Monday, August 19, 2013

ஆதலினால் பதிவு செய்வீர் 002...!


பேஸ்புக் பதிவுகளின் தொகுப்பு:

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் ட்விட்டரிலும்,பேஸ்புக்கிலும் தான் தங்கள் எழுத்துக்களை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர்.மீளப்பெற முடியாத எழுத்துக்கள், கற்பனைகள்  அவை.அதனால் மாதத்துக்கு இருதடவையேனும் ட்விட்டர்,பேஸ்புக்கில் கிறுக்கித் தள்ளுவனவற்றை ப்ளாக்கில் பதிந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்,எனக்கான ஒரு சேமிப்பாக..!எதிர்காலத்தில் திரும்பிப்பார்த்தால் ஒரு அசைபோட்டது போன்று இருக்கலாம்..!விரும்பியவர்கள் படித்துக்கொள்ளுங்கள்.என்னுடன் பேஸ்புக்கில்,ட்விட்டரில் நண்பர்களாக இருப்பவர்களுக்கு இவை பழைய விடயங்கள் தான் :) அந்தவகையில் இது இரண்டாவது பதிவு.



சுதந்திரம்..!


'நாடோடிகள்'படத்தில் மொட்டை மாடியில் படுத்திருப்பார்களே?அதுபோன்று இரவில் வானத்தை பார்த்தபடி தூங்கவேண்டும்.சுகமான கடல்காற்று தழுவிச்செல்ல வேண்டும்.ஒரு ரேடியோவில் 'நான்-ஸ்டாப்'பாக இளையராஜா பாடல்கள்(இரவென்பதால் ராஜாவுக்கு முன்னுரிமை)ஒலிக்கவேண்டும்.தனித்து அல்ல,நெருங்கிய நண்பர்கள் சிலருடன் நாட்டு நடப்புகள் பற்றியும்,ஏரியா பெண்கள் பற்றியும் அளவளாவியபடியே நேரத்தை களிக்க வேண்டும்.

ஆமா திடீரென மழைபெய்துவிட்டால்?கொழும்பில் எப்போது மழை பெய்யுமென்று யாருக்கும் தெரியாதே?மொட்டை மாடியில் சின்னதாக கூரை வேய்ந்துவிடுவோமா?ம்ம்ஹும் அப்படியானால் நட்சத்திரங்களை எப்படி வேவு பார்ப்பது?


சரி மழை தொடங்கினால்,எழுந்து வீட்டுக்கு சென்றுவிடலாம் தான். ஆனால்,நடுச்சாமத்தில் ஏறி இறங்கி பொடியள் அட்டகாசம் என்று அடுத்த நாள் காலை ப்ளாட் முழுவதும் தலைப்பு செய்தியாகிவிடுமே?

ஒரே இரவில் கெட்டவனாகிவிட முடியும் ஒரு குறுகிய சமூக கூட்டத்துக்கு.என்ன,மொட்டை மாடியில் சென்று தூங்கவேண்டும்..!எதற்கு வம்பு..'நல்ல பையன்கள்'என்றால்,இரவு முழுவதும் இணையத்தில் கழித்துவிட்டு,போர்த்து மூடிக்கொண்டு விட்டத்தை பார்த்தபடி தூங்குவார்களாம்.சந்தேகமே வேண்டாம்.இத்தனை வருடங்கள் என்னை ஒரு நல்ல பையனாக நான் நிரூபித்துக்கொண்டிருக்கிறேன்..!


பெண்களும் வேலைப்பழுவும் பெண்ணியவாதிகளும்..!


கொழும்புக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்கு வரும் சில பெண்களை பார்த்து வியந்திருக்கிறேன்.புகையிரத பயணம் தான். சிலசமயம் புகையிரதம் புறப்படும் நேரம் காலை 5.30-6.30 ஆக இருக்கும்.அப்படியாயின் காலை 4 மணிக்கோ அதற்கு முன்பதாகவோ எழுந்திருந்து சமையல் வேலையை கவனித்தால் தான் குறித்த நேரத்துக்கு புகையிரதத்தை பிடிக்கமுடியும்.காலை உணவும்,மதிய உணவும் சமைத்து கொண்டேவருவார்கள். கணவருக்கும் கொடுத்து விடுவார்கள்.


வேலை முடிந்து மாலையில் 6மணிக்கு புகையிரதத்தை பிடித்து வியர்த்து நாறிய மந்தை கூட்டத்துள் ஒருத்தியாக 'நின்று' பயணித்துதனது நகரத்தை அடைய 8 மணி,பின்பு புகையிரத நிலையத்திலிருந்து கடைசி பேரூந்தை பிடித்து நகரத்திலிருந்து தொலைவிலிருக்கும் கிராமத்துக்கு ஒரு மணி நேர பயணம்.9,9.30 ஆகும் இரவு வீடு போய்ச்சேர!

இதற்குள் சின்ன வயது பிள்ளைகள் இருந்தால் டபுள் வேலை!இரவு கணவன் தொலைக் காட்சிக்குள் தன்னை தொலைத்துவிட,அடுத்த நாளுக்கான காய்கறிகளை வெட்டி வைப்பதோடு,பிள்ளைகளையும் கவனித்து கணவனுக்கும் பணிவிடை செய்து படுக்கச்செல்லும் போது நேரம் இரவு 12 ஐ தொட்டிருக்கும்..'அப்பாடா..'என்று கண்ணயரத்தான் 'அடடா நாளை எழும்புவதற்கு அலாரம் வைக்கவில்லையே"என்கின்ற ஞாபகம் எமனாக வந்து தொலையும்.'விடிய எந்திரிச்சு சமைச்சு வேலைக்கு கிளம்பணுமே' என்ற வெறுப்பில் எப்படித்தான் இவர்களுக்கு தூக்கம் வருகிறது என்பதை நினைத்துப் பார்க்கக்கூட வலிக்கிறது..!
இரும்பு பெண்கள்;பாவம்,பெண்ணியம் பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை..!


அரசியல்?

தமிழ் கூட்டமைப்பை கடுமையாக தாக்கியும்,ஒரு பெரும்பான்மை கட்சியை ஆதரித்தும் தேர்தல் மேடைப்பேச்சு ஒன்று தயார் செய்து தரும்படி யாழ் தேர்தலில் 'குதித்திருக்கும்' ஒருவர் சார்பாக அவர் நண்பர் கேட்டார்.



