங்களின் காட்சிகளை கொண்ட இப்படத்தை ஒஸ்காருக்கு அனுப்ப தெரிவு செய்த செலேக்சன் கமிட்டியில் இருப்பவர்கள் சினிமா படங்களே பார்க்காதவர்களா?இத்தனைக்கும் கமிட்டி தலைவர் மஞ்சு பூரா ஒரு தேசிய விருது பெற்ற பிலிம் மேக்கர். இப்படியான படங்களை அனுப்பி இருக்கின்ற இந்தியன் சினிமா இமேஜை கெடுத்துக்கிறதை விட பர்பியை அனுப்பாமல் விடுவதே மேல்.இத்தனை பெரிய நாடு இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தான் சாதிக்க தெரியவில்லை என்று பார்த்தால் சினிமாவில் கூட சொந்த கதை வைத்து படம் எடுத்து ஆஸ்காருக்கு அனுப்ப தெரியவில்லை.


ஏற்கனவே தமிழில் "ஐ ஆம் சாம்"ஐ இயக்குனர் விஜய் காப்பியடித்த பிரச்சனை காரணமாக தெய்வத்திருமகள் நான் கடைசிவரையில் பார்க்கவே இல்லை.பதிலாக ஐ ஆம் சாம் பார்த்தேன்.இப்போ இந்த பிரச்சனை.நடிகர்களுக்கு பஞ்சம் இல்லை.விக்ரம்,ரன்பீர் போன்றவர்களின் நடிப்பு திறமைகள் இருக்கும் போது நல்ல கதைகளுடன் கூடிய இயக்குனர்கள் தான் பிரச்சனை போலும்.இதுவரை ஆஸ்காருக்கு இந்தியாவின் மூன்று படங்களே "ஷோர்ட் லிஸ்டட்" ஆகி இருக்கின்றன."Mother India "(1958),"Salaam Bombay "(1989) இறுதியாக லகான் 2002 'இல் என்பது குறிப்பிடத்தக்கது.


இதை எல்லாம் தவிர்த்து படம் வெளியாகி பத்து நாட்களில் உள்நாட்டு,வெளிநாட்டு வசூல் எல்லாம் சேர்த்து நூறு கோடியை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது பர்பி.ஒஸ்காருக்கு அனுப்பிய பிரச்சனை ஒரு பக்கம் கிடக்கட்டும்.அனைவரும் கட்டாயம் ஒருதடவையாவது பர்பி பாருங்கள்.படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை உலகை மறந்து படத்துடன் ஒன்றித்து லயித்து போவது நிச்சயம்.

Post Comment

13 comments:

Unknown said...

கதையின் மைய கரு அருமை, நான் ரசித்து பார்த்தேன்.. பிரியங்காவிற்கு கண்டிப்பாக பல விருதுகள் காத்துகொண்டு இருக்கிறது, இலியான மாறுபட்ட தோற்றம், ரன்பீர் நல்ல நகைச்சுவை கலந்த நடிப்பு..

Unknown said...

பாக்கணும் பாஸ்!

Unknown said...

//தமிழில் "ஐ ஆம் சாம்"ஐ இயக்குனர் விஜய் காப்பியடித்த பிரச்சனை காரணமாக தெய்வத்திருமகள் நான் கடைசிவரையில் பார்க்கவே இல்லை.பதிலாக ஐ ஆம் சாம் பார்த்தேன்//

தெய்வத்திருமகள்' பற்றி நீங்கள் பேசியதால்....

'ஐயாம் சாம்' பாத்துட்டீங்க இல்ல? 'தெய்வத்திருமகளை' பார்க்க முடிந்தால் அது உங்களின் மனதைரியத்தின் அடையாளம்! காப்பி அடித்தது கூட விட்டுடலாம். இது ஒரிஜினலை முடிந்தவரை கேவலப்படுத்துவதை..??

உண்மையில் ஐயம் சாம் பார்த்தவர்களால், முக்கியமாக 'விளங்கி/புரிந்து' பார்த்தவர்களால் தெய்வத்திருமகளைச் சகிக்கவே முடியாது! என்னால் ஐந்து நிமிடங்கள் கூட விக்ரமின் சேட்டைகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. நம்மவர்களால் 'நடிப்பு' என்று கொண்டாடப்படும் 'நடிப்பு' அது!

Unknown said...