'சரி எவ்ளோ தருவீங்க'ன்னேன்.'(அரசியல்ப்பா...உசிரு சம்பந்தப்பட்டது..!)அதெல்லாம் இல்ல மச்சான் சூடா ஒரு பேச்சு ரெடி பண்ணி அனுப்பு'ன்னு ஆர்டர் பண்ணான்.'சரிடா மச்சான்'ன்னு போனை கட் பண்ணிட்டேன்.



நேத்து ஒருத்தர் 'நான் சுயேச்சைல நிக்கிறேன்..மாற்றத்துக்கு ஆதரவு தாங்க'அப்பிடின்னார். சாரிங்க எனக்கு இன்னும் ஓட்டு போடுற வயசு வரலைன்னு சொல்லிட்டேன்..

இவங்கள்லாம் எங்க இருந்து வந்தீங்களோ தெரியாது..ஆனா என்னய எங்க கொண்டு போய் நிறுத்தப்போறீங்கன்னு மட்டும் தெளிவா தெரிஞ்சிடுச்சு மாப்ளே..!ஆளை விடுங்கப்பா..அஞ்சு நாளைக்கு கடைக்கு லீவு போட்டுக்கிறேன்..!!


அரச கரும மொழி


என்னதான் தமிழ் இலங்கையில் அரச கரும மொழி என்று வெளியே கூறிக்கொண்டாலும், சிங்களம் மட்டுமே நடைமுறையில் உள்ளது என்பது எந்த அரச திணைக்களம், சங்கங்களுக்கு செல்கின்றவர்கள் கண்கூடாக காணக்கூடிய ஒன்று!


அதுவும் சில அலுவலர்கள் உட்சபட்சமாக ஒரு ஆங்கில வார்த்தை கூட கலக்காது தனி இலக்கிய சிங்களம் பேசுவார்கள்.ஓரளவு சிங்களம் தெரிந்த நமக்கே சிங்கியடிக்கும்.முற்றாக தெரியாதவர்கள் முழிப்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாது.இன்று இதனை இன்னொரு தடவையாக அனுபவப்பட்டேன்.

யாரோ சொன்னார்கள் 'கொழும்பு பல்கலைக்கழகம்'என்பதில் 'ழ'கழன்று தொங்கி காணாமல் போய்விட்டது,அதனை தமிழ் மாணவர்களே சரிசெய்ய கேட்டபோதும் அனுமதி வழங்கப்படவில்லை என்று. மும்மொழியிலும் எழுதப்பட்ட பல்கலை பெயரில் தமிழில் மட்டும் எழுத்துக்கள் காணாமல் போவது என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.(சுகததாச ஸ்டேடியம் இன்னொரு உ+ம்).

ஆமா,இதை எல்லாம் ஏன் இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்?தெரியவில்லை.உங்களுக்கு புரிந்திருக்குமோ என்னமோ..ம்ம்ம்


பாஸ்....?!


இந்த 'பாஸ்'என்கின்ற வார்த்தை எப்படி நம்கூட ஒட்டிக்கொண்டது தெரியவில்லை. பெரும்பாலானோர் 'பாஸ் என்கின்ற பாஸ்கரன்' படத்துக்கு பின்பதாக தான் அதனை அதிகம் பாவிக்கத் தொடங்கியிருந்தனர்.ஆனால் நான் 'பாஸ்'பாவிக்க தொடங்கியது அதற்கு முன்பு;வேறு காரணத்தால்!


மூன்று வருடங்களுக்கு முன்பு,'ஜெய்லானி'என்கின்ற பதிவரின் 50'ஓ இல்லை 100ஆவது பதிவுக்கு 'வாழ்த்துக்கள் அக்கா'அப்பிடின்னு கமெண்டிவிட்டு வந்துவிட்டேன்.(பிகரா இருக்குமோ!!)சில நாட்களின் பின்னர் தான் தெரியவந்தது அது பெண் பதிவரில்லை,ஆண் பதிவர் அப்பிடின்னு.அடடா அந்த மனுஷன் என்ன நினைத்திருப்பார் 'அக்கா'என விளித்ததற்கு என்று பிற்பாடு தான் வருந்திக்கொண்டேன். சிலசமயம்புனைபெயர்களால் இத்தகைய பிரச்சனைகள் வருவதுண்டு.
உ+ம்:சுஜாதா,சாரு நிவேதிதா

அன்றிலிருந்து எங்கு சென்றாலும்,'பாஸ்'போட்டு கதைப்பது, கமெண்ட்டுவது வழக்கமாகி விட்டது.அண்ணா,தம்பி,ஐயா என்று கதைப்பதை விட 'பாஸ்'என்று அழைப்பதை நெருக்கமாக உணர்ந்தேன். ஆரம்ப காலங்களில் 'நான் என்ன படைத்தளபதியா?பாஸ்ன்னு கூப்பிடாதீங்க'அப்பிடின்னு கடிந்துகொண்ட சிலரும் இருக்கிறார்கள், அவர்களும் இப்போது 'பாஸ்'க்கு அடிமை ஆகிவிட்டனர்.

பெண்கள் கூட இப்போதெல்லாம் கமெண்ட் இடும்போது 'பாஸ்'என்பதை பாவிக்கின்றனர், அது அவர்களுக்கு கூச்ச சுபாவத்தை மறைத்து துணிவாக பொதுவில் இயங்க ஊக்கமளிப்பதாக இருக்கும் என நினைக்கிறேன்.எது எப்படியோ 'பாஸ்'என்பது பல உறவு முறைகள், வயது,பால் வேறுபாடுகள் போன்ற தடைகளை உடைத்து சகஜமாக பழக உத்தரவாதமளிக்கும்,ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குள் ஊடுருவிய ஒரு அற்புதமான வார்த்தை..!

--------------------------------

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஸ்ரீதேவி அளவுக்கு இன்றைய சமந்தாவோ நஸ்ரியாவோ ஒடிஞ்சுபோன அர்ஜூன்மகள் ஐஸ்வர்யாவோ,தேஞ்சு போன கமல் மகள் ஸ்ருதியோ என்னை ஆட்கொள்ளவில்லை..!


இதில,ரூ.1.5 கோடி கொடுத்தால் மட்டுமே நடிப்பேன்னு ஸ்ருதி அறிக்கைவிட்டிருக்கார். எக்ஸ்ராவா கொஞ்சம் போட்டு 2 கோடி தர்றோம்மா...நீங்களும்,அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் கம்னு வீட்ட இருந்தா அதுவே கோடி புண்ணியம் நமக்கு..!

----------------------------

ஒருபக்கம் அறிவிலிகள் நடிகர்களுக்காக தற்கொலை செய்கிறார்கள் என்றால்,அதை விஞ்சிய அறிவிலிகள் அந்த தற்கொலையில் காமெடி செய்து இன்பம் காண்கிறார்கள்..!


நிச்சயமாக ரசிக்க முடியவில்லை;இரண்டையுமே..!!

------------------------------

வாந்திகள்,வக்கிரங்கள் எப்போதுமே அருவருக்கத்தக்கவை.பஸ்சில் பக்கத்தில் இருப்பவன் வாந்தி எடுப்பவன் என்றால் இன்னொரு சீட்டில் போய் உட்கார்வது உசிதமான காரியம்.பேஸ்புக்கில் அப்படியானவர்களின் போஸ்ட்டுகள் உங்கள் டைம்லைனில் வராமல் செய்துகொள்வது உங்கள் மேல் வாந்தி தெறித்து அசிங்கப்படுத்தி விடாமல் இருக்கவும்,அமைதியான வாழ்க்கைக்கும் வழிசமைக்கும்..!


காரணம் வாந்தி எடுக்கும் பழக்கம் இருப்பவர்களால் அதனை நிறுத்திக்க முடியாது.அது இயல்பு..!

--------------------------

'கௌரவம்'பார்த்தால் இந்த காலத்தில் வாழ முடியாது.எதிரிக்கு எதிரியாகவும்,வில்லனுக்கு வில்லனாகவும்,சதிகாரருக்கு சகுனியாகவும் தந்திரங்களுக்கு மத்தியில் ராஜதந்திரியாகவும் இருந்தால் தான் ஓரளவுக்கேனும் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும்.


ஏதோ ஒரு வகையிலான 'ரத்த பூமி'யில் தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!

-------------------------
கிளிநொச்சி


யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார்,திருகோணமலையிலுள்ள பிரதான தெருக்களை விட கிளிநொச்சியில் ஒரு சில பெருந்தெருக்கள், முக்கியமாக ஏ9 நெடுஞ்சாலை மிக விசாலமாக,அழகாக,நவீனமாக, வெளிநாட்டு தரத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ளது!


அந்த நெடுஞ்சாலையில் செல்கையில் அப்படி ஒரு அழகிய 'பீல்' கிடைக்கும்..!புதிதாய் செல்பவர்களுக்கு(சிங்கள மக்கள்,வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு),அடடா என்ன ஒரு முன்னேற்றம்.. என்ன ஒரு நவீனத்துவம்..என்ன ஒரு அழகிய நகரம்..என்று ஏகப்பட்ட 'என்ன ஒரு...'க்கள் மனதில் தோன்றி மறையும்.



'முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது'என்பதற்கு இதைவிட வேறு நல்ல உதாரணத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் இன்றைய காலங்களில்.. ம்ஹும் கிடைப்பதாய் இல்லை..!


கிரிக்கட்

விராட் கோஹ்லி..!|எனக்கு கோஹ்லியை பிடிக்காது|ஆணவத்தை குறைத்து, பழக்க வழக்கங்களை திருத்திக்கொண்டால் சச்சினை மிஞ்சிவிடக்கூடிய(பிடித்துவிடக்கூடிய) நாயகன்..!



ஷேவாக்(251போட்டிகளில்) 15சதமும்,சங்ககாரா(351),மஹேல ஜெயவர்த்தன(402), டில்ஷான்(264)போட்டிகளில் தலா 16 சதமும்,கலீஸ் 321 போட்டிகளில் 17 சதமும் அடித்திருக்க,விராட் கோஹ்லி வெறும் 106 போட்டிகளில் 15 செஞ்சரிகளை குவித்திருக்கிறார்..!!

ஒரு நாள் போட்டிகளில் அதிக செஞ்சரி அடித்தவர்கள் பட்டியலில் சத்தமில்லாமல் 17ஆவது இடத்துக்கு வந்துவிட்டார் விராட் கோலி!இன்னும் 7 சதம் அடித்தால் நான்காவது இடம்..!மேலும் 15 அடித்தால், சச்சினுக்கு அடுத்ததாக 2ஆவது இடத்துக்கு வந்துவிடுவார்..!

கோஹ்லிக்கு ஈக்குவலான/மேலான பெறுபேறுகளை வைத்திருப்பவர் இப்போது ஆம்லா. வெறும் 74போட்டிகளில் 11 சதம்!வேகமாக 2000,3000 ஓட்டங்களை பெற்றவராக ஆம்லா இருக்கிறார்.துடுப்பாட்ட சராசரி 55(கோஹ்லிக்கு 50)!ஆனால் கோஹ்லிக்கு ஆம்லா போட்டி கிடையாது காரணம்,அவருக்கு வயது 30 ஆகிவிட்டது.கோஹ்லிக்கு வெறும் 24 வயது!

ஆனால்,இந்த வருடம் தலா 18போட்டிகளில் விளையாடி இருந்தாலும் மிஸ்பா உல் ஹக்(808)கோஹ்லியை(607) விடஅதிக ஓட்டம் குவித்திருக்கிறார்!9அரைச்சதங்கள்,அதில் நான்கு நேற்று முடிவடைந்த மேற்கிந்திய தீவுகளுடனான 5போட்டிகள் கொண்ட தொடரில் அடிக்கப்பட்டவை!!

----------------------------------

கிரிக்கட் எந்தளவுக்கு நம் நாட்டவருக்கு 'பாஷன்' என்றால் அதற்கு நாங்கள் விளையாடிய துடுப்புக்களே பதில் சொல்லும்.


சீவப்பட்ட தென்னை மட்டை,பனை மட்டை,கட்டில் பார்,ஏதும் தட்டையான வடிவம் கொண்ட மரக்கட்டை,பாடசாலை வகுப்பறையினில் கையில் கிடைக்கும் கொப்பி புத்தகங்கள் என்று உண்மையான 'பேட்'டை விட 'பேட்'மாதிரியானவைகள் தான் பெரும்பாலும் கைகொடுத்திருக்கின்றன.