//அதிலும் இந்தியாவின் பல கேவலங்கள் வெளி உலகுக்கு சொல்லப்பட்டிருந்தன.அது போல இதனிலும் சில.//

ஆமால்ல! அப்புறம் சொந்த நாட்டைக் கேவலப்படுத்தி விருது வாங்கிட்டாய்ங்க என்று ஒரு கோஷ்டி கூச்சல் போடும்ல! :-)

அப்புறம் இந்தியப் போலீஸ் பற்றி என் நண்பர்கள் பலரும் சொன்னது.. சினிமாவில் காட்டுவது அப்படியே உண்மை என்று - குறிப்பாக தொந்தியும், லஞ்சமும்!

Yoga.S. said...

வணக்கம்,மைந்தரே!படிச்சு(பதிவ)முடிக்கவே நாலு நாள் ஆகும் போலயிருக்கு!புதன்கிழமை கருத்து சொல்லுறேன்,ஹி!ஹி!ஹி!!!!

பி.அமல்ராஜ் said...

விரைவில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது... அபாரமான ஒரு சல்லடை போட்டிருக்கிறீர்கள் இந்த விமர்சனத்தை எழுதுவதற்கு பாஸ்.. தேடலுக்கு சபாஷ்.

JR Benedict II said...

ரொம்ப அழகா விமர்சனம் பண்ணி இருக்கீங்க.. முடிஞ்சவரை உங்க மன ஓட்டத்திலே சொல்லி இருக்கீங்க.. அப்படியே இறுதியா சில தகவல்களும் இணைச்சு இருக்கீங்க.. அதுல Notebook மட்டுமே பார்த்தவுடன் கண்டு பிடிச்சன்.. கலக்கல் நண்பா

தனிமரம் said...

ஒரு அலசல் பதிவு!ம்ம் இன்னும் படம் பார்க்கவில்லை பாஸ்§

Aish Chan said...

விமர்சனம் பார்க்கும் போதே படம் பார்க்க தோன்றுகிறது. கொப்பி பண்ணி எடுத்தாலும் நீண்ட நாளுக்கப்புறம் ஒரு உணர்வு பூர்வமான படம் என்றால் ரசிகர்களுக்கு நல்லதே!

ஹாலிவுட்ரசிகன் said...

அழகா எழுதியிருக்கிறிங்க சிவா. இந்தப் படத்தைப் பார்க்கிறதா? இல்ல,, பேசாம நீங்க சொல்லியிருக்கிற ஹாலிவுட் படங்களைப் பார்க்கிறதா?

எப்படி அனுப்பினாலும் காப்பியடித்த படம்னு தெரிய வந்தா விருதும் கிடைக்காது...போதாக்குறைக்கு இது இந்தியசினிமாக்கு ஒரு பெரிய கறையாகிவிடும்.

நல்ல கொப்பி வந்திட்டா எண்டு தேடிப்பார்க்கிறன்.

Unknown said...

/Ayesha Farook /
ஆம் இருவருக்கும் விருதுகள் நிச்சயம்...படத்துக்கும்-இந்திய அளவில்!

/ஜீ... /
தெய்வ திருமகளை மறந்துவிடுங்கள்..நானும் மறந்துவிட்டேன் :)

//Yoga.S. //
வருகைக்கு நன்றி பாஸ்

/பி.அமல்ராஜ் //
நன்றி கட்டாயம் பாருங்க

/ஹாரி பாட்டர் //
நன்றி நண்பா

/தனிமரம் //
பாருங்க ஒருக்கா...

/Aish Chan //
ஹிஹி ம்ம்ம் நல்லது தான்..

//ஹாலிவுட்ரசிகன்/
கட்டாயம் பாருங்க...

கார்த்தி said...

கனக்க நண்பர்களின் பதிவுகளில் பல நல்ல விடங்கள் வருகின்றது என தெரிந்திருந்தும் இப்போது பதிவு எழுதுவதிலும் வாசிப்பதிலும் போதிய நேரம் கிடைப்பதில்லை. இந்த பதிவை இப்போதுதான் வாசித்தேன். தொடர்ந்த நல்ல வேற்று மொழி சினிமா பற்றியும் தமிழ் ரசிகர்களுக்கு அறியதாருங்கள். நன்றி!

கார்த்தி said...

கனக்க நண்பர்களின் பதிவுகளில் பல நல்ல விடங்கள் வருகின்றது என தெரிந்திருந்தும் இப்போது பதிவு எழுதுவதிலும் வாசிப்பதிலும் போதிய நேரம் கிடைப்பதில்லை. இந்த பதிவை இப்போதுதான் வாசித்தேன். தொடர்ந்த நல்ல வேற்று மொழி சினிமா பற்றியும் தமிழ் ரசிகர்களுக்கு அறியதாருங்கள். நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...