அதனால் எப்படியாவது ஒரு 'பேட்'கிடைத்துவிட்டால்,அதனை வருடக்கணக்கில் பாவித்து,கை உடைந்தால் ஆணி அடித்து,நூல் கட்டி,கீழ்பக்கமாக உடைந்து தேய்ந்தால் அதற்கும் நூல் கட்டி,சிலசமயம் 'பேட்டரி கவர்'எடுத்து கீழே தேயாத வகையில் அடித்து சிறிது காலத்தில் பேட்டில் கையே பிடிக்கமுடியாத வகையில் ஆணிகள் நிரம்பி வழியும்.

அப்படி இருந்தும் கூட அதனை வைத்து கிரிக்கட் என்னும் ஆணியை பிடிங்கினோம். இப்போதும் பிடிங்கிக்கொண்டிருக்கிறார்கள் பலர்..!!


டுவிட்டர்

ட்விட்டரில் 2250 பொலோவர்ஸ் கிடைத்திருக்கிறார்கள்..புது நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள்.புது செய்திகள்,புது விடயங்கள், புது மொக்கைகள், புது சண்டைகள், புது எதிரிகளும் கிடைத்திருக்கின்றன(றார்கள்).என்னுடைய ட்வீட்கள் குமுதம் ரிப்போட்டர் மற்றும் விகடன் வலைபாயுதேவில் வந்திருக்கிறது ஒரு சந்தோஷம். 


ட்விட்டரில் ட்வீட்டியவற்றை இங்கு பகிர விரும்பவில்லை.ட்விட்டர் பக்கத்தில் இருக்கிறது, விரும்பியவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள். ட்விட்டர் வைத்திருப்பவர்கள் 'பாலோ' பண்ணிக்கலாம்.டொனேஷன் எதுவும் கேட்கமாட்டேன்,உண்டியல் கூட குலுக்கமாட்டேன் 





விளையாட்டு அரசியல்..!

எங்கிருந்தோ வீதியின் குறுக்கே ஓடிவந்த பந்தினை,நடந்து வந்துகொண்டிருந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருள் நீண்டகாலமாய் ஒழிந்திருந்த சிறுவன் தட்டிவிட அது எதிரே இருந்த கழிவு நீர் வாய்க்காலுக்குள் சென்று விழுந்தது.அவர் அப்படியே போய்விட்டார்.


அவர் சந்தியை எட்டுவதற்குள் இரு சிறுவர்கள் ஓடிவந்தார்கள்,ஒருவர் கையில் பேட் இருந்தது.நிச்சயம் அந்த பந்துக்கு சொந்தக்காரராய் இருக்கவேண்டும்.



சிறுவன்1: டேய் எங்கடா பந்து?
சிறுவன்2: தெரியாது..நீ தானே போட்டாய்?
சிறு1: நீ தானே அடிச்சாய்?
சிறு2: நான் எங்க அடிச்சேன்..பட்'ல படாம போயிரிச்சுடா..வைட் பால்!
சிறு1:நீ ஏன் அடிக்காம விட்டே?அது உன்னோட பிழை..!
சிறு2:நீ தானே வைட் போட்டே..நீ தான் தேடு போ..

அச்சமயம் அந்த இடத்தை கடந்து சென்ற எனக்கு இன்னமும் புரியவில்லை..பந்து வீதிக்கு சென்று தொலைந்ததற்கு காரணம் பந்து போட்டவனா இல்லை அதை அடிக்காமல் விட்டவனா இல்லை அதை தட்டிவிட்ட பெரியவரா..இல்லை தட்டிவிட்டதை சொல்லாமல் வந்த நானா...என்று..!


கற்பு அவர்களுக்கு மட்டும்தானா?

நாங்களும் சொல்லுவோம்..நமக்கும் கற்பு இருக்கும்மா..!ஏன் பொண்ணுக மட்டும் தான் இதைசொல்ல முடியுமா!!


When A Boy
Accepts Your Friend Request It Means He
Accepted Your “Friendship” Not Your
“Proposal”,
When A Boy Sends You A Friend Request It
Means He Wants To Be Your Friend Not Your
Boyfriend,
When He Tag You It Means He Wants To
Share His Thoughts With You And Not That
He’s Lost In Your Thoughts,
When He Comments On Your Status It Means
He’s Just Being Social And Not Flirting,
When He Like Your Comment It Means He
Like Your Comment Not You...!

Am i right guys??



ரஹ்மானின் மேஜிக்

உண்மையில் ராஜா-ரஹ்மான் என்று எதிரெதிரே மோதுபவர்கள் வெகு சிலர் தான்.அவர்களை தவிர்த்து பெரும்பாலானோருக்கு ராஜாவையும் ரஹ்மானையும் சமனாகவே பிடித்திருக்கிறது~!ராஜா தொட்ட சில உச்சங்களை ரஹ்மானும்,ரஹ்மான் தொட்ட சில உச்சங்களை ராஜாவும் தொடமுடியாது. காரணம் 'காலம்"!!ரஹ்மான் கதை முடிந்துவிட்டது என்று எங்கிருந்தாவது கதை வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதாவது ஒரு மேஜிக்கை கொடுத்துவிடுவார் ரஹ்மான்!'Coke Studio'வுக்காக என்னா ஒரு இசை.. ரஹ்மானிடமிருந்து..!!
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்..எத்தனை தடவையோ..!!

Post Comment

Friday, August 9, 2013

'தலைவா'-விஜய்க்கு இன்னொரு ஹிட்டு..!

                          


விஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது 'தலைவா'.அரசியல் கதைகளம் கொண்ட படம்,படத்தில் விஜய் சி.எம் ஆகின்ற மாதிரியான காட்சிகள் இருக்கின்றன அதனால் தான் ஆளும் தரப்பிலிருந்து ஏகப்பட்ட குடைச்சல்கள் என்று அரசல் புரசலாக பேசப்பட்டன.தமிழகத்தில் இப்படி என்றால்,இலங்கையில் விஜய்,கமல்,ரஜனி படங்களை திரையிடவிட மாட்டோம் என்று கொழும்பில் சிங்கள அமைப்பொன்றின் எச்சரிக்கையால் வி.ஐ.பி ஷோக்கள் ரத்து செய்யப்பட்டன.இறுதி தருணம் வரையில் படம் வெளியாகுமா என்கின்ற டென்ஷன் ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் பரவிப்போயிருந்தது.2.8மில்லியன் ஹிட்ஸ் அடித்திருந்த தலைவா ட்ரெய்லர்லேயே படம் எப்படிப்பட்டது என்பது ஓரளவுக்கு புரிந்திருந்தது.சரி இயக்குனர் விஜய் புதிதாக ஏதாவது செய்திருப்பார் என்கின்ற நம்பிக்கையுடன் தியேட்டருக்கு போனோம்.

ஆரம்பமே சரபரன்னு பாம்பாயில் 1988இல் கலவரம் ஒன்னு காட்டுறாங்க. ஏற்கனவே இருந்த டான் மாதிரியான தலைவர் ஒருவரை போட்டுத்தள்ளி விட்டார்கள் என்று கதை ஆரம்பித்து மீண்டும் பாம்பாயில் வந்து முடிகிறது கதை.சத்யராஜ் மகனாக வரும் விஜய்யை சிறுவயது முதலே தன்னை விட்டு தள்ளி தூரத்தில் வளர்ட்த்துவருகிறார் 'அண்ணா'என்றழைக்கப்படும் சத்தியராஜ்.காரணம் தன்னுடைய பிரச்சனைக்குள் மனைவியை இழந்தது போல மகனையும் இழக்கக்கூடாது என்பதனால் தான் பிசினெஸ் செய்கிறேன் என்று கூறி வளர்த்துவருகிறார்.அப்படியாக அவுஸ்திரேலியாவில் டான்சராக இருந்துகொண்டு வாட்டர் சப்ளை பிசினெஸும் பார்த்து வரும் விஜய் பாம்பாய் வந்து சத்தியராஜின் இடத்தை எப்படி அடைகிறார் என்பது தான் கதை. அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த கதை தான்.ஆனால் அது சொல்லப்பட்ட விதத்தில் இயக்குனர் விஜய் தனித்து தெரிகிறார்.

பம்பாய் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு 'பாட்ஷா'வும் நாயகனும் கட்டாயம் ஞாபகம் வந்து தொலைக்கும்.ஆனால் துணிந்து அந்த கதைக்களத்தை தெரிவுசெய்து தன்னால் சுவாரசியமாக படத்தை கொடுக்க முடியும் என்பதை விஜய் நிரூபித்திருக்கிறார்.

முதல் பாதி தான் படத்தை தூக்கி நிறுத்தியது எனலாம்.காரணம் இடைவேளைக்கு பின்பு வரும் காட்சிகள் எவ்வளவு முயன்றாலும் வேறுபடுத்தி கொடுப்பது மிக கடினம் தான்.முதல் பாதி முழுவதும் அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.மிக மிக அழகான காட்சிகள். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கண்ணுக்கு விருந்து படைத்திருக்கிறார்.பாடல் காட்சிகளில் அவுஸ்திரேலிய அழகை கண்முன் நிறுத்திவிடுகிறார். சந்தானத்தின் காமெடி,அழகான பாடல்கள்,அபாரமான நடனம் என்று இடைவேளை வரை 'அடடா'போடவைத்தது படம்!நிச்சயமாக விஜய்யினதும் அமலாபாலினதும் வேறுபட்ட நடிப்பை தலைவாவில் காணக்கூடியதாக இருக்கும்.  

அங்காங்கே வைக்கப்பட்ட ட்விஸ்ட்டுகள் படத்தை சுவாரசியமாக்குகின்றன. திரைக்கதையை நம்பி இயக்குனர் விஜய் களமிறங்கியிருக்கிறார்.ஆரம்ப காட்சிகளில் வரும் சத்தியராஜ் செம அழகாக தெரிகிறார்.கிட்டத்தட்ட எண்பது தொண்ணூறுகளின் சத்தியராஜை காணமுடிந்தது.கருந்தாடி வைத்து கருப்பு தலைமுடியுடன் சண்டையிடுவார் பாருங்கள் அப்படி அபாரமாக இருக்கும்!

இது நம்ம அமலாபாலா என்று கேட்கின்ற மாதிரி அழகை மெருகேற்றி வந்திருக்கிறார்.இன்னொரு சுற்று ஆடுவதற்கு தயாராகிவிட்டது போல் தெரிகிறது.சந்தானம் விஜய்யை இமிட்டேட் செய்து கலாய்ப்பதையே தொழிலாக செய்திருக்கிறார் படத்தில்.பெரிய ஹீரோக்கள் காமெடியங்களால் கலாய்க்கப்படுவதை விரும்புவதில்லை.ஆனால் விஜய் இடம் கொடுத்திருக்கிறார் என்று சந்தானம் ஒருபேட்டியில் கூறியிருந்தார்.அது படத்தில் உண்மை என்று தெரிகிறது.அந்தளவு ஓட்டியிருக்கிறார்.சாம் அண்டர்சன் கூட இடையே வந்து கலகலப்பாக்கி செல்கிறார்.  

பாடல்களில் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா'பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும்,'தலைவா'பாடலும்,'யார் இந்த சாலையோரம்','தமிழ் பசங்க' பாடல்களும் நன்றாக வந்திருக்கின்றன.தமிழ் ஹீரோக்களில் நடனத்தில் தான் தான் பெஸ்ட் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய்.முதல் பாதியில் நடனம் தூள் பறக்கிறது.தமிழ் பசங்க பாடலில் அது உச்சம்!ஜி வி பிரகாஷ்குமார் கூட ஒரு பாடலில் வந்து நடனமாடி செல்கிறார்.மானாட மயிலாட க்ரூப்பில் இருந்து பலரும் களமிறங்கியிருக்கின்றனர்.

படத்தின் குறைகள் என்றால்,படத்தின் நீளம்.மூன்று மணி நேர படத்தை என்னதான் விறுவிறுப்பாக வைத்திருக்க முயற்சித்தாலும் ஏதாவது சில சந்தர்ப்பங்களில் நீளத்தை உணரவைத்துவிடும்.கதையை விளக்குவதில் மெதுவான காட்சிகள் சற்றே போர்.

இரண்டாம் பாதியில் வரும் கதை நமக்கு தேவர்மகன்,நாயகனில் பழக்கப்பட்ட கதை என்பதால் அது படத்துக்கு ஒரு வீக்னெஸ்.இரண்டாம் பாதியை ஹரியிடம் கொடுத்திருந்தால் படம் இன்னமும் நன்றாக வந்திருக்கும்.

இடைவேளை வரை எந்த ரசிகர்களும் ரசித்து பார்க்கக்கூடிய படம். இடைவேளைக்கு பின்பதாக விஜய்யை விரும்பாதோர் விரும்பாமல் விடுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன.ஆனால் ஏ.எல்.விஜய் தன்னால் முடிந்ததை இரண்டாம்பாதியில் செய்திருக்கிறார்.தமிழக அரசுக்கு இந்த படத்தால் என்ன பிரச்சனை என்று இன்னமும் தான் புரியவில்லை.விஜய் ரசிகர்களுக்கு படம் விருந்து..!தெரிந்த கதை-தெரிந்த கதைக்களம்-மிக மிக ரிஸ்கான பாத்திரம்-நூல் இழை பிசகினால் கூட முழுதாக கவிழ்ந்து விடக்கூடிய படம்ன்னு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தும் படத்தை இந்தளவுக்கு மெருகேற்றியிருப்பது ஏ.எல்.விஜயின் சாமர்த்தியம்!ஹாட்ஸ் ஆப்!

மொத்தத்தில்,பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போல படம் தோல்வி கிடையாது. விஜய்க்கு இன்னொரு ஹிட்டு நிச்சயம்.அது எத்தகைய வெற்றி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.இதற்கு முதல் படமான துப்பாக்கி ப்ளக்பஸ்டர் ஹிட் என்பதால் அதனுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.என்னுடைய மார்க் 67/100.
(brit tamil இணையத்துக்காக.)

Post Comment

Wednesday, July 31, 2013

'தல'அஜித் சென்றுகொண்டிருக்கும் பாதை சரி தானா?



அஜித்தினதோ,விஜய்யினதோ,சூர்யாவினதோ சரி,தியேட்டரில் ஒரு படம் ஓடுகிறதென்றால்,முக்கிய காரணம் குறிப்பிட்ட ஹீரோக்களின் ரசிகர்கள் தான். ஆனால் ஒரு படம் அதிக விலை கொடுத்து தொலைக்காட்சிகளினால் வாங்கப்படுகிறதாயின் அதற்கு மிக முக்கிய காரணம் 'பேமிலி ஆடியன்ஸ்'தான்.சனி ஞாயிறுகளில் குடும்பமாக இருந்து பார்த்து மகிழ்பவர்களை டார்கட் பண்ணி,எந்தப்படத்தை,யார்படத்தை போட்டால் வேறு சேனல்களுக்கு மாற்றாமல் மக்கள் பார்ப்பார்கள் என்று அறிந்து, தெரிந்து தான் சில படங்களின் தொலைக்காட்சி உரிமங்களுக்காக சேனல்கள் அதிக விலை தருகின்றன.அந்த உரிமங்களுக்கு செலுத்தப்பட்ட விலையை விளம்பரங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள கூடியதாக இருத்தல் வேண்டும்.கூடவே தொலைக்காட்சி ரேட்டிங்கும் கருத்தில் கொள்ளப்படும்.

சனி ஞாயிறு தினங்களாக இருக்கட்டும்,அல்லது முக்கிய பண்டிகை தினங்களாக இருக்கட்டும், குறைந்தது ஏதாவது ஒரு சேனலில் கண்டிப்பாக விஜய் படம் ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும்.விஜய் படங்களின் உரிமங்களை வாங்குவதற்கு கொடுக்கப்படும் விலையிலிருந்தே, ரசிகர்களை தாண்டி விஜய் மீதான மக்கள் விருப்பு எத்தகையது என்பது தெரிந்துவிடும். சிறுவயது குழந்தைகள் தொடக்கம் வயதானவர்கள் வரை 'எண்டர்டெய்னர்' என்கின்ற ரீதியில் விஜய் கவர்ந்திருக்கின்ற காரணத்தினால் தான் தொலைக்காட்சி உரிமங்கள் இந்தளவு விலை கொடுத்து வாங்கப்படுகின்றன.

விஜய்யின் நண்பன் 12கோடிக்கும்,துப்பாக்கி 14கோடிக்கும்,தலைவா 15 கோடிக்கும், ஜில்லா 18 கோடிக்கும்(சன் டிவி)டிவிக்களால் வாங்கப்பட்டிருக்கிறது (மாற்றான் &பில்லா2 போன்றவை 10கோடிக்கும் குறைவான தொகைக்கு தான் விலை போனது இங்கு குறிப்பிடத்தக்கது.) முருகதாஸுடன் விஜய் இணையும் அடுத்த படம் (எஸ்.ஏ.சியின் வாய் மூடப்பட்டிருக்கும் பட்சத்தில்) 20கோடிக்கு விலை போனாலும் வியப்பேதுமில்லை..!பில்லாவை விட மாற்றான் சற்று அதிக தொகைக்கு விலை போயிருக்கிறது.அஜித்தை விட தன் ரசிகர்களை தாண்டி பிறராலும் சூர்யா ரசிக்கப்படுகிறார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை தான்.சூர்யாவின் அண்மைக்கால பேச்சுக்களை கேட்டிருந்தால் புரிந்திருக்கும்,'குழந்தைகள் விரும்பி என்னை ரசிக்கிறார்கள்" என்பதை முன்னிலைப்படுத்தி பேசியிருப்பார்.விஜய்க்கு எஸ்.ஏ.சி விளம்பரதாரர் என்றால் சூர்யாவுக்கு சூர்யாவே தான் விளம்பரதாரர்.என்னதான் வெறுக்கப்பட்ட ஹீரோவாக காட்டிக்கொள்ளப்பட்டாலும்,வயது வேறுபாடின்றி,ரசிகர்களையும் தாண்டி, பலராலும் விரும்பப்படுகின்ற ஹீரோவாக விஜய் இருக்கிறார் என்பது இதன்மூலம் தெளிவு.அப்படி பலருக்கு பிடித்தமானதாக இருப்பதனாலேயே விஜய் சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கின்றார்.

அஜித்தின் கடந்த பதினைந்து படங்களிளான வில்லன்,ஆஞ்சனேயா, ஜனா,அட்டகாசம்,ஜீ, பரமசிவன், திருப்பதி, வரலாறு, ஆழ்வார்,கிரீடம்,பில்லா,ஏகன்,அசல்,மங்காத்தா,பில்லா2 ஆகிய படங்களில் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் எஞ்சுவது என்னமோ பில்லா, மங்காத்தா,வரலாறு என்று வெறும் மூன்று-நாங்கு படங்கள் தான்.நண்பனில் விஜய் எந்தளவு அண்டர்ப்ளே பண்ணினாரோ,அது போல கிரீடத்தில் அஜித் பண்ணியிருந்தார்.அஜித் ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு அது பிடிக்கவில்லை.(அழகிய தமிழ் மகனில் விஜய் நெகட்டிவ் ரோல் பண்ணியிருந்தது விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை,ஆனால் மங்காத்தா அஜித் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது!)அதற்கு பிறகு வந்த படங்களை பார்த்தால்,பில்லா கொடுத்த பிரமாண்ட வெற்றியால் ஏகன்,அசல்,மங்காத்தா,பில்லா 2 என கடந்த ஐந்து படங்களுமே அஜித்தை ஒரே போர்முலாவுக்குள் சிக்க வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தான்.அடுத்து வரும் 'ஆரம்பம்'கூட அதே மாதிரியான போர்முலா என்று தான் ஸ்டில்களை பார்க்கையில் தெரிய வருகிறது.

எத்தனை தோல்வி என்றாலும்,அது ஒரே போர்முலா என்றாலும் கூட நாங்கள் 'தல'யை ரசிப்போம் என்பது அஜித் ரசிகர்களின் குரலாக இருந்தாலும்,அதே நீலம்,கறுப்பு,வெள்ளை படங்களையும்,அதே கோர்ட்,பைக், க்ளாஸ்,நரைத்த முடி கதாபாத்திரங்காளையும் அவர் ரசிகர் தாண்டி எத்தனை பேர் ரசிக்கிறார்கள் என்று கேட்டால் மிக மிக குறைந்த அளவினராக தான் இருப்பார்கள்.அஜித் படங்களுக்கான தொலைக்காட்சி உரிமங்கள் விலை போகின்ற அளவை வைத்தே அதனை கணித்துவிடலாம்.அஜித் இயல்பாக இருக்கிறேன் பேர்வழி என்று தன்னுடைய கேரியரை பாழாக்கிக்கொள்கிறார்.42 வயது ஆனால் பார்த்தால் 50 வயது மதிக்கலாம்.நான்கு ஐந்து வயது குறைந்த விஜய்-சூர்யாவை பாருங்கள் என்ன மாதிரி உடம்பை மெயிண்டெய்ன் செய்கிறார்கள் என்பதை!இன்னமும் அவர்கள் இருவரும் 30 வருடங்கள் கூட இண்டஸ்ரியில் இருந்துவிட முடியும்.ஆனால் அஜித்தின் உடம்புக்கும்,அவரின் அக்கறை யீன்மைக்கும் இன்னமும் எத்தனை வருடங்கள் அவரால் தாக்குப்பிடிக்க முடியும்?

விஜய்-அஜித் என்று இருந்த போட்டி இப்போது மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது விஜய்-சூர்யா என்பதாக.காரணம்?சூர்யா அடுத்தடுத்து கொடுத்து வரும் வெற்றிப்படங்கள். ஹாரி,கவுதம் மேனன்,முருகதாஸ் என்று திறமையான இயக்குனர்களுடன் சேர்ந்து இயங்குவது மட்டுமல்லாமல்,சிறந்த படங்களையே தெரிவு செய்து நடிக்கிறார் சூர்யா.இது அஜித் விஜய் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.பேரழகன் தொடக்கம் சிங்கம்2 வரையிலான 15 படங்களில் வாரணம் ஆயிரம்,அயன்,சிங்கம்,கஜினி என்று ஒன்பது-பத்து படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.விஜய் நடித்த கடந்த 16 படங்களில் (கில்லி தொடக்கம் துப்பாக்கி வரை),திருப்பாச்சி, போக்கிரி,நண்பன்,கில்லி,துப்பாக்கி என்று எட்டு-ஒன்பது படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.விஜய்யும் சூர்யாவும் 8 தொடக்கம் 10 படங்கள் வெற்றியை கொடுக்க குறித்த காலப்பகுதியில் வெறும் 4 ஹிட் படங்களை கொடுத்து இருக்கும் அஜித்தை சூர்யா மெல்ல மெல்ல ஓவர்டேக் செய்வது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.அஜித் ரசிகர்கள் அப்படியே தான் இருப்பார்கள்.ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அஜித் மெல்ல மெல்ல தமிழ் இண்டஸ்ரியை விட்டு ஓரம்கட்டப்படுகிறாரோ என்று தோன்றுகிறது.!

நரைத்த முடிக்கும்,தாடிக்கும் டை அடிக்காமல்,இயல்பாக நடிக்கிறேன் பேர்வழி என்று அஜித் இப்போது நடிப்பதை அஜித் ரசிகர்கள் வேண்டுமானால் விரும்பலாம்..அஜித் ரசிகைகள் விரும்பலாம்.திரைத்துறையில் நிலைத்திருக்க வேண்டுமானால்(ஹீரோவாக!)அந்த இயல்பை மறைத்துத்தான் ஆகவேண்டும்.ரஜனிக்காந்த்க்கு கூட அது பொருந்தித்தான் ஆகிறது! கூடவே உடம்பிலும் கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும்.கமல்-ரஜனிக்கு பின்னாடி இருக்கும் அஜித்-விஜய் என்ற இருக்கும் போட்டியை உடைப்பதன் மூலம்தான் தானும் முன்ணனி நாயகனாகலாம் என்பது சூர்யா எப்போதோ போட்டுவிட்ட கணக்கு.அதற்கு பலியாகிக் கொண்டிருப்பது அஜித் தான்! ஒரு கால கட்டத்தில் அது விஜய்யாக இருந்தது.ஆதி-குருவி-வில்லு-சுறா என்று தொடர்ச்சியான காவியங்கள் விஜய் கொடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் விஜய் தான் ஓரம்கட்டப்படுவார் என்று நினைத்திருந்தேன்.காரணம் இணைய எதிர்ப்பும் விஜய்க்கே எப்போதும் அதிகமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் காவலன்'னில் தன்னை மாற்றிக்கொண்ட விஜய் வேலாயுதம்-நண்பன்-துப்பாக்கி என்று வேறுபட்ட ஹிட் படங்களை கொடுத்து அந்த ஆபத்திலிருந்து வெளியேறிக்கொண்டார்.தலைவா-ஜில்லா சொதப்பினாலும் அதற்கடுத்து முருகதாஸ் கூட படம் பண்ணுகிறார் விஜய்.அது நிச்சயம் ஹிட் அடிக்கும்.

2008-2013 வரையிலான ஆறு வருட காலப்பகுதியில் (ஆரம்பம் அடுத்த பொங்கல் தான்)வெறும் நான்கு படங்களில் மட்டுமே அஜித்தினால் நடிக்க முடிந்திருக்கிறது!இத்தனைக்கும் வருடக் கணக்கில் படம் பண்ணும் ஷங்கர்,பாலாவுடன் கூட இணைந்திருக்கவில்லை!அதில் ஒரு ஹிட் மூன்று தோல்வி!இதே காலப்பகுதியில் சூர்யா ஏழு படங்களில் நடித்திருக்கிறார்,அதில் ஆதவன் மட்டும் தான் சரியாக கல்லா கட்டவில்லை.மாற்றான் தோல்வி கிடையாது.இதே ஆறு வருட காலப் பகுதியில் விஜய் 8 படங்களில் நடித்திருக்கிறார்,அதில் வில்லு&சுறா தோல்விப்படம். காவலனில் இருந்து துப்பாக்கி வரை தொடர்ச்சியான ஹிட் படங்கள்.எட்டாவது படம் தலைவா அடுத்த 9 ஆம்தேதி ரிலீஸ் ஆகிறது.ஆக கடந்த ஆறு வருடங்களில் வெறும் ஒரே ஒரு ஹிட் படத்தை மட்டுமே கொடுத்திருக்கும் அஜித் ஏதோ ஒரு தப்பான வழியில் சென்று கொண்டிருக்கிறார் என்பதை சிற்றறிவு உள்ள யாராலும் புரிந்துகொள்ள முடியும்!இல்லை தல எப்படி இருந்தாலும் ரசிப்போம் என்கிறீர்களா?நீங்கள் தான் 'தலை'க்கு கூடவே இருந்து ஆப்பு செருகுகின்றீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்!

பாஸ் என்கின்ற பாஸ்கரனில் 'அந்த கூலிங் க்ளாசை கழற்றி எறியடா"என்று ஆர்யாவுக்கு சந்தானம் சொல்வதை போல அஜித்க்கு இப்போது யாராவது அந்தவேலையை செய்தாகவேண்டும்.ஏகன்-பில்லா டைப் படங்களிலிருந்தும் அந்த காஸ்டியூம்களில் இருந்தும் வெளியே வந்து வேறுபட்ட படங்கள் பண்ண வேண்டும்.முதலில் விஷ்ணுவரதனுடன் எனிமேல் எந்த படங்களிலும் அஜித் ஒப்பந்தம் ஆகிவிடாத மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முன்ணனியில் இருப்பது விஜய் தான்.அஜித் கூட அங்காங்கே கொடுத்து வருகிறார்.ஆனால் சூர்யா எந்த புது இயக்குனர்களுக்குமே வாய்ப்பு கொடுக்காது தங்களை வெற்றிகரமான இயக்குனர்கள் என்று நிரூபித்த இயக்குனர்களிடம் மட்டுமே படம் பண்ணுகிறார்.இத்தனை ஹிட் கொடுத்த பின்பும் ஒரு Safe Zone'இல் இருந்துகொண்டு படம் பண்ணும் சூர்யாவை அஜித் சிறிது காலம் பொலோ செய்யலாம். முன்ணனி இயக்குனர்களுடன் கை கோர்க்கலாம்.அது வித்தியாசமான படங்களை அஜித் தருவதற்கும்,மீண்டு வருவதற்கும் வழிவகுக்கும்.

இன்னமும் டீப்பாக சொல்வதானால்,அஜித் தொப்பையை குறைக்கலாம்.உப்பிப்போயிருக்கும் முகத்தை சரி பண்ணலாம்,ஊதிப் போயிருக்கும் உடம்பை நினைத்தால் குறைக்கலாம்.பாடல்களிலும் சரி,படத்திலும் சரி தேவை இல்லாமல் நடப்பதை விடுத்து,பாடல்களில் ஹீரோயினையும்,க்ரூப் டான்சர்களையுமே எப்போதும் ஆடவிடாது,தலை கொஞ்சமாவது மூமெண்ட்ஸ் போடலாம்.ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடிக்கிறார் ,ஹெலிகாப்டரில் பறக்கிறார் என்றெல்லாம் செய்தி வரும்போது இது ஒரு மேட்டரே கிடையாது.நினைத்தால் அதை கூட செய்யலாம்.அக்கறை எடுத்து ஒரு வருடத்தில் ஒரு படமேனும் ரிலீஸ் பண்ணலாம். வித்தியாசமான படங்களை தெரிவு செய்யலாம்.'தல' கேட்டால் எந்த முன்ணனி இயக்குனர் தான் முடியாது என்று சொல்லப்போகிறார்கள்?

ஒரு முன்ணனி நாயகனான அஜித்,கடந்த ஆறு வருடங்களில் ஒரே ஒரு வெற்றி படம் மட்டுமே கொடுத்திருக்கிறார் என்பதை கேட்கும்போது, அஜித்துக்கு 'Something is wrong Some where" என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா?அந்த 'சம்திங்' என்பதற்குள் பில்லா டைப் படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களாகளோ அல்லது அத்தகைய கதைகளையே அஜித்திடம் கொண்டு செல்லும் இயக்குனர்களோ இல்லை அத்தகைய கதைகளினையே தேர்ந்தெடுத்து நடிக்கும் அஜித் கூட உள்ளடங்கி இருக்கலாம்!ஏன் இவர்கள் அனைவருமாக கூட இருக்கலாம். எது எப்படியோ,தன் தலை மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதனை எவ்வளவு சீக்கிரம் உணர்ந்து கொள்கிறாரோ அவ்வளவு சீக்கிரம் அது அஜித் மீண்டுவர வழிசமைக்கும்.அஜித் இன்னமும் எத்தனை வருடங்கள் தமிழ் இண்டஸ்ரியில் இருப்பார் என்கின்ற தலைவிதியை தீர்மானிப்பதாக கூட அது அமையலாம்..!


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...